Tuesday, December 21, 2010

தமிழ்ப்பார் இழந்துவிட்ட தமிழ்மறைக் காவலர்

தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் தனது 96 அகவையில் நேற்று (20ம் திகதி) கொழும்பில் காலமானார்.

1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.1965இல் தமிழரசுக் கட்சியில் கிளிநொச்சியில் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

திருக்குறளை தமிழ்மறை என்று தமிழ்முழக்கம் செய்து; தமிழ்மறைக் கழகத்தை அமைத்து; திருக்குறள் மாநாடுகளை நடத்தி தமிழ்ப்பாரை வளப்படுத்திய பேரறிஞர். அரசியலினூடாக தமிழை செம்மைப்படுத்த அயராது உழைத்த அருமையுடையவர். கிளிநொச்சி மண்ணில் பாடசாலைகள் மலர ஏதுவாக இருந்து அங்கு கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்மறம் படைத்தவர்.

திரு.கா.பொ.இரத்தினம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இவர்; தமிழ்மறைக் காவலர் என்று அறிஞர்களால் போற்றப்பட்டார்.மேலும் திருக்குறள் செல்வர்', 'குறள் ஆய்வுச் செம்மல்', 'செந்தமிழ்க் கலைமணி', 'உலகத் தமிழர் செம்மல்'
போன்ற பட்டங்களுக்கு பொருளாக விளங்கினார்.

"உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தோடு பல ஆண்டு காலமாக நெருக்கமான தொடர்புகளைப் பேணியதோடு மட்டுமல்லாது அதன் வளர்ச்சியிலும் வளத்திலும் மிகுந்த அக்கறை கொண்டு இயங்கி வந்த திரு கா. பொ. இரத்தினம் அவர்கள் நமது உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் 08-01-1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப விழாவில் வாழ்த்துரை வழங்கி அதன் தோற்றத்தை அப்படியே ஆசிர்வதித்து வாழ்த்தியவர்.அதோடு மட்டுமல்லாது தொடர்ச்சியாக நமது இயக்கத்தின் வளர்ச்சியிலே கண்ணும் கருத்துமாக இருந்தவர்" என்று உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த இப்பெரியாரின் இழப்பை உலகத் தமிழரின் பேரிழப்பாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பதிவுசெய்துள்ளது அருமை மகன் இழந்த துயரிலுள்ள தமிழ்த்தாய்க்கு ஆறுதலை அளித்திருக்கும் என்பது திண்ணமாகும்.

பேரிழப்பில் வாடிநிற்கும் தமிழுலகின் வேண்டுதல் யாதாயின் ஐயாவின் வழியில் அரசியலில் உள்ளோர் தமிழ்மொழியை ஆய்ந்தறிந்து தமிழ்ப்பணிக்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதேயாகும்.

Saturday, September 4, 2010

சென்னை மாநகரின் வானும்(படமும்)ஒரு பாடமும்

சென்னை மாநகரின் வானை வானிலிருந்து பார்த்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று எண்ணினேன். விமானநிலையத்தில் இருக்கையை உறுதிப்படுத்துபவரிடம் சாளரம் அருகே இருக்கை வேண்டுமெனக் கேட்டேன். சாளரத்துக்கு அருகாமையில் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டமையினால் எனது அலைபேசியின் உதவியுடன் சென்னை மாநகரின் வானைப் படம் பிடித்துக் கொண்டேன்.












பயணிகளின் அலைபேசிகள் சமிஞ்ஞை பயன்பாட்டில் இருந்தால் விமானிகள் கட்டுப்பாட்டு அறையுடன் பேணுகின்ற தொலைத்தொடர்ப்பு அலைவரிசைகளில் இடைஞ்சல்களை ஏற்படுத்தும் என்பதால் சமிஞ்ஞைப் பயன்பாட்டிலிருந்து அலைபேசியைத் துண்டித்திருந்தேன்.

இப்படித்தான், ஒருமுறை சத்திரசிகிச்சை அறையினுள் சத்திரசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சமிஞ்ஞை அலைகளால் இயங்கும் கருவியொன்று எவரோ ஒருவர் அலைபேசி பயன்படுத்தியதன் காரணமாக நின்றுவிட்டது. எவ்வளவு முயன்றும் அலைபேசியை பாவிப்பவரைக் கண்டுகொள்ள முடியாமல் போனதால், சமிஞ்ஞை அலைகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இடைஞ்சல் காரணமாக சத்திரசிகிச்சைக் கருவியை மீண்டும் இயக்கமுடியவில்லை. சத்திரசிகிச்சையும் பரிதாபகரமாக தோல்வியில் முடிந்து நோயாளரின் உயிரைக் காவுகொண்டது.

எனவே; சென்னை மாநகரின் வான் காட்சியைக் கண்டு இன்புற்ற உறவுகளே, மருத்துவமனைகளுக்குள் நுழையும்போது உங்கள் அலைபேசியை(கைபேசியை) சமிஞ்ஞை தொடர்பிலிருந்து துண்டித்துவிடுங்கள். நோயாளர்களின் உயிருக்கு தீங்குவிளைவித்துவிடாதீர்.
அதுபோல் விமானத்திலும் சமிஞ்ஞை தொடர்பிலிருந்து அலைபேசிகளைத் துண்டிப்பது உங்களின் உயிரையும் உங்களுடன் பயணிக்கும் சகபயணிகளின் உயிரையும் பாதுகாக்கும் என்பதில் நினைவில் கொள்க.

சென்னை மாநகரின் வானும்(படமும்) ஒரு பாடமும் என்ற தலைப்பு மெத்தச் சரிதானே?

Wednesday, August 4, 2010

யாழ்.போதனா வைத்தியசாலையும் தலைகுனியவேண்டிய தர்மவான்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயிற்சியின் நிமித்தம் பத்துநாட்கள் போயிற்று வந்தேன். மருத்துவ மாணவனாக என் வாழ்நாளில் மகிழ்வோடு பணியாற்றி அனுபவக் கல்வியை அதிகளவு நுகரும் பேறுபெற்ற நாட்கள் என்று இந்தப் பத்துநாட்களையும் சொல்லலாம். சத்திரசிகிச்சைப் பிரிவில் பயிற்சிக்கு நின்றமையால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவை ஆதாரமாகக்கொண்டு இங்கு என் கட்டுரை வைத்தியசாலையை ஆய்ந்து செல்கின்றது.

மருத்துவர் திரு.ரவிராஜ் ஐயாவின் சத்திரசிகிச்சை நோயாளர் படுக்கைத்தொகுதி ஓரளவுக்கு சிறப்பாகப் பேணப்படுகின்றது.புதிதாக கட்டி,திருத்தி அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி என்பதை பார்க்கும்போது புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.ஆனால் ஏனைய சத்திரசிகிச்சைக்குரிய பிரிவு நோயாளர் படுக்கைத் தொகுதிகள் தரத்தில் "சாதரணம்" என்றுகூட முத்திரை குத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஒருசில படுக்கைத்தொகுதிகள் புதிதாக நுழைபவர்களை மயக்கிவிடும் துர்மணத்துடன் விளங்குகின்றன! இவற்றின் மணங்குணங்களுக்கு இசைவாக்கமடைய இருநாட்கள் பிடித்துவிட்டது எனக்கு! ஒருசில நோயாளர் படுக்கைத்தொகுதிகள் நோயளர்களின் மலசலகழிவு கூடத்துடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. அவை உரியமுறையில் கழுவப்படுகின்றன என்றால் சரியான விடையில்லை!

சிஸ்டோஸ்கோப்பி(cystoscopy) என்ற மூத்திரப்பையை ஒளியியற்கருவி கொண்டு காணொளியில் அவதானிக்கும் மருத்துவப்பரிசோதனையை பொதுவாக அதில் நிபுணத்துவமுடைய மருத்துவரே பார்ப்பது முறை! இதில் நிபுணத்துவமுள்ள மருத்துவரை யூரோலோஜிஸ்ட்(urologist) எனப்படுவர். ஆனால் அங்கு பொதுசத்திரசிகிச்சை மருத்துவரே இந்தமருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுகின்றார். காரணம் வினாவியபோது யூரோலோஜிஸ்ட் இல்லையாம்! ஒரு பேச்சுவாக்கில் செவிவழியாகப் பெற்றுக் கொண்ட செய்தி மருத்துவர்களுக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றதாம்! ஆனால் பாராட்டப்பட வேண்டிய விடயம் யாதெனில் குறைந்த வளங்களைக் கொண்டு சிறந்தமுறையில் உச்ச பயனை நோயாளர்களுக்கு வழங்கும் வைத்தியசாலை நிர்வாகத்தைத்தான்! தற்போது பணியாற்றும் சத்திரசிகிச்சை மருத்துவர்களை பார்த்தபோது அவர்கள் படுகின்ற வேலைப்பளுவையும் அதற்கு மத்தியில் சேவைநோக்கில் செயற்படும் அவர்களின் உழைப்பையும் யாழ்சமூகம் மெய்ச்சிப் பாராட்ட வேண்டும்.
மருத்துவ மாணவர்களுக்கு போதிக்கவேண்டிய கடமையுணர்வையும் பெரும்பாலும் அனைத்து வைத்தியர்களிடமும் காணக்கூடியதாக இருந்தது. யாழ் மண்ணில் கல்வியின் வளம் மங்காமைக்கு இந்த சேவைநோக்கம் எல்லா ஆசிரியரிடமும் பொதுவாக இயல்பில் குடிகொண்டிருப்பதால் என்றே எண்ணத்தோன்றியது! உண்மையும் தான்!

காட்டுபிராண்டித்தனமாக வெறிபிடித்து கைகளில் இருந்த துப்பாக்கிகள் கொண்டு மருத்துவனை வைத்தியர்களையும் தாதியர்களையும் சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவத்தினரின் பாவத்தைப் போக்குவதற்கு காசியில் போய் மூழ்காது இந்திய அரசு CT SCAN இயந்திரத்தை நன்கொடையாக அளித்துள்ளது. காசியில் போய் மூழ்கினாலும் போகமுடியாத பாவம் என்பதை உணர்ந்ததால்த்தானோ இந்த நன்கொடை என்ற எண்ணத்தை ஊட்டுகின்றது CT SCAN அறைக்கு அருகாமையிலிருக்கும் கொல்லப்பட்ட மருத்துவப் பணியாளர்களின் உருவப்படங்கள்! சரி இந்தப் பாவத்துக்கு பரிகாரம் தேடியாயிற்று! சில ஆண்டுகளுக்கு முன் செய்த பாவங்களுக்கு...........உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
நான் யாழ் போதனா வைத்தியசாலை மட்டுமல்ல,சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை,களுபோவில வைத்தியசாலை என்பவற்றையும் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஏனைய இரு வைத்தியசாலைகளையும் வைத்தியசாலைகள் என்றே அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கு சிறப்பான கட்டிடத்தொகுதி, நோயாளர் படுக்கைத்தொகுதிகள்,மருத்துகள் என்று சிறப்பாகப் பேணப்படுகின்றன!

ஆனால் யாழ்.போதனா வைத்தியசாலையின் தொண்ணூறு வீதமான பகுதிகள் பாழடைந்த வீட்டையே நினைவுபடுத்துகின்றன! ஒரு கட்டிடத்தொகுதி இப்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. மருந்துகளுக்குப் பெருந்தட்டுப்பாடு! வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைதருகின்ற நோயாளர்களுக்கு "வெளியில் வாங்குங்கள்" என்பது மருத்துவர்கள் மனமில்லாது சொல்லுகின்ற வார்த்தை! பல நோயாளிகள் படுத்திருப்பதற்கு கட்டில்கள் பற்றாக்குறையால் நடைபாதையில் பாய்விரித்துவிட்டு படுக்கவைக்கப்பட்டுள்ளனர்!
ஒரு மருத்துவர் மருந்தொன்றை எழுதி வைத்தியசாலை மருந்தகத்தில் வாங்குப்படி பணித்தார். பதினைந்து நிமிடங்கள் கழித்து அதே நோயாளி மீட்டும் வந்து "ஐயா இந்த மருந்து வைத்தியசாலை மருந்தகத்தில் இல்லையாம்" என்றார். மருந்துவருக்கு வந்தது கோபம்! "இந்த மருந்துகூட இல்லாவிட்டால் பிறகு எதுக்கு வைத்தியசாலையை நடத்த வேண்டும்" என்று சினந்து கொண்டார். வெளியில் வாங்கும்படி பணித்தார். இதுதான் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருந்தகத்தின் நிலை!
*மருந்துகள் பற்றாக்குறை!
*நோயாளர் படுக்கைத்தொகுதிகளில் உள்ள கட்டில்கள் பற்றாக்குறை!
*மருத்துவர் பற்றாக்குறை!
*கட்டிடத்தொகுதிகள் பாழடைந்த வீடுகள்போல் உள்ளன
இதுதான் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நிலை!

என்னோடு பயிற்சிகளில் ஈடுபட்ட மாணவர் "தான் சிறுவயதில் இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது.இப்போதும் இப்படித்தான் உள்ளது" என்று என்னிடம் கூறினார் நான் மனம் வெந்தபோது!

இது இப்படியிருக்க நல்லூர் கோயில்,இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம் உட்பட ஒருசில ஆலயங்களுக்கு செல்லும் பேறுகிட்டியது. நல்லூர் ஆலயத்தில் ஒருபக்கம் கோபுரம் கட்டி திருத்த வேலைகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. இணுவில் பரராசசேகரப்பிள்ளையாருக்கு சென்றபோது பணவளமுள்ள ஆலயம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.நான் சென்ற ஏனைய ஆலயங்களில் பெரும்பாலானவை புதிய கோபுரங்கள் எழுப்பப்பட்டவையாகவோ அல்லது இடித்துக் கட்டப்பட்டவையாகவோ அல்லது புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டவையாகவோ காணப்பட்டன! எல்லாம் வெளிநாட்டுப் பணம் என்பதை விசாரித்தபோது விளங்கியது! அந்த வெளிநாட்டுப் பணத்தில் ஒருசிறு பங்கையேனும் யாழ்.போதனா வைத்தியசாலையை வளப்படுத்த செலவழித்தால் எவ்வளவு நன்மை பயற்கும்! ஏழைகள் தமக்குரிய மருத்துகளை வைத்தியசாலையிலையே பெற்றுக் கொள்வர். வைத்தியசாலையும் சிறந்தமுறையில் தனது பணியை சமூகத்துக்கு செய்யக்கூடியதாக இருக்கும்!

அரசாங்கம் செய்யவேண்டியது என்று ஒருசிலர் சொல்வர்! இப்போது கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள ஒருசில கட்டிடத்தொகுதிகள் நெதர்லாந்து நாட்டு அரசாங்கக்கொடையால் விளைந்தவை! எனவே நெதலாந்து நாடே உதவிக்கரம் நீட்டியுள்ளபோது........எம்மவர்கள் ஏன் உதவக்கூடாது? அரசாங்கம் உதவ வேண்டுமென்று யாழில் உள்ள எம்முறவுகளை கவனிப்பாரற்று கைவிடுவது முறையா? இந்து கலாச்சாரத் திணைக்களம் / அமைச்சு ( சைவப் பண்பாட்டு அமைச்சு / திணைக்களம் என்பதே சரியான பெயரீடு) பார்க்கவேண்டிய வேலையை வெளிநாட்டில் இருந்து நம்மவர்கள் பணம் அனுப்பி பார்க்கும்போது சுகாதார அமைச்சு பார்க்கவேண்டிய வேலையை ஏன் பார்க்கக்கூடாது?
பயனடையப்போவது யாழில் உள்ள ஏழைமக்களே!தமிழ் அரசியல்வாதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையை வளப்படுத்த உரியமுறையில் செயற்படுவார்கள் என்றால் ஏழை நோயாளர்கள் செய்த புண்ணியம் என்றே சொல்லலாம்!

யாழில் உள்ள பணங்கொழுத்துப் போயுள்ள ஆலயங்கள்கூட இந்தப் பணியில் ஈடுபடலாம்! இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் பணத்தில் வளர அருகில் உள்ள செகராசசேகரப் பிள்ளையார் ஏழ்மையில் வாடுகிறார். செகராசசேகருக்கு பண உதவிசெய்து வளர்த்துவிட்டால் பிறகு பரராசசேகரப் பிள்ளையாருக்கு மதிப்புக் குறைந்துவிடுமே என்ற ஏக்கவுணர்வில் அவரை ஏழையாகவே கைவிட்டுள்ளனர் பரராசசேகரரின் பக்தர்கள்! இது இப்படியிருக்கையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உதவமுன் வாருங்கள் என்று கேட்பது கொஞ்சம் "தினாவெட்டாகத்தான்" உள்ளது!!!!

தெகிவளை ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு பரல் பலராலாக ஊற்றிய பாலால் தெகிவளை கழிவுநீர் வெண்ணிறமாய் காட்சியளித்தது என்று அன்பர்கள் சிலர் நவின்றனர். வெளிநாடுகளில் இருந்து பரல் பரலாக நேர்த்திக்கடனைத் தீர்க்க பால் ஊற்றும்படி கட்டளையாம்! உள்ளூர்வாசிகளும் தாம் சளைத்தவர்களில்லை என்பதை இந்தப்பால் ஊற்றலில் காட்டுவார்களாம்! நான் இறைவனுக்கு பால் ஊற்றி அபிடேகம் செய்வதை எதிர்க்கும் அறிவற்ற நாத்தீகவாதியல்ல! பகுத்தறிவுள்ள இறைநம்பிக்கையாளன். இறைவனுக்கு அபிடேகத்தின்போது ஒருகுடமோ அன்றி மூன்று குடமோ அல்லது ஒன்பது குடமோ பால் ஊற்றுவதில் தவறில்லை! ஆனால் "பரல் பரலாக" பால் ஊற்றி ஒரு பிரதேசத்தின் கழிவுநீரையே வெண்ணிறமாக்கும் விசயத்தில் உடன்பாடில்லை! ஏழைச் சைவர்களுக்கு உதவ முன்வந்தால் அதுவே மிகச்சிறந்த சைவப்பணி! இறைவனை மகிழ்விக்கும் பணி!

சிவபூமி அறக்கட்டளை நிதியம் புற்றுநோயளர் பிரிவில் பூங்கா அமைத்து கொடுத்துள்ளது. அந்தப் பூங்கா புற்றுநோயாளர்களுக்கு மட்டுமன்றி வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளில் உள்ள நோயாளர்களும் பயன்படுத்தும் இடமாக திகழ்கின்றது. சிவபூமி அறக்கட்டளை நிதியம் தன்னால் இயன்றுள்ள அளவுக்கு உதவியிருக்கையில்.....வெளிநாட்டில் இருந்து குடும்ப பணபலத்தை நிறுபிக்க பெருவிழா ஆலயங்களில் எடுக்கும் செல்வந்தர்கள் சிந்தித்தால்.......தமிழுணர்வுள்ளோர் முயன்றால் யாழ்.போதனா வைத்தியசாலையை மருத்துவமனைகளுக்கு முன்னுதாரணமான மருத்துவமனையாக மாற்றியமைக்க முடியது. அதுமட்டுமல்ல ஏனைய தமிழ் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளையும் வளப்படுத்த புலம்பெயர்ந்தோர் முன்வருவார்களா?

யாழ் போதனா வைத்தியசாலையின் தரத்தைவிட தாழ்வான தரத்திலேயே ஏனைய தமிழ் மாவட்ட பொது மருத்துவமனைகள் இருக்கும் என்பதை எவரும் உய்த்துணரலாம். எனவே தமிழ் மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை உரியமுறையில் வளப்படுத்த தமிழ்ச் சமூகம் முன்வருமா?தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழியுண்டு! MRI போன்ற நவீனவசதிகள் கொண்ட பொது மருத்துவமனைகளை எமது மாவட்டங்களில் எம்மவர்கள் ஏற்படுத்துவார்களா?இதற்கென ஒரு நிதியத்தை தமிழுணர்வாளர்கள் செயற்படுத்துவார்களா? மருத்துவப் பணி இறைபணிகளில் சிறந்த பணி என்பதை அன்பர்கள் உணர்ந்து கொள்வார்களா?

Wednesday, May 12, 2010

பெரியாரை அசிங்கப்படுத்திய விடுதலை பத்திரிக்கை

பெரியார் கடவுள் இல்லை என்று நாத்தீகம் பேசியதில் எந்தவிதமான உடன்பாடும் எனக்கில்லை. சாதி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கிய பெரியாரின் மேல் மரியாதை என்றும் உண்டு. பெரியார் சொன்னதெல்லாம் சரியானது என்ற கருத்து இருக்குமென்றால் "எங்களை அறியாமலே பெரியாரைக் கடவுளாய் ஏற்று பெரியார் மதம்" என்று மதநம்பிக்கைக்கு உரியவராகிவிடுகிறோம் !பெரியாரும் மனிதரே என்று கருதி, அவரிடம் பிழையான கருத்துகள் இருந்தன என்பதை பெருந்தன்மையுடன் ஏற்று, அவர் காட்டியவற்றில் நல்லவற்றை எடுத்து நல்லவழியில் நடப்பர் மேன்மக்கள்!

சரி விசயத்துக்கு வருவோம்;
பெரியாரின் புகழ்பரப்பும் பெரியாரின் கட்சியால் நடத்தப்படும் விடுதலை பத்திரிக்கையில் மயிலாடன் என்பவரின் எழுத்தில் "தந்தை பெரியாரின் சீடர் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் இருப்பதால், இந்த அசிங்கமான தமிழ் வருடப் பிறப்புக்குக் கல்தா கொடுத்து, தைமுதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அறிவித்து.....(12-5-2010) " என்று கருணையில்லா நிதியின் புகழ்பாடப்பட்டிருப்பது பெரியாருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தும் விடயமல்லவா?

விடுதலை பத்திரிக்கை கருணையில்லா நிதியை பெரியாரின் சீடர் என்று புகழ்கின்றது.

இலங்கையில் தமிழன்னை இரத்தம் சிந்தி வாடி வதங்கி அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தபோது, "காலைக்கும் மதியத்துக்கும்" இடையில் உண்ணாவிரதம் இருந்து பொய்யுரைத்து இன அழிவை வேடிக்கை பார்த்து அதற்கு ஒத்தாசையும் வழங்கிய கருணையில்லா நிதியும் அவரது வால் வீரமணியரும் தமிழர் தலைவர்கள் என்றோ.........பெரியாரின் சீடர்கள் என்றோ சொல்வதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்!!!!!!

விடுதலை தமிழரை விழிப்படையச் செய்யவில்லை! தமிழரைக் குருட்டாக்கி வீரமணியரையும் கருணையில்லா நிதியையும் புகழச் செய்கின்றது!!!! இப்படித்தான் சுயநலத்திற்காய் நாத்தீகத்தையும் பரப்புகிறார்கள் எஎன்பதை தமிழர்கள் உணரட்டும்!

Monday, April 26, 2010

பார்வதி அம்மையாரை அவமானப்படுத்திய வீரமணியரும் தமிழ் ஓவியாவும்

பார்வதி தாய் கருணையில்லா நிதியின் உதவியைப் பெற்று தமிழகம் வரவேண்டுமா? தமிழ் ஒவியாவின் கேவலம்!


தமிழ் ஒவியா அவர்களே,

"தாயார் பார்வதி அம்மையாரை கலைஞர் உதவியுடன் வாழ வைப்போம்" என்பது உங்கள் (வீரமணியரின்)கருத்தென அறிந்து தமிழரின் நிலையென்னி சிரிப்பாய் சிரிக்க வேண்டியதாயிற்று!

அவர் வைகோ, நெடுமாறனின் உதவியுடன் வாழக்கூடாது என்றா கலைஞர் திருப்பி அனுப்பிவைத்தார்? யாருக்கும் சொல்லாதது வேறுவிடயம்! தமிழக காவல்த்துறைக்கு தெரிந்தது, காவற்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வருக்கும் தெரியாது என்றால் யாரின் காதில் யார் பூச்சுற்றுவது?

கலைஞருக்கு வைகோ, நெடுமாறன் நல்ல பெயர் எடுப்பது பிடிக்கவில்லை. அவர்களுக்கு திருமாவளவன் போல் இலங்கைபோகும் "பாதுகாப்பு" இருக்கவில்லை. எனவே; இலங்கை வந்து உல்டா விட்ட திருமாவளவனை சேர்ப்பதில் உடன்பாடில்லை. முடிவில், கலைஞருக்கு ஜெயலலிதாவின் கடிதம் உதவியது. திருமாவளவனுக்கு "யாருக்கும் சொல்லவில்லையே?" என்ற கேள்வி உதவியது! பழ.நெடுமாறனுக்கும் வைக்கோவுக்கும் ஏமாற்றம்! பாவம்........வயதுபோன பாட்டிக்கு உபத்திரவம்!!!!!!!


இப்ப மட்டும் பெரியார் இருந்திருந்தால், கலைஞரையும் ஜெயலலிதாவின் முந்தானைக்குள் இருந்துவிட்டு, கலைஞரின் சால்வைக்குள் ஒழிந்து கொண்ட வீரமணியரையும் துரத்தித்துரத்தி அடித்திருப்பார் அவரது பொல்லைக் கொண்டு!!!!

தமிழக காவற்துறைக்கு தெரிந்தது தமிழக முதல்வருக்கு தெரியாவிட்டால், அடா அப்படியொரு முதல்வர் தமிழ்நாட்டுக்கு இருக்கத்தான் வேண்டுமா? வெட்கம்! வெட்கம்!வெட்கம்!

உங்கட தலைவர் (அதுதான் வீரமணி) தமிழர் தலைவர் என்றால் எவருக்கும் சோரம் போகாமல் வாழ்ந்து இராஜ இராஜ சோழனை அறியாத உலகத்தாருக்கு, இப்படித்தான் சோழன் வாழ்ந்தான் என்றும், இதுதான் சோழ சாம்ராச்சியத்தின் மாண்பு என்றும், அறிவித்த ஈழத்துச் சோழனை என்னென்று சொல்லுவீர்?

பெரியாரும் சாதியை ஒழிக்கிறேன் என்று சமயத்தை ஒழிக்கப்போய் திராவிட ஆதீக்கமுடைய சைவத்தையும் தென்கலை வைணவத்தையும் புறக்கணித்து இன்று வட ஆதீக்கமுடைய சுமார்த்தத்தை இந்து என்ற பெயரில் தமிழகத்தில் காலூன்ற வழிசமைத்த பிழையான வழிநடத்தல், பிறப்புச் சான்றிதழில் சாதியைப் பதியும் இழிவான நிலையை உருவாக்கி, காலத்தால் மறைக்க முடியாது சாதியை உருவாக்கிவிட்டமை ஆகிய பல பிழைகள் விட்டார்! அதை நீவிர் ஏற்கமாட்டீர்!

வேதநெறியருக்கு வேதம்போல் ,கிருத்தவருக்கு பைபிள்போல், இஸ்லாமியருக்கு குரான்போல், உங்களுக்கு பெரியார்! அவர்கள் அவரவர் மதத்து நூல்களில் இருக்கும் பிழைகளை ஏற்கார்! நீவிரும் ஏற்கீர்! கிருத்தவருக்கு யேசுநாதர்போல் இஸ்லாமியருக்கு நபிபோல், வேதநெறியருக்கு பல்வேறு மகான்கள்போல், உங்களுக்குப் பெரியார்! எனவே பெரியார் மதம் என்று உங்களை அடையாளப்படுத்துவதில் தவறில்லைத்தானே?

பெரியாரை விமர்சனங்களுக்கு அப்பால் திராவிடத்துக்காய் உழைத்த போராளி என்று ஏற்றுக் கொள்கிறேன். எனவே, தமிழர் தலைவர் என்று வீரமணியையும், கலைஞரையும் அழைத்து அந்தப் போராளியைக் கேவலப்படுத்தாதீர்!

சமய பாடம் ( ஒவ்வொருவரும் அவரவர் சமயத்தை கற்ற முடியும் பௌத்த சமய நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையில்) புகட்டாமல் விட்டதால் இன்று தென்னாட்டில் தமிழ்மொழியில் 14 ஆதார நூல்களைக் கொண்டு எழுந்த சைவ சித்தாந்த சைவநெறியையும், வைணவ தென்கலையையும் தமிழர் அறியாதுபோகவே, குமுதம் பக்தி, ஆனந்தவிகடனின் சக்தி, ஆன்மீகம், திரிசக்தி என்று சுமார்த்த வைதீக கொள்கையை இந்துமதமாகப் போதிக்கும் சமய ஊடகங்கள் விருட்சமாகி அவற்றின் கொள்கைகளை தமிழகத்தில் ஊடுருவ வழிசமைத்துவிட்டத்தை இன்றல்ல என்றுமே நீவிர் ஒப்புக்கொள்ளமாட்டீர்!!!!

தமிழில் உருவாகிய திருமுறைகளையோ, திருப்பாசுரங்களையோ அறியாத "சமஸ்கிருத மந்திரங்களை மட்டுமே அறிந்து கொண்ட" சமுதாயத்தை தமிழகத்தில் தோற்றுவித்தது தங்களது பிழையான வழிநடத்தல்களே என்பதையும் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்!!!!

ஆனால் ஒன்று, மதசார்பின்மை என்பது ஒரு மதத்தை எதிர்ப்பது அல்ல! எல்லா மதங்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது!!!!

ஐயா, வீபூதி பூசி சைவவிழாக்களில் கலந்துகொள்ளமாட்டீர்! ஆனால், தொப்பி அணிந்து இஸ்லாமிய விழாக்களில் கலந்துகொள்வார் உங்களுடைய தமிழர் தலைவர்கள்!!!! வரலாற்று ஆசிரியர்கள், கத்தோலிக்க உயர்பீடங்கள் தோமஸ் இந்தியாவுக்கு வந்ததை ஏற்றுக் கொள்ளாது இருக்கும்போது; தமிழகத்தில் அவர் வந்தார், திருவள்ளுவரை சந்தித்தார் என்று கதையடிக்கும் கூட்டத்து விழாவில் கலந்து சிறப்புரையாற்றி வாக்குக்காய் வரலாற்றை மாற்றியெழுதும் கேவலமுடைய கருணையில்லா நிதி மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்!!!! சிரிப்பொலி தாங்கமுடியவில்லை :-D

ஈழத்து சோழன் இப்படி, சொல் ஒன்று செயல் ஒன்றாக இருப்பதில்லை!!! ஒரு மதத்துக்கு எதிர் இன்னொரு மதத்துக்கு பூமாலை என்று வாழ்ந்ததில்லை! அவர் மதசார்பின்மையின் உண்மையான வடிவம்!

தமிழருக்கு உண்மையாய் வாழ்ந்தவரின் தாயார் உங்கள் கேவலங்கெட்ட கருணாநிதியிடம் மருத்துவ மடிப்பிச்சை கேட்கவேண்டிய கேவலத்தை உருவாக்காதீர்! அதைக் கண்டு இரசிக்காதீர்!!!

உடனே, ஜெயலலிதா ஆதரவாளன் என்று எங்கையும் என் கருத்தை திரிவுபடுத்தாதீர்! காலைச் சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையில் இருக்கும் கள்ளத்தனமான உண்ணாவிரதத்தை அரங்கேற்றி ஊரைப் பேக்காட்டும் உங்கள் கலைஞருக்கும் அவருக்கு வால் பிடிக்கும் தமிழர் தலைவர் :- ) வீரமணியருக்கும் ஜெயலலிதாவுக்கு தமிழ் உணர்வில்லை என்று சொல்லத் தகுதியில்லை! ஜெயலலிதாவிடன் தமிழ் உணர்வை எதிர்பார்ப்பது தவறு!!! தமிழச்சி அல்லாதவளிடம் தமிழ் உணர்வு இருக்குமா என்ன?

ஆனால் தமிழ்.....தமிழ் என்று ஊரைப் பேக்காட்டும் ("ஏமாற்றும்" என்பதற்கு நம்ம ஊர் பேச்சு வழக்கில் இப்படி சொல்லுவர்.........:-) ) உங்கள் மாண்புமிகு கலைஞரும் அவரது வால்பிடியான வீரமணியரும் கேவலம்........அசிங்கம்.........அவமானம்.......போன்ற தமிழின் வடிவங்கள்!!!!

கலைஞருக்கு தனது வேலையைச் செய்ய ஜெயலலிதா ஒரு சாட்டு!!! இதை அனைத்து தமிழரும் அறிவர்! உங்களின் தமிழர் தலைவர் வீரமணியர் அறியாவிடின், அவர் தமிழர் தலைவர் என்ற பட்டத்தை கனவிலும் நினைக்கமுடியாத கேவலமே!!!!

Tuesday, April 6, 2010

நித்தியானந்தரும் பாதிரிகளும் ஐரோப்பா-தமிழக ஊடகங்களும்!!!

வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தமிழை சிதைக்கவே (தமிங்கிலத்தை வளர்த்து) உருவாகி உழைக்கின்ற சண் போன்ற தமிழக தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை சிவகாசிக்காரன் என்னும் வலைப்பதிவு எழுத்தாளர், பாதிரிகள்-நித்தியானந்தர் விடயத்தை வைத்து அருமையாக ஒப்பிட்டுள்ளார் .

நித்தியானந்தர் விடயத்தில் அவருடைய முன்னைய பதிவொன்றில் சமூகத்தை அருமையான கேள்விகள் கொண்டும் ஆராய்ந்துள்ளார். வலையுலகில் அதிகம் பயணிப்பதில்லை. போதியநேரம் இருப்பதில்லை. பயணிக்கும் சந்தர்ப்பத்தில் இவரது இவ்விரு பதிவுகளையும் வாசித்தபோது, இவரது இப்பதிவுகளை யாவருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் "நித்தியானந்தர்" விடயத்தை பலர் ஒரு கோணத்தில் பார்க்க, இவரோ இன்னொரு கோணத்தில் பார்த்திருக்கின்றார். சிவகாசிக்காரன் வலைப்பூ எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

சிவகாசிக்காரன் வலைப்பூ எழுத்தாளரின் குறித்த பதிவுகளைப் படிக்க, கீழ் உள்ள அவரது பதிவுத் தலைப்புகள் மேல் சொடுக்குக!
பரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...

நித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா?

Tuesday, March 30, 2010

தமிழகமே, அகதியை வல்லுறவு செய்தது நியாயமா?

ஈழநாட்டில் வாழமுடியாது அகதியாக தாய்வீடு வந்த திருமணமான பெண்ணை காவற்துறையினர் கற்பழித்த கொடூரம்.......கேவலம்........தமிழக மாண்புக்கே நேர்ந்த அவமானம் பற்றி தமிழகம் அமைதியாய் இருப்பது அழகாகுமா?

தன்வீட்டில் வாழமுடியாது தாய்வீட்டுக்கு வந்த திருமணமான ஏதிலிப் பெண்ணை வல்லுறவு செய்ய எங்கனம் மனம் வந்தது?

நெஞ்சை வாட்டி உருக்கி உருக்குலைய வைத்த செய்தியை இங்கு கீழே பதிவு செய்கிறேன்.
"தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

பொலிஸ்நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டுக் கொன்று விடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்துள்ளார்"




காமத்தை நெறியாய் ஒழுக, பாரததேசத்தில் படைக்கப்பட்ட காமசூத்திராவில்கூட "அடைக்கலம் புகுந்த பெண்ணிடம் உடலுறவு வைத்துக்கொள்ளுதல் கூடாது" என்று புத்திமதி உரைத்திருந்து என்ன பயன்?

ஏதிலித் தமிழ்ப் பெண்ணின் உயிரையே குடிக்கும் காமத்தை எங்கிருந்து பெற்றனர் காவல்த்துறை அதிகாரிகள்? தமிழகம் வந்ததிலும் பார்க்க, ஈழநாட்டிலேயே வாழ்ந்திருக்கலாம் என்றே அப்பெண்ணின் உறவுகளின் மனநிலை இன்று!!!!
கொடியவர்களிடம் இருந்து பாதுகாப்புத்தேடி தமிழகம் வந்தால், தமிழகத்தில் சட்டத்தைக் காக்கும் காவலர்களே கொடியவர்களாக இருப்பது கொடுமையோ கொடுமை!!!

இதுதான் கருணையில்லா நிதியின் சட்ட ஒழுங்கு?? அல்லது ஈழத்தமிழ் அகதிகளுக்குமேல் மட்டும் அவிட்டுவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனம் இதுவோ? தமிழகமும் பாதுகாப்பில்லை என்று ஈழத்தில் உள்ள ஏனையோருக்கு தோற்றத்தை உருவாக்கி, அகதிகளின் வருகையைக் குறைக்க செய்த சதியோ இது? அதுபோல் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை கற்புக்கு பாதுகாப்பில்லை என்று உணர்த்தி தமிழகத்தை விட்டு வெளியேற்ற மேற்கொண்ட தந்திரோபாயமோ இது?

யார் கண்டது கருணையில்லா நிதி இதுவும் செய்யும்..........இன்னமும் செய்யும்!!!!!!!

வாழ்க கருணையில்லா நிதியின் ஆட்சி!!!!! தொடரட்டும் ஆட்சி...........வீழ்ந்து நொருங்கட்டும் தமிழ் மாண்பு! தமிழ் மறம்!! தமிழ் குலம் !!!

Friday, February 12, 2010

வன்னியில் சிதைந்த தமிழ்ப் பிள்ளையின் வாழ்க்கையில் ஒளியேற்ற ஒரு வாய்ப்பு-உதவ முன்வாருங்கள்!!!!

கீழே உள்ள தொடுப்பை அழுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் கரங்களால் வன்னியில் சிதைந்துபோன ஒரு தமிழ் பிள்ளையின் வாழ்வில் ஒளியேற்ற ஒரு வாய்ப்பு:-

17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை: அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?

Sunday, January 24, 2010

புலம்பெயர்ந்த உறவுகளே, ஒருகணம் சிந்தியுங்கள்...........இவை உங்களுக்குத் தேவைதானா சொல்லுங்கள்?

கலைஞரும் தமிழுணர்வும் மானாட மயிலாடவும்...


மேல் உள்ள வலைப்பூ பதிவை ஒருகணம் படியுங்கள் என் இனிய உறவுகளே!

கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி இவையெல்லாம் எமக்குத் தேவைதான சொல்லுங்கள்? புலம்பெயர்ந்த உங்கள் நிதியில் பெருத்த இந்த நிறுவனங்கள் தமிழை சீர்குலைப்பதை அறியீரோ? உங்கள் பணத்தில் பெருத்து உங்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதித்த இந்நிறுவன தொலைக்காட்சிகளை கண்டுகளிப்பது மடமையல்லவா?
மடமையில் மூழ்கியிருப்பது எம்குலப் பெருமையாகுமா?

புலம்பெயர் தேசத்தில் உள்ள தோழர்களுடன் உரையாடியபோது சீர்குலையும் எம் இளையோரின் பண்பாட்டை எடுத்துரைத்தனர்.மனம் வெந்தது. பெற்றோரே, நீங்கள் இந்த தொலைக்காட்சிகளை அரவணைப்பது உங்கள் பிள்ளைகளின் பண்பாட்டை சீர்குலைக்க வழிசமைக்க ஏதுவாக்கும். மறவாதீர்!!!!!!!

Wednesday, January 13, 2010

குறள்கொண்டு விதி எழுது

தை பிறந்தால்
வழி பிறக்கும்;
தைதோறும் நம்பிக்கைக்கு
குறைவில்லை இவ்வண்ணம்!
ஆனால்;
இனிய தமிழே,
நம்பிக்கையை தளரவிடாதே!

ஊக்கம் முடியெனின்
வெற்றி குடியாகும்!
இனிய தமிழே,
வெற்றி குடியாகும்!
ஆக்கம் அதர்வினாய்ச்
செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
என்னும் வள்ளுவன்
குறளை மனதில்
பேணு!

இனிய தமிழே,
ஆக்கத்தை இழந்தது
ஒரு விசயமே
இல்லை ஊக்கம்
உள்ளவரை!
ஆக்கம் இழந்தேமென்று
அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
என்னும் வள்ளுவன்
மறையை மறந்திடாதே!

இனிய தமிழே,
நன்மையே அறுவடையாயின்
எத்துன்பம் வரினும்
வாடாது நட்ட
நாற்றை அறுவடை
செய்வாய்!
துன்பம் உறவரினும்
செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும்
வினை என்னும்
பொய்யா மொழியை
உரமாக்கிக் கொள்கவே!

தமிழே,
ஆருயிரே,
தெய்வப் புலவரின்
குறளை வைத்து
மதிகொண்டு நல்ல
விதி எழுது!



உறவுகளே,
பொங்கல் பொங்கட்டும்!
எங்கள் மங்காத
தமிழுக்கு சூழ்ந்தகலி
நீங்கட்டும்!
எங்கள் மொழி
ஓங்கட்டும்!
வையகம் எங்கும்
செழிக்கட்டும்!

வாழ்க வாழ்க
எம் இனிய
தமிழ் வாழ்க

வாழ்க வாழ்க
மூவேந்தர் மண்
வாழ்க

வாழ்க வாழ்க
வளமுற்ற வையகம்
வாழ்க

Sunday, December 13, 2009

எமது கல்லூரிக்கு புதுவிதி எழுதுவோம்!!!

கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை என்னும் பொழுது தேன் வந்து பாயுது எம் காதினிலே என்று பாடினால் அது மிகையில்லை.சைவ சாம்ராச்சியமாய் இரத்மலானை மண்ணில் வீற்றிருக்கும் எங்கள் கல்லூரியை நினைத்த பொழுதில் இன்பத் தேன் ஒழுகி உடம்பெல்லாம் புல்லரிக்கும்.

இராவண மன்னன் சிவப்பு மலர்கள் கொண்டு சிவபெருமானை பூசித்த பயனால் இன்றும் செந்தமிழ்ச் சைவ வாசம் இரத்மலானை மண்ணில் வீசும் அருமை நிலவுகின்றது. இராவணன் பூசித்த பயனால் திருநந்தீஸ்வரமாகவும் கொழும்பு இந்துக் கல்லூரியாகவும் கற்பக விநாயகர் ஆலயமாகவும் இரத்மலானை மண்ணில் சைவநெறியும் தமிழர் பண்பாடும் இன்றும் பேணப்படுவது கண்கூடு.

சைவநெறிக் கொடியாக நந்திக் கொடி விடைக்கொடிச் செல்வர் தனபாலா ஐயாவால் மீள அறிமுகப்படுத்தப்பட்டு (ஏலவே நந்திக் கொடி சைவக் கொடியாக இருந்து கால ஓட்டத்தில் பயன்பாட்டில் இல்லாது மறைந்து இருந்தது. எனினும் கொடிவாரம் என்றெல்லாம் நந்திக் கொடிபற்றி விழிப்புணர்வை யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்புகள் ஏற்படுத்தி வந்தனர்.) முதன்முதலில் எமது கல்லூரி வளாகத்திலேயே ஏற்றிவைக்கப்பட்ட பெருமையை உடையது எமது கல்லூரி.

நந்திக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட அருமையால் நந்தி(சிவன்) மகனுக்கு ஆலயம் உருவாயிற்று.கற்பக விநாயகர் என்ற திருப்பெயருடன் மாண்வர்களுக்கு அருள்பாலிக்கும் பிள்ளையாரின் பெருமையை எழுத இக்கட்டுரை போதாது.

கற்பக விநாயகர் குடிகொண்ட அருமையால் காலந்தால் முந்திய சிதிலமடைந்து கிடந்த திருநந்தீஸ்வரம் மெல்ல மெல்ல எழுச்சி கண்டு இன்று சைவமக்களின் பயன்பாட்டிற்கு உகந்தவகையில் உருவாகியுள்ளது.
இலங்கையிலேயே, நந்திக் கொடி பறந்து கொண்டிருக்கும் பெருமை எமது கல்லூரிக்கே உரித்தானது. வானத்திலே பறந்து கொண்டிருக்கும் நந்திக் கொடியால் சிவானந்தக் காற்று மாணவர்களின் உள்ளத்துக்குள் பெருக்கெடுத்து வளமான மாணவர் சந்ததி கல்லூரியில் இருந்து உருவாகுவது கண்கூடு.
முதியோர் இல்லம்,சக்தி இல்லம், மாணவர் விடுதி என பலநல்ல சமூகசேவைகளில் இலங்கை இந்து மாமன்றத்துடன் இணைந்து கல்லூரி ஆற்றும் பணி சைவ சமூகத்தின் குணத்தை குறிக்கும் குறீயீடு என்க.


இத்தகு பெருமைகளை கல்லூரி சூடிக் கொள்ள எமது கல்லூரியின் முதல்வர், ஆசிரியர் குழாம், பெற்றோர் குழாம், பழைய மாணவர் குழாம்,மாணவர் குழாம், சமூக ஆர்வலர் குழாம் எனப் பலதரப்பட்டவர்களின் உழைப்பே காரணம். பிரதானமாக கல்லூரி முதல்வரின் ஆளுமையை சுட்டியே ஆகவேண்டும்.

இவ்வண்ணம் பெருமையுடைய கல்லூரியில் ஒருசில குறைபாடுகள் இருப்பது வருந்தத்துக்கு உரியதே! அதை அகற்ற வேண்டியதும் நாம்தானே???

ஒரு கல்லூரியின் முதுகெலும்பாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தையே சுட்டுவர். ஆனால் எமது கல்லூரிக்கு காலத்துக்கு காலம் ஒரு இரு வருட இடைவெளிகளில் புதுப்புது பழைய மாணவர் சங்கங்கள் தோன்றுவதும், பின்னர் அச்சங்கங்கள் தானாகவே மறைந்துவிடுவதும் பலரை சலிப்படையச் செய்ய விடயமாகும். இதுவரை தோன்றி மறைந்துபோன பழைய மாணவர் சங்கங்கள் விட்ட குறைகள் என்ன? அச்சங்கங்கள் மறைந்துபோகக் காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து கொள்வது தற்போது வீரியமாக எழுந்துவருகிற பழைய மாணவர் சங்கத்துக்கு உரமளிக்கும் என நம்புகிறேன்.


பழைய மாணவர் என்பவர் கல்லூரியால் உருவாக்கப்பட்ட சமூகத்துக்குரிய வளங்கள் எனலாம். சமூகத்தின் வளங்களைக் கொண்டு எழுப்பப்பட்ட கல்லூரி எப்பகை வரினும் அப்பகை வெல்லும் என்பது திண்ணம்! எனவே முதல்வரின் ஆளுமையில் பெருவளர்ச்சி காணும் எமது கல்லூரியிற்கு தற்போது அவசியமானது உறுதியான அத்திவாரம் கொண்ட பழைய மாணவர் சங்கம்.முதல்வரின் சுமையை குறைக்க பழைய மாணவர் சங்கத்தின் எழுச்சி அவசியம்.
இதுவரை பூத்து வாடிய பழைய மாணவர் சங்கங்களையும் தற்போது நறுமணத்துடன் பூத்து செழிப்புறுகின்ற பழைய மாணவர் சங்கத்தையும் ஒப்பிடும்போது தற்போது வீறுகொண்டு எழுந்துவருகிற பழைய மாணவர் சங்கம் வாடமலராக விளங்கும் என்பது திண்ணம். எனவேதான் ஒரு எழுத்தாளனாக மட்டுமல்லாது, கல்லூரியை நேசிக்கும் கல்லூரியின் மைந்தனாக இக்கட்டுரையை எழுதவிளைகிறேன்.


ஒரு சங்கம் அல்லது கழகம் காலத்தால் அழியாது வாழவேண்டுமாயின் முதலில் யாப்பு உருவாக்கப்படுதல் அவசியம். யாப்பு என்பது எவர் விருப்பத்துக்கும் உருவாக்கப்படல் தவிர்க்கப்படல் வேண்டும். சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் ஏனைய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கங்களின் யாப்பை ஒத்த ஒரு யாப்பை உருவாக்குதல் தலையாய கடமையாகும். இதற்கு வெளிநாடுகளில் உள்ள எமது பழைய மாணவர் சங்கங்களின் உதவியை நாடுதல் எமது தேவையை இலகுவாக்கும். அவுஸ்ரேலியாவில் எமது கல்லூரிக்கும் எமது சகோதரக் கல்லூரியான பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் பொதுவான பழைய மாணவர் சங்கம் உள்ளதை இணையம் மூலம் அறிந்துகொண்டேன். இலண்டனில் கூட எமது பழைய மாணவர் சங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். எனவே இவர்களின் உதவியை நாடுதல் முதன்மையானது. யாப்பையும் இவர்களிடம் இருந்தே கேட்டு பெறலாம். இல்லாவிட்டால் யாப்பு உருவாக்கத்தில் பெரும்பிழைகள் உருவாகவாய்ப்புண்டு. ஏனெனில் தற்சமயம் பழைய மாணவர் சங்கத்தை வழிநடத்தும் தோழர்களாகிய நாமனைவரும் கழகங்களின் அமைப்புகள் பற்றிய கற்கையை முடித்தவர்கள் அல்ல. பெரும் நிதி வளத்துடன் இருப்பர்களும் அல்ல.

யாப்பு உருவாக்கத்துக்குப் பின்னர்,
பொருளாளரின் கட்டுப்பாட்டில், தலைவரின் மேற்பார்வையில் ஒரு கழக நியதிக்கு உட்பட்ட வகையில் யாப்பு அமைப்புக்கு ஏற்ப வங்கியில் கணக்கு சங்கத்தின் பெயரின் உருவாக்கப்படல் வேண்டும். இது வெளிநாட்டில் உள்ள எமது பழைய மாணவர் சங்கத்தின் பணவுதவிகளைப் பெற வழிவகுக்கும். கழக பொருளாளர் மற்றும் தலைவர், செயலாளரின் மேற்பார்வையைவிட ஏனையவர்களின் தலையீட்டுக்கு இடமில்லாத வகையில் கணக்கை பேணுதல் அவசியம். மாதாந்தக் கூட்டத்திலும், ஆண்டுக் கூட்டத்திலும் வரவு-செலவை பொருளாளர் அறியப்படுத்தல் வேண்டும். இவையாவும் சங்கத்தின்மேலான நம்பிக்கையை சமூகத்தில் வளர்க்கும்.


நான் கல்விகற்ற காலத்திலேயே பலமுறை, கல்லூரியின் இந்து மாணவர் சங்கம், தமிழ்ச் சங்கம், விஞ்ஞானபீட மாணவர் மன்றம், வர்த்தபீட மாணவர் மன்றம் போன்ற பல மாணவர் மன்றங்கள் வருடத்துக்கு வருடம் மன்றச் சின்னங்களை மாற்றுவதும், மன்றத்தின் உத்தியோகபூர்வ வாசகங்களை மாற்றுவதும் இயல்பான தொன்றாக இருந்தது. காரணம் பொறுப்பாசிரியர்கள் மாணவர்கள் உருவாக்கும் சின்னங்களைத் தவரவிடுவதே காரணமாகும். கடந்தமுறை கல்லூரிக்கு சென்றிருந்தபோது ஒரு ஆசிரியர் இப்படி இதைக் குறிப்பிட்டார். "2003இல் வழங்கிய சான்றிதழில் இச்சங்க சின்னமாக இதுவுள்ளது.இந்தமுறை வழங்கியுள்ள சான்றிதழ்களில் இந்தப் புதுச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த இரு வெவ்வேறான சின்னங்களையுடைய சான்றிதழ்களுடன் ஒருவேலைத்தளதின் நேர்முகப் பரீட்சைக்கு இரு மாணவர்கள் பங்குபற்றின் வேலைத்தள நிர்வாகம் "ஒரே கல்லூரியின் ஒரே சங்கத்துக்கு எங்கனம் இரண்டு சின்னங்கள்?" என்று ஐயம் கொண்டு ஏமாற்று சான்றிதழ் என கருத இடமுண்டு" என்றார். உண்மைதான்!!!!


ஒரு கழகம்/சங்கத்தின் சின்னம் பொருள் பொதிந்ததாக உருவாக்கப்படல் அவசியம். கல்லூரியின் பண்பாட்டை எடுத்தியம்பும் வகையில் இருத்தல் அவசியம். அறிவுடையார் எல்லாம் உடையார் என்ற அற்புத வாசகத்துடன் சைவப் பண்பாட்டை சொல்லும் கோபுரச் சின்னத்துடன் எமது கல்லூரி விளங்குகின்றது. கோபுரச் சின்னத்துள் உள்ள தாமரைக்கு கலைவாணி வீற்றிருக்கும் இடமெனவும், ஏடுகளுக்கு கல்வி போதிக்கும் இடமெனவும், குத்துவிளக்குக்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றும் இடமெனவும் பொருள் உரைக்கலாம். கல்லூரியின் கோப்புகளில் சரியான பொருள் இருக்க வாய்ப்புண்டு.(சிலசமயங்களில் 83கலவரத்தில் எரியூட்டப்பட்ட போது அழிந்துபோன நூலகம் மற்றும் கல்லூரி உடமைகளுள் சின்னத்துக்குரிய விளக்கக் கோப்பும் அழிந்துபோயிருக்கலாம்.) நான் கல்லூரியில் உள்ளபோது சரியான விளக்கத்தை தமிழாசிரியர் உட்பட எவரும் வழங்கிலர். தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி,கொக்குவில் இந்துக் கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி, சைவ மங்கையர் கழக கல்லூரி என பலதரப்பட்ட கல்லூரிகளின் சின்னங்களைப் பார்த்தபோது சைவ மணத்துடன் கூடிய தமிழ்ப் பண்பாடு கல்லூரிச் சின்னங்களிலும் சரி, அக்கல்லூரிகளின் கழகச் சின்னங்களிலும் சரி காணக்கூடியதாக இருக்கும். ஆங்கிலமோகத்தை எந்தவொரு தமிழ்க் கல்லூரிச் சின்னங்களிலும் நான் இதுவரை கண்டதில்லை. மேலைத்தேயத்தவர் உருவாக்கிய கல்லூரிகளில் ஆங்கிலச் சாயல் அப்பட்டமாய் இருப்பது இயல்பு. ஆனால் அவர்களிடம் இருந்து எமது பண்பாட்டைக் காக்க எமது முன்னோர்கள் கட்டிய எந்தக் கல்லூரியின் சின்னங்களிலும் ஆங்கிலச் சாயல் இருந்ததில்லை.அதேநேரத்தில் ஆங்கில அறிவில் அவர்கள் பின் தங்கியிருந்ததும் இல்லை.


ஆங்கிலம் என்பது அறிவு.மேலைத்தேயப் பண்பாடென்பது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றே! ஆனால் மேலைத்தேய மோகத்துள் வீழ்ந்து எமது பண்பாட்டைத் தொலைப்பதாக இருக்கும்போது "நாம் வீழ்கின்றோம்" என்ற செய்தி பொறிக்கப்பட்டுவிட்டதென்க!

எனவே, எமது பழைய மாணவர் சங்கச் சின்னம்;
தமிழில் வாசகத்தை கொண்டிருத்தல் அவசியம். சின்ன உருவாக்கத்தில் உள்ள ஒவ்வொரு அம்சத்திற்கும் ( கல்லூரிச் சின்னத்துக்கு யான் அறிந்த வகையில் விளக்கியுள்ளவாறு) எமது பண்பாட்டுடன் இணைத்து விளக்கம் கூறக்கூடிய சின்னமாக அது இருத்தல் அவசியம். தற்போது பேஸ்புக் குழுமத்தில் இணைக்கப்பட்டுள்ள சின்னத்தில் உள்ள பிரித்தானிய இராணியின் முடி-கிஞ்சித்தும் ஏற்க முடியாதவொன்று.
கோபுரத்தைவிட உயரமாக எதையும் கட்டக்கூடாது என்ற பண்பாடு எமது சமூகத்தில் இருந்த மரபு. கால ஓட்டத்தில் அதுமறைந்துவிட்டது. (தூர உள்ளபோதுகூட கோபுரம் காணின் ஆன்மீக உள்ளம் ஏற்படும்.எனவே கடவுள் உள்ளார் என்ற சிந்தையில் தவறுசெய்ய மக்கள் முற்படமாட்டார்கள் என்பதன் நிமித்தமே!) ஆனால் எமது கல்லூரியின் கோபுரச் சின்னத்திற்குமேல் பிரித்தானிய இராணியின் முடியைச் சூட்டியிருப்பது நாம் அவர்களின் அடிமை என்ற பொருளையே கொடுக்கும். ஏன் நமது மன்னர்களின் முடிகூட உகந்ததில்லை. காரணம் 'நாமார்க்கும் குடி அல்லோம்' என்று வாழ்ந்த நாயன்மார்கள் ஒழுகிய சைவநெறியின் இறைவன் எந்த மன்னனுக்கும் குடியாக மாட்டான்.அவனுக்குத்தான் நாம் குடி. எனவே இறைதத்துவத்தை உணர்த்தும் கோபுரத்துக்கு மன்னரின் முடியைச் சுட்டுவது எமது சமயத்தை நாமே இழிவுபடுத்தும் ஒன்றாகிவிடும்!
மேலும் ஐ.நா போன்ற அமைப்புகளில் பயன்படுத்தும் ஒலீவ் இலை எமது பண்பாட்டுக்கு எந்தவகையில் பொருந்தும் என்று புரியவில்லை.
சின்னமானது கவர்ச்சியாக இருக்க வேண்டிய அதேசமயம் அர்த்தம் பொதிந்ததாக பண்பாட்டை சொல்வதாக இருத்தல் வேண்டும். ஏதேனும் ஆங்கிலேயர் உருவாக்கிய கல்லூரிக்கு ஒலீவ் இலையைப் பயன்படுத்துவது தவறில்லை. எமது தமிழ்ப் பண்பாட்டு கல்லூரிக்கு ஒலீவ் இலை உகந்ததில்லை.


பொறுப்பில் உள்ளவர்கள் இணைய உலகம், மேலைத்தேயப் பாலம் என்று சொல்லி தமிங்கிலத்தையோ அல்லது ஆங்கிலப் பண்பாட்டு மோகத்தையோ எமது சமூகத்துக்கு ஊட்டக்கூடாது. ஆங்கில அறிவு மட்டுமல்லாது, பிரான்ஸ், டொச் எனப் பலதரப்பட்ட மொழிகளில் எம்மவர்கள் ஆளுமைபெற்றவர்களாக வளர்க்கப்பட வேண்டுமே ஒழிய ஆங்கிலேயர்களாகவோ அன்றி டொச்காரர்களாகவோ வளர்க்கப்படக்கூடாது.
எனவே, தாழ்மையுடன் வேண்டுவது யாதாயின்; உருவாக்கப்பட்ட சின்னத்தை மீளாய்வு செய்க.

அடுத்த பிரதானமான விடயம்; சங்கத்துக்கென தனியான கோப்புகளை பேணுதல் வேண்டும். பற்றுச்சீட்டு உருவாக்குதல் வேண்டும். கல்லூரி நிர்வாகத்துக்கு பணமளிக்கும் போது பற்றுச்சீட்டைப் பெறவேண்டும். கல்லூரியில் பணம் பயன்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்தல் வேண்டும்.

அடுத்த பிரதானமான சங்கத்துக்கு வலுவூட்டும் அம்சம் யாதாயின்; இன்று பொறுப்புள்ள பதவிகளிலும், வர்த்தகர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக,சட்டத்தரணிகளாக,பொறியியலாளர்களாக,தொழிலதிபர்களாக இலங்கையில் வாழும் எமது பழைய மாணவர்களை காப்பாளர்களாக இணைத்தல் வேண்டும். தற்போது உள்ள சங்கப் பொறுப்புகளில் இளைஞர்களே இருப்பதால்; அவர்களது தலைமையில் சமூகத்தின் பிரதிநிதிகளை அடக்குதல் நாகரீகம் அன்று. எனவே அவர்களை கௌரவிக்கும் காப்பாளர்களாக நியமித்தல் நல்லது.

இவையாவும் எமது கல்லூரியின் எழுச்சிபெறும் பழைய மாணவர் சங்கத்தின் ஆணிவேரைப் பலப்படுத்த உதவும் விடயங்களாகும். எனவே இவற்றை கருத்தில் எடுத்து செயற்படுத்த தாழ்மையுடன் வேண்டுகிறேன். தற்சமயம் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவமுடியாது கல்விக்காய் புலம்பெயர்ந்து உதவும் பேறை இழந்து தவிக்கிறேன். ஆதலாலேயே இத்தக்கட்டுரையை பாலம் சமைக்க இராமனுக்கு உதவிய அணில்போல் கல்லூரி வளாகத்துள் நின்று சங்கத்துக்காய் உழைக்கும் தோழர்களுக்கு உதவும்பொருட்டு இக்கட்டுரையை எழுதி பிரசுரிக்கிறேன்.

எமது கல்லூரியின் தற்போதைய முதல்வரின் காலத்தில் நாம் உறுதியான பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கும் பேறை தற்போது பெற்றிருக்கின்றோம். முதல்வருக்கு தோள் கொடுக்க பழைய மாணவர் சங்கம் உதவ வேண்டுமாயின் வலுவுடைய சங்கம் உருவாதல் வேண்டும். எனவே தனிப்பட்ட நன்மை தீமைகளை கருத்தில் எடுக்காது; சமூகத்தின் நன்மையை கருத்தில் எடுத்து பழைய மாணவர் சங்கத்தை செயற்படுத்த வேண்டுகிறேன்.பல ஒதுங்கியுள்ள பழைய மாணவர்கள் மேலே யான் சுட்டியுள்ள கருத்துகளை செயற்படுத்தும்போது தாமாகவே முன்வந்து இணைவர். ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு? எனவே ஒன்றுபடுத்துவோம்!!!கல்லூரி மைந்தர்களின் வரவேற்கப்படுகின்றன.

எம் கல்லூரியின் வளர்ச்சிக்காய் வீறுகொண்டு எழுவோம்.
நன்றி

Thursday, November 12, 2009

பாரதியார் ஒரு பேதை-தமிழ்ச் சாதியின் நன்றிக்கடன்!!!!

மெல்லத் தமிழினிச் சாகும் என்றந்தப் பேதை உரைத்தான் ??????
ஓ பாரதி தானே?

இன்று பரவலாக தமிழுக்காய் கூடுகின்ற கூட்டங்கள் தொட்டு பட்டிமன்றங்கள்,கட்டுரைகள்,கவிதைகள் என எங்குமே "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகக் கருத்துப் பதியப்படுகின்றது.

எவ்வளவு பெரிய அறியாமை!
பாரதியின் புகழுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கும் அறியாமையே இது!!!!

"புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை – அவைசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லைமெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் "

"புதிய தொழில்நுட்பக் கலைகள் எவையும் தமிழ்மொழியில் இல்லை.அவையெல்லாம் மேற்குநாட்டிலேயே உண்டு. இக்கலைகளை தமிழில் மொழிபெயர்க்க எவரும் முன்வருவதில்லை.மொழிபெயர்த்தாலும் முனைப்புடன் சந்ததியர் பயன்படுத்தார். மொழிபெயர்த்தாலும் அத்தொழில்நுட்ப கல்வியை முழுமையாகத் தமிழால் விளக்கப்படுத்த முடியாது.எனவே தமிழ்மொழி மெல்ல மெல்ல அழிந்துபோகும்" என்று எவனோ ஒருவன் பேசியதைக் கேட்ட பாரதியின் நெஞ்சம் கொதித்தது.

இங்கு அவன் சொன்னதில் என்ன பிழை? கவலையில் பரிமாறிய கருத்தாக இருக்கலாம் தானே?
பாரதி கொதித்துப்போகக் காரணம் யாதாக இருக்கலாம்?

தமிழ்மொழிக்கு திறன் இல்லை என்று சொன்னானே-அதுதான் காரணம்!!!
திறன் இல்லை என்று சொல்ல இவன் யார்? சில சமயம் கருணையில்லா நிதியாக இருந்திருக்கலாம்!!!!

எனவேதான்;

"மெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!இந்தவசையெனக் கெய்திட லாமோ?"

என்று பாடுகிறார்.

"என்றெந்தப் பேதை யுரைத்தான்?" என்று மெல்லத் தமிழினிச் சாகும் என்று சொன்னவனை பேதை என்று வசைபாடியுள்ளார் தனது பாடலில்.
அதேநேரத்தில்;சொன்னவன் தொழில்நுட்ப மற்றும் ஏனைய புதிய கண்டுபிடிப்புக்கள் தமிழில் இல்லை என்று சொன்ன கருத்தை ஏற்று, அவற்றை ஈடுசெய்ய,
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் " என்கிறார்.


ஏனைய மொழிகளில் உள்ள புத்தம் புதிய கலைகளை மொழிபெயர்ப்பு செய்யும் வேளை முழுமையாய் தமிழால் பொருளுணர்த்த முடியும்.அத்தகு திறனை எட்டுத் திக்குகளிலும் இருந்து கலைச் செல்வங்களை தமிழுக்கு கொண்டுவரும் போதே இத்தகு பேதைகள் உணர்ந்து கொள்வர்.எனவே இவ்வழி ஒன்றே இப்பேதையின் கருத்து தொடராது இருக்க வழிவகுக்கும்.ஆதலால் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற ஔவையின் குரலுக்கு அமைவாக; எட்டுத் திக்குகளுக்கும் சென்று எல்லா மொழிகளிலும் உள்ள அறிவுச் செல்வங்களை மொழிபெயர்ப்புச் செய்து தமிழன்னைக்கு மாலையாக்கி சூட்டுங்கள் என தமிழ்ச் சமூகத்தை வேண்டுகிறார்.

ஆனால் ஈற்றில் பாரதியே "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று சொல்லிவிட்டதாக செவிவழியாக எல்லோர் நெஞ்சிலும் பதிந்துவிட்டது. பேதை பாரதியானான்!!!

தமிழ்ச் சாதி பாரதிக்குச் செய்த நன்றிக் கடனைப் பார்த்தால் தமிழென்று சொல்லும்போது "தலைகுனிந்து' நிற்கவேண்டியுள்ளது. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்ற திருக்குறள் தமிழ் சமூகத்தைப் பார்த்து சிரிக்கிறது?
பேதை பாரதியாகலாமா?
தமிழ் நன்றிகெட்ட இனமாகலாமா?
சொல்லுங்கள்.
இதோ பாரதியின் பாடல்:-
புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை – அவைசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லைமெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!இந்தவசையெனக் கெய்திட லாமோ?சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

என்றந்தப் பேதை உரைத்தான் என்பதற்கு முன்னர் உள்ள வரிகள் இன்னொருவரின் வார்த்தைகளாகவே பாரதி கையாண்டுள்ளதை முழுப்பாடலையும் படிக்கும்போது விளங்கிக் கொள்ளலாம்.

எனவே மெல்லத் தமிழினிச் சாகும் என சொன்னது யார்?
பாரதி அல்ல!!!!!!!!!
பாரதி அல்ல!!!!!!!!!
பாரதி அல்ல!!!!!!!!!


Wednesday, August 19, 2009

அருள்மழை பொழியும் நல்லூரான் தேர்

முருகன் என்றால் அழகன் ஆகும். அழகன் என்பதற்கு பொருள் நல்லூர் முருகன்.யாழை மட்டுமல்ல ஈழ வளநாட்டை அருள்மழையால் ஈர்த்து நல்லருள் பாலிக்கின்ற முருகப்பெருமானின் தேர்த்திருவிழா இன்று இனிதே நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ அரோகரா ஒலிகள் விண்ணை முட்ட தந்தைக்கே பிரணவப் பொருளை போதித்த முருகப் பெருமான் தேரேறி நல்லூர் ஆலய வீதியில் வலம்வந்த காட்சியை நேரில் காணும் பேறு கிட்டாதவர்களுக்காய் (என்னையும் சேர்த்து)
நிழற்படங்களை பதிவேற்றுகிறேன். இப்படங்கள் இணையங்களில் இருந்து பெற்றவையாகும்.










Friday, August 14, 2009

தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும்

எங்கள் இன்பத்தை சிதைத்த இந்தியத் தாயே, உனது இன்பநாள் இன்று! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும் ஆனால் நீதி?

வள்ளுவன் சிலைகேட்டானா? மானம் கேட்டானா?

சுமுக நிலை
வந்ததென்ற பாவியே
வள்ளுவன் சிலைகேட்டானா?
மானம் கேட்டானா?

பண்டப் பரிமாற்றமாய்
சிலைதிறப்பு
மானங்கெட்டவனே ஒக்கேனக்கல்
எந்தப் பரிமாற்றமாகும்?
வாடும் காவேரி
வருத்தவில்லையா?

குளிரூட்டிய தனமிகு
"தான" வீட்டில்
சக்கரவண்டியில் சொகுசு
மெத்தையில் நேரத்துக்கு
சாப்பாடென வாழும்
உனக்கு
எங்கள் நாட்டில்
சுமுகநிலை எங்கனம்
வந்ததறிந்தாய்?

கோமாளி கூட்டமென்று
கூத்தாடி சொன்னபோது
மானங்கெட்டு அமைதியாய்
இருந்த இழியவன்
நீ!

சீ உன்னை
நம்பி அலையும்
தமிழ் தலைகள்
வெட்கமில்லா அடிமை
சாசனங்கள்!

Friday, July 3, 2009

இந்தி தெரியாதுங்கோ

தமிழகப் பயணம்
பெலரசில் இருந்து மதியம் 2.20 மணியளவில் புறப்பட்ட எதியாட் விமானம் மூலம் அபுதாபியை சென்றடைந்து அங்கிருந்து பின்னர் இன்னோர் எதியாட் விமானம் மூலம் டெல்லியை அதிகாலை 4 மணியளவில் அடைந்தேன். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வர உள்ளூர் விமான நிலையத்துக்கு வாடகை மகிழூந்து (taxi car) மூலம் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு காலை 10.00 மணியளவில் வந்து சேர்ந்தேன் உருப்படியாக!!!!!!

புதுவித அனுபவம் டெல்லியில்
டெல்லி இந்திய நாட்டின் தலைநகரம் என்ற கோதாவை நினைவில் கொண்டிருந்ததால் சரளமாக ஆங்கிலத்தில் எல்லோரும் கதைப்பர் என தவறாகக் கணித்துவிட்டேன். குடிவரவு அதிகாரிகளுக்குக்கூட அதிகம் ஆங்கிலம் தெரியாது அல்லது மெட்ராசி என நினைத்து "இவங்களோடு என்ன ஆங்கிலம் கேட்குது.....இந்தியை எதிர்த்து குரல்கொடுத்த இவங்களுக்கு இந்தியின் அருமையை புகட்ட வேண்டும்" என நினைத்தார்களோ தெரியாது. ஆனாலும் இலங்கைக் கடவுச்சீட்டைப் பார்த்த பின்னர்கூட இவர்களில் உரையாடல்களில் மாற்றமில்லை.

அங்கு நின்ற பணியாட்கள் தொட்டு பயணிகள் வரை யாரைக் கேட்டாலும் விடை இந்தியில்தான் வரும்.பெலரசு நாட்டின் குடியகல்வு அதிகாரிகள் சரளமாக ஆங்கிலம் கதைக்க எமக்கு ஆச்சரியம். "அடடா........எங்களுக்காக ஆங்கிலம் தெரிஞ்சவங்களப் போட்டுட்டாங்கப்பா இரசியர்களுக்குள்,,,,,, இப்படி ஒரு மாற்றமா?" என்று உவகையடைந்தோம்.
ஆனால் வல்லரசு என்று கதையளக்கும் இந்தியக் குடியரசு நாட்டின் அதிகாரிகள் இவ்வளவு இந்தி விசுவாசிகளாக இருப்பர் என்பதை கனவிலும் கருதவில்லை.

உலகம் முழுக்க இருக்கும் தமிழுக்கு ஒரு அங்குலம்கூட உரிமையில்லை. இவங்களுக்கு திமிர் இருக்கும்தானே மெட்ராசி இந்தி கதைக்காட்டி! சக பயணி என்னை மெட்ராசி என்று கருதி "ஏன் இந்தி தெரியாது?" என்று கேட்டார். இலங்கையன் என்றேன். ஏன் இலங்கையில் இந்தி இல்லையா என்று கேட்டார்.சிரித்துவிட்டு இல்லை என்றேன்.

இந்தி தெரியாவிட்டால் இப்படித்தான் மரியாதை கொடுப்பார்கள் என்று உணர்ந்தபோது "தமிழே தெரியாத தமிழரை மதிக்கும் எமது அறியாமையையும் தமிழகத்தில் தமிழைக் கட்டாயபாடமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் சென்ற தமிழக கல்வி நிறுவன நிலையங்களின் இழிநிலையையும் எண்ணியபோது "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதியிடம் சொன்னவனின் அருமை புரிந்தது.
கடவுளே..............,தமிழனுக்கு தன்மானத்தைக் கொடு!

அது சரி இந்தியா எப்படியுள்ளது?

இந்தியா......................என் சொந்தங்கள் போட்ட சாபத்தில் அழகிழந்து நிற்கிறாள்

Saturday, June 20, 2009

எனக்குத் தென்பில்லைத் தாயே


சுவையானது -எங்கள்
செம்மொழித் தமிழ்

அழகானது- எங்கள்
திராவிடத் தமிழ்

திருவருள் கொண்டது
எங்கள் சிவத்தமிழ்

புல்லரிக்க வைப்பது
எங்கள் முத்தமிழ்

நறுமணமானது எங்கள்
ஈழத் தமிழ்

தாயே,

உயிரிலும் இனிய
தமிழ் வாடுகையில்
வாழ்த்துகள் நவிலத்
தென்பில்லைத் தாயே!

தங்கள் பிறந்தநாள்
இனிய தமிழின்
இன்பத்தோடு கூடுகையில்;

எட்டுத் திக்கும்
முரசு கொட்டுகிறேன் -அம்மா
தங்கள் பிறந்தநாளை
வாழ்த்தி!

இவ்வண்ணம் என்னை
வளர்த்த என்
இனிய தாயே,

மங்காத தமிழ்
பொங்க,
தமிழ்ப் பாருக்கு
நல்ல செய்தி
கூட,

இறைவனைத் தொழுங்கள்!
தங்கள் வேண்டுதல்கள்
பலிக்காது போனதில்லை!

Saturday, May 16, 2009

தமிழே,புதுவிதி எழுது!!!!!!!!!!!!

விதி எழுதியபிரம்மனே,
தமிழின் விதியென்ன
சொல்வாயா?
ஈழ வளநாட்டில்
வாடும் தமிழுக்கு
விடை சொல்வாயா?

பக்தி மொழி
பாழடைவது அழகாகுமா?
பரமனின் மொழி
பரதேசியாகலாமா?

பிரம்மனே!
கலைமகள் வீணையில்
தவழுவது தமிழில்லையா?
திருமகள் வாசம்
தமிழுக்கு இல்லையா?
மலைமகள் மறம்
தமிழைவிட்டு நீங்கிடுமோ?

விதி எழுதிய
பிரம்மனே,
என்தமிழின் விதி
என்ன?

விதியை மதியால்
வெல்லும் திறம்
தமிழுக்கு உண்டு!!!!!!
மூவேந்தரை பெற்றெடுத்த
மறத் தமிழுக்குண்டு!!!!!!!!

இறை நம்பிக்கையில்
உலகில் உள்ள
கடவுள்கள் யாவும்
வாழுகின்ற மொழியென்ற
ஓர் நம்பிக்கையில்
என் தமிழின்
விதியை உம்மிடம்
கேட்க வந்தேன்!

என் தமிழை
காக்க வரம்
வேண்டுகின்றேன்!

பிரம்மனே,
முடிந்தால் உதவும்!!!!!
ஆரியத்து பூசையில்
மகிழ்ந்தால் கலைவாணியின்
வீணையை தூக்கி
எறிந்துவிடும்!

மணி வாசகரின்
திருப்பள்ளி யெழுச்சிக்கு
பார்ப்பான் இட்ட
தடையால்,
தூங்கிக் கொண்டே
இருக்கின்றார் தமிழ்ப்பெருமான்!!!

"எம்மைக் காப்பேன்"என்ற
திருவரங்கன்,
வைகுண்டத்தில் ஆழ்வார்
தமிழைக் கேட்காததால்
தமிழுணர்வு இழந்து
தமிழன் என
மறந்து ஆரியனாகி
கரே ராமாவாய்ப்
போய்விட்டார்!!!!

தமிழ்க் கடவுள்
நல்லூரான் சமசுகிரதபாசையால்
தமிழை நீசமாகக்
கருதிவிட்டாரோ?
கோட்டையின் வாரிசு
கட்டிய கோயில்
என நன்றிக்கடன்
செய்கிறாரோ??????
சூரன்போர் இனி
நடந்தென்ன? விட்டென்ன?

தமிழ் பெற்றெடுத்த
கடவுள்களே கைவிட்டால்??????

தமிழே,உன் விதியை
நீயே எழுது!!!!!
மதி கொண்டு
புதுவிதி எழுது!!!!!!!!!!!!

Wednesday, May 13, 2009

தமிழினத்தை கூட்டிக்கொடுத்த கருணை இல்லா நிதி

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் தமிழினப் பற்றாளராக எழுந்த சூரியன் இன்று ஈழத்தமிழால் அஸ்தமனமாவது கண்கூடு! அன்று பெரியார் திடலில் பல்லாயிரம் தமிழ்த் தொண்டர்கள் எழுந்தபோது, அவர்களுடன் இணைந்து எழுந்த கருணாநிதி, அறிஞர் அண்ணாவை தனது சுயபிரபல்யத்துக்குப் பயன்படுத்தி, தனது புத்திசாதூர்யத்தைப் பயன்படுத்தி தமிழ்ப்பற்றாளராக தன்னை வெளிக்காட்டி திமுக தலைமையாகி "தமிழர் தலைவர்" என்ற மகுடத்தை தனக்குத்தானே சூட்டிக் கொண்டார்.

எம்ஜியாரின் ஆயுட்காலம்வரை தமிழக முதல்வராக வரமுடியாது தவித்தவர். இனி எக்காலமும் வரமுடியாது செய்ய, தமிழகமே விழித்தெழுவாயாக!!!!

அரசியலில் கைவந்த நடிகரான கருணாநிதி, தமிழை தனது குடும்பத்தை வளர்க்கப் பயன்படுத்தினார் என்பது வெள்ளிடைமலை.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
என்பது வள்ளுவன் வாக்கு.

கருணாநிதியின் குடும்பம் சூரியகுடும்பமாக வளர்வதற்கு தமிழ்த்தாய்தான் காரணம். ஆனால், அவள் ஈழத்தில் கண்ணீரும் கம்பலையுமாக நிற்க, இரத்தத்துள் வாடி வதங்க, எக்கவலையும் இல்லாது ஆரியக்கூட்டுக்கு தமிழைக் கூட்டிக்கொடுத்து, இத்தாலிச் சனியாளிடம் தமிழ்த்தாயின் சேலையை விற்றுவிட்டார்.

தமிழ்த்தாய் மன்னிக்குமா? மன்னிக்கலாமா? தமிழகமே, விடை சொல்லு? பின்னூட்டமாகவில்லை. வாக்குச்சீட்டு வாயிலாக!!!!!!!!

நன்றி மறந்த கருணை இல்லா கருணாநிதியை தமிழகமே, வீறுகொண்டு எழுந்து தமிழகத்தை விட்டே விரட்டுவாயாக!!!!!!கன்னடத்திடம் ஒக்கேனக்கல் பிரச்சினையில் தமிழரை இழிச்சவாயனாக்கிய கெட்டிக்காரன். கச்சதீவைத் தாரைவார்த்த நயவஞ்சகன். பாலாறு பிரச்சினையைத் தீர்க்காது தமிழரை ஏமாளிகளாக்கிய ஆரியத்திடம் "மாமா" வேலை செய்த இழியவன். தெலுங்கு நாட்டோடு எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்காது "தமிழரின்" எல்லைகள் பறிபோவது தெரியாது இருக்கும் கைவந்த நடிகன். கருணாநிதியின் குடும்பத்தையே தமிழகத்தைவிட்டு ஒதுக்கிவையுங்கள் என் இனிய உறவுகளே!!!!!!

Thursday, May 7, 2009

தாய்த் தமிழகமே,உங்களின் கைகளுக்கு கிட்டிய எம்மைக் காக்கும் கடைசி ஆயுதம்

என் இனிய தமிழகமே,

வாக்கெனும் வேல்
கொண்டு காங்கிரசை
வீழ்த்து!

ஈழத்தில் தமிழழிய
கூட்டிக் கொடுத்த
திமுகவிற்கு நல்லதொரு
பாடம் புகட்டு!

சூழ்கலி நீங்கத்
தமிழ்மொழி ஓங்க;
உன் வாக்குச் சீட்டைப்
பயன்படுத்து!!

என் ஆருயிர்த்
தமிழகமே,

உன் கையில்
ஈழத் தமிழின்
எதிர்காலம்!
வாக்கும் உன்கையில்த்தான்!
சிந்தித்து செயலாற்று!

கட்சிகள் கடந்து
தலைவர்களைத் தொலைத்து
தமிழ்த்தாய்க்கு வெற்றிகொடு!

என் தாய்த்
தமிழகமே,

வீழ்வது காங்கிரசு
ஆகட்டும்!
சூடுகண்ட பூனையாய்
திமுக திருந்தட்டும்!
வாக்கெனும் வேலால்
நீ வெல்கவே!
வெல்கவே!