Tuesday, March 22, 2011

முறைதவறிய கர்ப்பங்கள் யாழில் சொல்லும் நீதி என்ன?

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் இன்றும் ஒருசில நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தின் வடு ஆண்-பெண் சனத்தொகை விகிதாசாரத்தில் காணப்படுகின்றது. ஏனெனில் இப்போர்க்காலத்தில் இப்பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டன! இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையிலும் குறைவாகவே இன்னுமுள்ளது. எனவே; ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதும்; விரும்பிய நேரத்தில் விவகாரத்துச் செய்து கொள்வதும்; திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்று வளர்ப்பதும் பொதுவான காட்சிகளாகவுள்ளன. குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவதனூடாக இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கின்றது. இதன்மூலம் ஆண் - பெண் விகிதாசார இடைவெளியை குறைக்க முயலுகின்றது. பேரூந்து ஓட்டுநர் தொடக்கம் மருத்துவத்துறைவரைக்கும் பெண்களின் முகங்களையே எங்கும் காணமுடியும். இதுதான் இந்நாட்டில் யுத்தம் உருவாக்கிவிட்ட வடு! இத்தைய வடு இலங்கையின் வடகிழக்கை பலதாசாப்தங்களுக்கு பாதித்திருக்கும் என்பது வெளிப்படையான தொன்று!

கள்ளக் காதலால் கருகிய உயிர்,பிறந்த சிசுவை குழி தோண்டிப் புதைத்த சோகம்,கள்ளக் காதல்களால் பாழ்படும் யாழ்ப்பாணம் என்று பத்திரிக்கைகளும் இணையங்களும் தலையங்கங்கள் தீட்டுகின்றார்களே தவிர; இவை ஏன் வந்தன என்றோ -அன்றி இதன் தீர்வு என்ன என்றோ சிந்திப்பதாக தெரியவில்லை!
சுகாதாரத்துறை திருமணமாகாத கருக்கலைப்புகளும் சட்டவிரோத கருக்கலைப்புகளும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள இந்தத்தருணத்தில்; இத்தகைய கொடூரமான தலைப்புகளுடன் வெளியாகும் செய்திகள் எமது சமூகத்துக்கு ஏதோவொன்று பற்றாக்குறையாக இருப்பதை உணர்த்துகின்றது. அதுயாதென்று ஆராயமுனைந்தால் "விழிப்புணர்வு ஏற்படுத்தல்" பற்றிய சமூக அமைப்புகளின் அக்கறையின்மையே என்று புலனாகும்!

நடந்துமுடிந்துள்ள கொடும்போரில் ஆண்கள் பலர் இழக்கப்பட்டமையால்; திருமணமாகாத பெண்கள் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. திருமணமாகாத பெண்களின் அதிகரிப்பே திருமணமாகாத பெண்களின் கருக்கலைப்புகள் அதிகரிக்க ஒரே காரணம்! அதுபோல்; கணவன்மாரை போரில் இழந்து விதவைகளாக உள்ள பெண்களும் இந்த சட்டவிரோத கருக்கலைப்புகளுக்கும் ஏனைய சங்கடமான செய்திகளுக்கும் காரணமாக விளங்குகின்றனர்.

இங்கு; ஒரு விடயத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாக; நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரில் அரைவாசிக்கு மேற்பட்டோர் குடியுறுமை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டில் பெண் பார்த்து திருமணம் செய்கின்றனர். அதேபோல் வெளிநாட்டிலுள்ள ஆண்கள் இலங்கையிலுள்ள பெண்களையே சீதனம் போன்றவற்றையெல்லாம் சிலசமயம் கைவிட்டு; நாடிச்சென்று திருமணம் செய்கின்றனர். இதனால் நடுத்தர பொருளாதார வளமுடையவர்கள் பெரிதும் பாதிப்படையவில்லை என்பதை உணர வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்திலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது பொருளாதரமட்டத்தினைச் சேர்ந்த ஆண்களின் எண்ணிக்கை குறைவால்; முதிர் கன்னிகளாக பெருமளவானோர் இருக்க வேண்டிய இக்கட்டானசூழல் உருவாகியுள்ளது.

பல பெண்கள் சில ஆண்கள் என்ற சூழல் எங்கெங்கு உண்டோ அங்கங்கு முறைதவறிய உறவுகள் உருவாகத்தான் செய்யும். ஆண் - பெண் சனத்தொகை விகிதாசாரம் எங்கெங்கு பெருமளவில் வேறுபட்டு பெரிய இடைவெளிகளில் உண்டோ அத்தகைய இடங்களில் முறைதவறிய உறவுகள் ஏற்படுவது இயற்கையின் நியதி என்பதை பலரும் உணர எத்தனிக்கின்றார்களில்லை! தமிழ் பண்பாடு பாழாகிவிட்டதென்று ஓலமிடுவதுடன் இவர்கள் பணி முடிந்துவிடுகின்றது! பாலியல் சுரப்புகளாகிய ஈஸ்ரோஜினுக்கும் புரோஜோஸ்டிரோனுக்கும் தமிழும் தெரியாது! ஆங்கிலமும் தெரியாது! எந்தமொழி பந்தமும் இல்லை! அது இயற்கையின் நியதிப்படி வேலைசெய்துதானே ஆகவேண்டும்! எனவே தமிழ் பண்பாடு மரணிக்கின்றது என்று ஒப்பாரிவைப்பதில் பலன் எதுவுமில்லை.
முதிர்கன்னிகளின் பெருக்கத்துடன் போரில் கணவன்மார்களை இழந்த இளம் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவதால் இந்த பாலினச்சுரப்புக்களின் தாக்கம் பெரிதும் சமூகத்தில் வெளிப்படத்தான் செய்யும்.

சிலப்பதிகாரம்-மணிமேகலை காப்பியங்கள் அன்றைய காலத்திலும் தாசி குலம் தமிழ்க்குலத்தில் இருந்துள்ளதென்பதை சுட்டியிருக்க - விபச்சாரத்திலும் கொடுமையான ஒன்றை இந்த முதிர்கன்னிகளும் இளம் விதவைகளும் செய்வதுபோல் ஊடகங்கள் வாந்தி எடுப்பது எந்தவகையில் நீதியாகும்?

ஊடகங்களின் இத்தகைய போக்கு ஏற்கனவே மனவாட்டத்துக்குள் வாடியிருக்கின்ற இப்பெண்களுக்கு போடப்படுகின்ற "முள்வேலி" போன்றுதான் உள்ளது! பெண் விடுதலை, பெண் சுதந்திரம், பெண்ணியம் என்று பேசுபவர்கள் இந்தவிடயத்தில் ஊமைகளாகவே உள்ளமையை என்னென்று சொல்வது?

அப்படியானால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்ன?

இளம் விதவைகளுக்கு பெற்றாரோ அன்றி உற்றாரோ மறுபடி புரிந்துணர்வுடைய ஆணுக்கு அல்லது மனைவியை இழந்துள்ள ஆணுக்கு திருமணம் செய்துகொடுக்க ஊக்குவித்தல் வேண்டும்- இதுசார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்!
இந்திய-பாக்கிஷ்தான் பிரிவினையின்போது பாக்கிஷ்தானிலிருந்து பலபெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது; பாதிக்கப்பட்ட பெண்களை இளைஞர் முன்வந்து திருமணம் செய்ய வேண்டுமென்று காந்தி வேண்டியிருந்தார் என்றும் ஆனால் அவரது வேண்டுதலை யாரும் செவிமடுக்கவில்லை என்றும் படித்தநினைவுண்டு. இது பெண்களின் பிழையா? அல்லது இதற்கு ஆண் சமூகத்தின் "கற்பு" தொடர்ப்பான அடக்குமுறை உணர்வு காரணமா? இப்போது ஊடகங்களில் இதுபற்றி எழுதுபவர்களும் இத்தகைய மனோபாவத்திலிருந்துதான் எழுதுகின்றார்கள். கற்பு என்ற பதத்தை தூக்கிப்பிடித்து தமிழரின் மானம் போவதாக வருந்துகின்றார்கள்!!!!

உண்மையில் 'கற்பு' என்ற சொல்லை வைத்து இவர்கள் தமிழரின் மானம் போகின்றது என்று அழுகின்றார்களோ இல்லையோ, விதவைகளின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றி வைப்பதை தடுக்கின்ற விடயமான ஆண்களின் பார்வையிலுள்ள பெண்களிளுடன் தொடர்பான "கற்பு"க்கு அங்கிகாரம் வழங்குகின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்! இந்த உண்மையை ஊடகங்களில் எழுதும் சமூகசீர்திருத்தவாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்!

கற்பு என்பது காதலின் அறவடிவம். பள்ளிக்காதல்,பருவக்காதல்,பல்கலைக்கழக காதல்,திருமணக் காதல் என்று காதல்கள் பலமுறை மலருவதுண்டு.இதுவும் இயற்கை நியதியே! எனவே; கற்பும் அப்படி மறுபடி மலருவதற்கு என்னதடை உண்டு? காதலிக்கும் நபருக்கு நேர்மையுடன் - அறமுடன் இருத்தல் என்பதுதான் கற்புக்கு சொல்லக்கூடிய விளக்கவுரை! அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒழுக்கநெறி! அவ்வளவே! எனவே; இதுபற்றிய விழிப்புணர்வை வழங்கி; விதவைகளுக்கு திருமணம் நடைபெற வழிவகுப்பதுதான் அறிவுடமை! பெண்ணியம் பேணும் செயல்! அதைவிடுத்து; இளம் விதவைகளை வாழ்நாள் முழுக்க; விதவைகளாக இருக்கப் பணிப்பது சமூக ஒடுக்குமுறையின் ஒருவடிவம்!

முதிர்கன்னிகளின் பெருக்கத்துக்கு வறுமையும் ஒருகாரணமாக இருப்பதால் - சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையை பரப்புதல் வேண்டும். இதுசார்ந்த எண்ணிலடங்காத திரைப்படங்களுண்டு. அவற்றை தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பலமுறை தொடர்ந்து ஒளிபரப்புவது இதுபற்றிய விழிப்புணர்வுக்கு ஏதுவாக அமையும். தமிழக முச்சக்கர வண்டிகளில் திருமண வயது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை காணக்கூடியதாகவுள்ளது. அதுபோல் மறுமணம் தொடர்பானதும் சீதனம் தொடர்பானதுமான விழிப்புணர்வு வாசகங்களை எங்கெல்லாம் பேணமுடியுமோ அங்கெல்லாம் பேண வழிவகுத்தல் வேண்டும். எறும்பு ஊர ஊர கல்லும் தேயும் என்பர். "இதுவும் பலனைத் தருமா? " என்று வினா தொடுப்பதை தவிர்த்து; இவற்றின் மூலமும் பலனைப் பெற வழிசமைப்பதுதான் அறிவுடமை!

இலவச திருமணங்களை சமூக அமைப்புகள் ஒழுங்கு செய்வதுடன் அதற்கு ஊடகங்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும். கோபுரங்களை போட்டிக்கு கட்டுவைத் காட்டிலும் சைவ அமைப்புகளும், வெளிநாடுகளில் உள்ள தமிழரின் கோயில் நிர்வாகசபையினரும் இதுபற்றி உரியமுறையில் சிந்தித்தால் சமூகசீர்த்திருத்தத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்திவிடலாம்!

மக்கள் சேவை மகேசன் சேவை என்பதையே நாயன்மார்களும் கடைப்பிடித்தனர். நாவலரும் கடைப்பிடித்தார். ஆனால் சைவ நிறுவனங்கள் இதில் நாட்டமற்று இருப்பது வேதனைக்குரிய ஒன்றே! பிரித்தானியாவிலிருந்து பல்லாயிரம் பவுண்சு செலவில் பெரிய காண்டாமணி ஒன்று யாழ்ப்பாணத்து கோயிலுக்கு செய்தனுப்புவதற்கு ஏற்பாடாகியுள்ளதென்ற செய்தி பலமாதங்களுக்கு முன்னர் இணையங்களில் வலம்வந்திருந்தது. இலங்கைப் பணத்தில் பல்லாயிரம் கோடி மதிப்புடையது என்று புகழாரம் சூட்டப்பட்டிருந்தது. கடவுளுக்கு மணி செய்து கொடுக்க செலவளிக்கும் பணத்தை பயன்படுத்தி பணப்பற்றாக்குறையால் சீதனம் கொடுக்க முடியாது முதிர்கன்னிகளாகவுள்ளவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்க பயன்படுத்துவதனூடாகவும் விதவைகளாகவுள்ளவர்களை திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பெருமளவு சீதனம் வழங்குவதனூடாக விதவைகளின் மறுமணங்களை அதிகரிப்பதன் மூலமும் சமூகத்துக்கு பணிசெய்வது மகேசனுக்கு செய்யும் திருப்பணிக்கு இணையானதே! உண்மையான சைவப்பணியாகவும் அமையும்! வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்ற சுவாமி விபுலானந்தரின் வரிகள் என்றுதான் இவர்களுக்கு பொருளுணர்த்துமோ?

பெண்களுக்குரிய வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் வேண்டும். பெண்கள் சாதுவான வேலைகளுக்கே பொருத்தமானவர்கள் என்ற கருத்து ஒழிக்கப்படல் வேண்டும். பேரூந்து சாரதி என்றாலும் சரி; நடந்துனர் என்றாலும் சரி பெண்களையும் பணியில் இணைக்க வழிவகை செய்தல் வேண்டும். அதிலும் முதிர்கன்னிகளுக்கும் விதவைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். பெண்களுக்கான வேலைவாய்ப்பைக் கூட்டும்பட்சத்தில்; அவர்களுக்குரிய தனிமை விரக்தி தானாகவே நீங்க ஆரம்பிக்கும்! பெண்களின் தனிமை விரக்தியை பயன்படுத்தி அன்புமழை பொழிந்து பாலியல்பலன் பெறுவோருக்கு பெரியதொரு தடையை இதன்மூலம் உருவாக்கலாம். பூனைக்கு யார் மணிகட்டுவதென்று சிந்தித்து இருக்காது; உரியமுறையில் அரசியல்த்துறையைச் சார்ந்தோரும்;சமூக அமைப்புகளை வழிநடத்துவோரும் இதுபற்றி சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள் தொடர்பான அறிவு, ஆணுறைகளின் பாவணை சார்ந்த அறிவு, இலகுவாக- சங்டகமின்றி ஆணுறைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஆகியவற்றை ஏற்படுத்துவது தலையாய பணி! இதில் நாணுவதற்கு ஒன்றுமில்லை! போரினால் உருவான வடுக்களில் ஒன்று ஆண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்! அது பொருளாதரமட்டத்தில் கீழ்நிலையில் உள்ளோரைப் பெருமளவு பாதித்துள்ளது. பாலியற்கல்வி இவர்களிடம் சொற்பமாய்க்கூட இல்லை! எனவே பண்பாடு என்ற ஓப்பாரிகளுக்கு "பொடா-தடா' போட்டு; பாலியற்கல்வியை ஊர் ஊராக சமூக அமைப்புகளுடாக ஏற்படுத்துவதுடன் கருத்தடை மாத்திரைகளையும் ஆணுறைகளையும் இலவசமாகவேனும் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தல் வேண்டும். குறைந்தபட்சம் இவற்றின் பாவனை தொடர்பான அறிவை மக்களிடம் ஏற்படுத்தல் உடனடித்தேவையாகவுள்ளது.ஏனெனில்;
ஆணுறையை வழங்கி எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. அதை பயன்படுத்தும் முறைகளையும்;பயன்படுத்துவதில் உள்ள நுணுக்கங்களையும் விழிப்புணர்வு கூட்டங்களூடாகவும் மருந்தகங்களிலும் மருத்துவமனைகளிலும் சமூக அமைப்புகளூடாகவும் கற்பிக்கவேண்டும்.அதுவே முழுமையான பலனை ஏற்படுத்த வழிவகுக்கும்!

இளம் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்புகளுக்கும் மறைமுகமாக முதிர்கன்னிகளின் பெருக்கம் ஏதுவாக அமைகின்றதை ஏற்றே ஆகவேண்டும். முதிர்கன்னிகள் சமூகப்பிறழ்வுக்கு உள்ளாகும்போது அவர்களைப் பார்த்து இளம்பருவ பெண்கள் தவறான பாதைக்கு தூட்டப்படவாய்ப்புண்டு. அதேநேரத்தில் பருவ வயதினரின் அதிகரித்த கருக்கலைப்புகளுக்கு ஆபாசப்படங்களின் பெருக்கமும் பெருங்காரணமே! எனவே; இதை பெற்றோரும் ஆசிரியர்களும் உரியமுறையில் அவதானமாக அணுகி பருவவயதினரை நெறிப்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

இத்தகைய சமூகநடவடிக்கைகள் தமிழர் பிரதேசங்கள் எங்கும் மலருமானால் - பிறந்த சிசுவை குழிதோண்டி புதைக்கும் கொடுமைகள் தமிழர் பிரதேசங்களில் உருவாகாமல் இருக்க வழிவகுக்கும். கற்பு என்றும் பண்பாடு என்றும் ஒப்பாரி வைப்பவர்களால் சுகாதாரமான நல்வாழ்வுடைய சமூகத்துக்கு எந்தவகையிலும் ஆக்கபூர்வமான விளைவுகளில்லை! இப்போது இதுதொடர்பான உடனடித்தேவையாக தமிழர் பிரதேசங்களுக்கு இருப்பது ஆக்கபூர்வமான செயற்பாடுகளே!

வின் அ வைவ்(WIN A WIFE)/ மனைவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் அவுஸ்ரேலிய வானொலி ஊடகமொன்று முன்னைய சோவியன் ஒன்றியத்தித்தின் பகுதியான உக்ரேன் நாட்டு பெண்களை அவுஸ்ரேலியருக்கு திருமணம் செய்துவைத்தல் தொடர்பான நிகழ்ச்சியை நடத்தியமையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உக்ரைன் மகளீர் அமைப்பொன்று உக்ரைன் பெண்கள் தாசிகள் அல்ல என்று குறித்த அவுஸ்ரேலிய வானொலிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இடைக்குமேல் ஆடையின்றி அரைநிர்வாண போராட்டம் செய்தமையும் உலகமறிந்ததே! இப்படியான இழிநிலை எமது சமூகத்துக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஏற்கனவே இலங்கைக்கு அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக தொழில்நிமித்தம் வந்த வெளிநாட்டார் வடகிழக்கு தமிழ்ப் பெண்களை திருமணம் செய்து தமது நாடுகளுக்கு அழைத்துச் சென்றமையும் நடந்துள்ளது. அதேசமயம் தமது சுகங்களுக்கு தற்காலிகமாய் பயன்படுத்தியமையும் நடந்துள்ளது. எனவே கண் கெட்டபின் சூரிய வணக்கம் செய்து பயனில்லை என்பதை உணர்ந்து ஆக்கபூர்வமாக செயற்பட சமூக அமைப்புகள் முன்வரவேண்டும்! இதுதான் முறைதவறிய கர்ப்பங்கள் யாழ்ப்பாணத்தில் சொல்லும் நீதி!

திவியரஞ்சினியன்

10 comments:

நிதர்சனம்...

அருமையான ஆக்கபூர்வமான பதிவு....

அருமையான பதிவு. தெளிவான அலசல். நீண்ட காலமாக எழுதவேண்டும் என்று எதிர்பாத்திருந்தேன்.. என்னால் முடியவில்லை. முடிந்திருந்தாலும் இவ்வளவு தெளிவான நடையில் எழுதியிருக்கவே மாட்டேன்.. இந்த ஆக்கத்தை நேரடியாக வடகிழக்கு மக்களுக்கு போய்சேர வழிசெய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இணைய வாசகர்கள் பொதுவாக வாசிக்கும் போது உணர்வுகளோடு வாசித்துவிட்டு கருத்துக்கூறிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால் யாரை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதோ அவர்களிடம் இணையப்பாவனை குறைவாகவே உள்ளது. ஏதாவது பத்திரிகை வாயிலாக அவர்களை எட்டும்படி செய்தால் நன்றாக இருக்கும்..

வாழ்த்துக்கள்..

மிகச்சிறந்த பதிவு. தெளிவான சிந்தனை மற்றும் ஆக்கபூர்வமான அறிவுரைகள்.

போரால் பாதிக்க பட்ட பிரதேசங்கள், போரில் பங்கேற்ற பிரதேசங்கள் அதாவது நேரடியாக ஆயுத மோதலீடுபட ஆளணி வழங்கிய பிரதேசங்கள் இரண்டும் வித்தியாசமானவை. இரண்டவது வகையிலெயே ஆண்கள் கணிசமானவளவு உயிரிளக்க சந்தர்ப்பமுண்டு. அந்த வகயில் நீங்கள் குறிப்பிடுபவது இரண்டாவது வகைக்கே பொருந்தும். வட கிழ்க்கின் பெரும்பான்மையான பிரதேசங்கள் முதலாவது வகையில் அடங்குவத்ற்கான சந்த்தர்ப்பம் அதிகம். 2011 குடிசன மதிப்பீட்டை அவதானித்தால் உண்மை புரியும்.

Bt most of pregnants are under 20 yrs no. For that what is ur arguement, because do u suggest to allow those people also. So its better to allow those things to become oue. It may cause to reduce those things in our society.

யாழ்ப்பாணத்தில் முதிர்கன்னிகளும் இளம்விதவைகளும் பெருகியிருப்பது வெள்ளிடைமலை! யாழ்ப்பாணத்திலிருக்கும் இளம்விதவைகள் யாழ் மாவட்டத்தை சார்ந்தோர் மட்டும்தானா? இன்று போரினால் பாதிக்கபட்ட பெரும்பாலான இளம்விதவைகள் உறவினர் வீடுகளிலும் உற்றாரின் வீடுகளிலும் யாழ்ப்பாணத்தில் வசிப்பது "எந்த குடிசன மதிபீட்டால்' உணர்த்தமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை!

அயலில்/வீட்டில்/சுற்றத்தில் ஒரு முதிர்கன்னி சமூகப்பிறழ்வுக்கு உள்ளாகும்பட்சத்தில் -அது இளம்பெண்களுக்கும் அத்தகைய சூழலை இலகுவில் ஏற்படுத்திக் கொடுத்துவிடும். மேலும் இளம்வயது ஆண்-பெண் சமுதாயத்தினரின் சமூகப்பிறழ்வுகளுக்கு ஆபாசப்படங்கள் பெருங்காரணமாக அமைத்திருப்பது உணமையே! பெற்றோரினதும் பாடசாலை ஆசிரியர்களினதும் பொறுப்பில்த்தான் இதற்கு முறையான தீர்வுகாண வழியுண்டு!

கட்டுரையை GTN ஊடக நிறுவன இணையத்தளத்தில் வெளியிடும் பொருட்டு,

"இளம் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்புகளுக்கும் மறைமுகமாக முதிர்கன்னிகளின் பெருக்கம் ஏதுவாக அமைகின்றதை ஏற்றே ஆகவேண்டும். முதிர்கன்னிகள் சமூகப்பிறழ்வுக்கு உள்ளாகும்போது அவர்களைப் பார்த்து இளம்பருவ பெண்கள் தவறான பாதைக்கு தூட்டப்படவாய்ப்புண்டு. அதேநேரத்தில் பருவ வயதினரின் அதிகரித்த கருக்கலைப்புகளுக்கு ஆபாசப்படங்களின் பெருக்கமும் பெருங்காரணமே! எனவே; இதை பெற்றோரும் ஆசிரியர்களும் உரியமுறையில் அவதானமாக அணுகி பருவவயதினரை நெறிப்படுத்தவேண்டியது அவசியமாகிறது."

என்னும் இப்பந்தி மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை கட்டுரையில் இணைக்க வேண்டிய தேவையை உணர்த்திய அனோனிமுசின்(பெயர் குறிப்பிடாத பின்னூட்டதாரர்) அவர்கட்கு, நன்றி

தோழர் சுபானு அவர்கட்கு,
GTN ஊடக நிறுவனம் இக்கட்டுரையை தமது இணையத்தளத்தில் இணைத்து தமிழ்சமூகத்துக்கு கொண்டு சேர்க்கும் பணியை முன்னெடுக்கின்றது. GTN ஊடாக இக்கட்டுரை எம்சமூகத்துக்கு பூரணமாக சென்றுசேரும் என்று நம்புகின்றேன். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

Think Why Not,காகிதப்பூ,Prasad

தங்கள் வருகைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59461/language/ta-IN/article.aspx