Sunday, November 2, 2008

இரத்மலானையில் ஓர் சைவச் சொத்து

பிள்ளையாரிடம் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று தொடங்கி சங்கத் தமிழ் மூன்றும் தா என்று வேண்டுகிறார் ஔவையார் . ஆம்; நான் கல்லூரிக்குள் நுழையும்போது கல்லூரியில் வீற்றிருக்கும் கற்பக விநாயகப் பெருமானின் திருவருளை வணங்காது உள் நுழைவதில்லை. கல்லூரிக் காலத்தில் நாள்தோறும் கற்பக விநாயகனின் நல்லருளாட்சியை நுகர்ந்த அவன் அடியார்களில் நானொருவன் என்பதில் மகிழ்வோடு கூடிய பக்தி எனக்கு.







கல்லூரியில் உயர்தரம் படிக்கும் காலகட்டங்களில் சில துர்சூழல்களால் நான் எதிர்கொண்ட துயர்களையெல்லாம் தூர ஓடச் செய்தவன் கற்பக விநாயகன். நான் தவறு விட்டபோதெல்லாம் என் காதுக்குள் வந்து சொல்வது அவன் வழமை. என்மீது பழிசுமத்தியவர்களை வெட்கித் தலைகுனிய வைக்கவும் அவன் பின்னின்றதில்லை.என் கல்லூரி வாழ்வியலோடு அவனது அருளாட்சி கமழ்வது இன்றுகூட என் அகத்தினில் அது தொடர்வது எல்லாம் எம்பெருமான் சிவன் செயல்தான்.
கற்பக விநாயகன் எங்கள் கல்லூரியில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொதுவானவன். எல்லோருக்கும் எல்லோரும் சொல்வது இந்தக் கோயிலில் சக்தியுண்டு என்ற வாசகத்தையே!


இரத்மல்லானை என்றால் இரத்-மல் என்று சிங்களத்தில் பிரித்து சிவப்பு-மலர் என பொருள் கொள்ளலாம். இராவணன் சிவப்பு மலர்களால் சிவபெருமானை வழிபட்ட இடம் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது எனபர். குறித்த இரத்மல்லானையில் கோட்டை இராச்சிய காலத்தில் சிங்கள மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயத்தினை போர்த்துக்கேயர் இடித்தழித்தபின்னர் கோயில் இல்லாக்குறையுடன் இவ்வூர் விளங்கியது. இந்திய வம்சாவளித் தமிழர் பிரசாவுரிமை சட்டத்தின் அடிப்படையில் இலங்கை பிரசைகள் அல்ல என்று இலங்கையரசால் திருப்பியனுப்பப்பட முன்னர் இங்கு இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழ்ந்தனர். எனவே இங்கு இந்துக் கல்லூரி எனும் பெயரில் சைவக் கல்லூரியை நிறுவிய தமிழ்த் தலைவர்கள் சைவப் பாராம்பரீயத்துடன் தமிழ் மாணவர்கள் படிப்பதற்கு வழிசமைத்தனர். எனினும் கோயில் இல்லாக்குறை காணப்பட்டது. குறித்த குறையை 1995களின் பின்னர் அதிபர் திரு.ந.மன்மதராஜன் அவர்களின் அயராத முயற்சியால் பல சைவத் தலைவர்கள், ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் யாவரும் ஒன்றுகூடி கற்பக விநாயகர் எனும் திருப்பெயருடன் பிள்ளையார் ஆலயம் அமைத்து அங்கு சைவ மறுமலர்ச்சிக்கு அத்திவாரம் இட்டனர்.( குறித்த சிதைவுகளுடன் கூடிய சிவாலயமும் இன்று பராமரிக்கப்படுகின்றது)

தற்போது அதிபர் திரு.ந.மன்மதராஜன் அவருடைய அரும் முயற்சியாலும் ஆசிரியர்களின் பங்களிப்பினாலும் மாணவர்களின் உதவியினாலும் குறித்த கற்பக விநாயகர் ஆலயம் பெருப்பிக்கப்பட்டு மீள்பிரதிட்டை பண்ணப்பட்டுள்ளது.











பெருப்பிக்கப்பட்டு மீள் பிரதிட்டை செய்யப்பட்டு விளங்கும் கற்பக விநாயகர் ஆலயத்தின் ஒளிப்பதிவை என் உற்றதோழன் கஜந்தன் youtubeஇல் இனைத்து எனக்கு youtubeஇன் url ஐஅனுப்பிவைத்தார்.



யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு இணங்க இங்கு அந்த youtubeஇல் உள்ள ஒளிப்பதிவை இணைத்துள்ளேன். அத்தோடு ஆலய ஆரம்பத் தோற்றத்துக்குரிய புகைப்படங்களையும் இங்கு இணைந்துள்ளேன்.



எங்கள் கல்லூரியில் எழுந்தருளி நல்லாட்சிபுரியும் கற்பக விநாயகனின் திருவருள் தங்களையும் ஆள எல்லாம் வல்ல அவனது திருவடிகளை தொழுகின்றேன்.