Tuesday, August 17, 2010

அறிஞர் அண்ணா கொல்லப்பட்டாரா?

பயப்படாதீர்கள்.....அறிஞர் அண்ணா இயற்கை எய்தியது இயற்கையாகத்தான். ஆனால் அவரது கொள்கைகள் உயிரோடுள்ளவரை அவரும் உயிரோடு இருப்பார் என்பது பொதுசனங்களின் நம்பிக்கை. ஆனால் பொதுசனங்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார்கள் அண்ணாவின் வாரிசுகளே! அது அண்ணாவைக் கொன்றதுபோல்தானே?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதுபோல் அண்ணாவின் கொள்கைகளை கொன்றமைக்கு ஒரு எளிய உதாரணத்தை இங்கு பார்ப்போம்!

அறிஞர் அண்ணா, ஒருமுறை பழைய மன்னர்கட்டிய கோயிலை பார்க்க வேண்டியிருந்தது. அப்போது தன்னுடன் உடனிருந்தவரிடம் "இந்தக் கோயிலைக் கட்டிய மன்னன் யார்?" என்று வினாவினார். விழிபிதுங்கிப் போய்விட்டார் உடனிருந்தவர்! "தெரியவில்லை.......இங்கு எங்கையும் கட்டிய மன்னரின் பெயரை எழுதிவைக்கவில்லை...எழுதியிருந்தால் பார்த்துச் சொல்லலாம்" என்றார் உடனிருந்தவர்.
பலமாக சிரித்த அறிஞர் அண்ணா; "இத்துணூண்டு டியூப் லைட்டை (புளோர் ஒளிர்வுக்குழாய்) கொடுத்தவன் தனது பெயரை கொட்டை எழுத்தில் எழுதியுள்ளான் பாரு! இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டிய மன்னன் தனது பெயரை பதிவுசெய்ய தவறியுள்ளபோது, இவனோ கொட்டை எழுத்தில் தனது பெயரை ஒராண்டுக்கும் தாக்குப்பிடிக்காத இந்த டியூப்லைட்டில் எழுதியுள்ளானே...!" என்று சிரித்துவிட்டுச் சென்றார்.

சென்னைப் புறநகர் வளாக அமைப்புக்கு அடிக்கல் நாட்டியது.....துவக்கப்பட்டது என்று போட்டிபோட்டு கல்வெட்டு தீட்டியுள்ளன அண்ணாவின் வாரிசுகளைப் பாருங்களேன்...!!! ஒன்று அண்ணாவின் அருமை கருணாநிதியரின் விளையாட்டு...மற்றையது அண்ணா என்ற பெயரைச் சுமந்த கட்சியின் தலைவியின் விளையாட்டு!!!




டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிய தாம்பரம் பேருந்து நிலையத்தில் அவரது கூத்தைப் பாருங்களேன்.....! ஏதோ அவர் சொந்தப்பணத்தில் கட்டியதுபோல் தனது பெயரை விளப்பரப்படுத்தியுள்ளார்.



அரசு பணம் என்பது மக்கள் பணமே ஒழிய முதலமைச்சரினதோ அன்றி அமைச்சர்களினுடையதோ அன்றி சட்டசபை உறுப்பினர்களுடையதோ அல்ல!!! எனவே அரசு பணத்தில் கட்டிய கட்டிடங்களுக்கு கட்டியவர்கள் வைக்கும் தமது பெயர் பலகைகள்,கல்வெட்டுகளைப் பார்க்கும்போது கடவுளே......மன்னராட்சியா நடைபெறுகின்றது என்று எண்ணத் தோன்றியுள்ளது!!!
கல்வெட்டுகளை செதுக்கி இவ்வளவு மிரமாண்டமாக நிறுவுவதற்கு செலவாகும் மக்கள் பணத்துக்கு நீதி கேட்டு எங்குபோய் போராடுவது?

புளோர் ஒளிர்வுக் குழாயை தனது சொந்தப்பணத்தில் ஆலயத்துக்கு கொடுத்தவன் தனது பெயரை கொட்டெழுத்தில் எழுதியிருந்ததைப் பார்த்து சிரித்த அண்ணா, மக்கள் பணத்தில் அரசுப் பணியில் அமைக்கப்படும் கட்டிடத்தொகுதிகளுக்கு தமது பெயரை "பெரும் செலவீனத்தில்" பொறிக்கும் அண்ணாவின் வாரிசுக்களை, அண்ணா "மேலுலகில் இருந்து" காண்பாராயின் எவ்வளவு வேதனைப்படுவார் ஐயகோ!!!


தமிழகத்தில் ஓடுகின்ற பேருந்துக்களில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் படத்தைப் பாருங்களேன், இதில் "நீ நான் என்றால் உதடு ஒட்டாது என்றும் நாம் என்றாலேயே உதடுகள் ஒட்டுகின்றன " என்று தத்துவம் பேசியுள்ளார். காலங்காலமாக தமிழில் புழக்கத்தில் உள்ள இந்த தத்துவவரிக்கு "கலைஞர்" என்று பெயர்கொடுத்து மெதுவாக அவரையும் திருவள்ளுவர் தானத்துக்கு உயர்த்திவிட்டுள்ளார்கள் திருத்த முடியாத கழுதையர்கள்.ஈழநாட்டுத் தமிழர் வேறு நான் வேறு என்று வெட்டிவிட்டவரின் தத்துவப்பேச்சைப் பாருங்களேன்!!!

கடவுளே, எல்லாம் தமிழினம் செய்த ஊழ்வினையோ? உன்னைத்தவிர வேறுயாராலும் தமிழரைக் காப்பாற்றமுடியாது!!!

Wednesday, August 4, 2010

யாழ்.போதனா வைத்தியசாலையும் தலைகுனியவேண்டிய தர்மவான்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயிற்சியின் நிமித்தம் பத்துநாட்கள் போயிற்று வந்தேன். மருத்துவ மாணவனாக என் வாழ்நாளில் மகிழ்வோடு பணியாற்றி அனுபவக் கல்வியை அதிகளவு நுகரும் பேறுபெற்ற நாட்கள் என்று இந்தப் பத்துநாட்களையும் சொல்லலாம். சத்திரசிகிச்சைப் பிரிவில் பயிற்சிக்கு நின்றமையால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவை ஆதாரமாகக்கொண்டு இங்கு என் கட்டுரை வைத்தியசாலையை ஆய்ந்து செல்கின்றது.

மருத்துவர் திரு.ரவிராஜ் ஐயாவின் சத்திரசிகிச்சை நோயாளர் படுக்கைத்தொகுதி ஓரளவுக்கு சிறப்பாகப் பேணப்படுகின்றது.புதிதாக கட்டி,திருத்தி அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி என்பதை பார்க்கும்போது புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.ஆனால் ஏனைய சத்திரசிகிச்சைக்குரிய பிரிவு நோயாளர் படுக்கைத் தொகுதிகள் தரத்தில் "சாதரணம்" என்றுகூட முத்திரை குத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஒருசில படுக்கைத்தொகுதிகள் புதிதாக நுழைபவர்களை மயக்கிவிடும் துர்மணத்துடன் விளங்குகின்றன! இவற்றின் மணங்குணங்களுக்கு இசைவாக்கமடைய இருநாட்கள் பிடித்துவிட்டது எனக்கு! ஒருசில நோயாளர் படுக்கைத்தொகுதிகள் நோயளர்களின் மலசலகழிவு கூடத்துடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. அவை உரியமுறையில் கழுவப்படுகின்றன என்றால் சரியான விடையில்லை!

சிஸ்டோஸ்கோப்பி(cystoscopy) என்ற மூத்திரப்பையை ஒளியியற்கருவி கொண்டு காணொளியில் அவதானிக்கும் மருத்துவப்பரிசோதனையை பொதுவாக அதில் நிபுணத்துவமுடைய மருத்துவரே பார்ப்பது முறை! இதில் நிபுணத்துவமுள்ள மருத்துவரை யூரோலோஜிஸ்ட்(urologist) எனப்படுவர். ஆனால் அங்கு பொதுசத்திரசிகிச்சை மருத்துவரே இந்தமருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுகின்றார். காரணம் வினாவியபோது யூரோலோஜிஸ்ட் இல்லையாம்! ஒரு பேச்சுவாக்கில் செவிவழியாகப் பெற்றுக் கொண்ட செய்தி மருத்துவர்களுக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றதாம்! ஆனால் பாராட்டப்பட வேண்டிய விடயம் யாதெனில் குறைந்த வளங்களைக் கொண்டு சிறந்தமுறையில் உச்ச பயனை நோயாளர்களுக்கு வழங்கும் வைத்தியசாலை நிர்வாகத்தைத்தான்! தற்போது பணியாற்றும் சத்திரசிகிச்சை மருத்துவர்களை பார்த்தபோது அவர்கள் படுகின்ற வேலைப்பளுவையும் அதற்கு மத்தியில் சேவைநோக்கில் செயற்படும் அவர்களின் உழைப்பையும் யாழ்சமூகம் மெய்ச்சிப் பாராட்ட வேண்டும்.
மருத்துவ மாணவர்களுக்கு போதிக்கவேண்டிய கடமையுணர்வையும் பெரும்பாலும் அனைத்து வைத்தியர்களிடமும் காணக்கூடியதாக இருந்தது. யாழ் மண்ணில் கல்வியின் வளம் மங்காமைக்கு இந்த சேவைநோக்கம் எல்லா ஆசிரியரிடமும் பொதுவாக இயல்பில் குடிகொண்டிருப்பதால் என்றே எண்ணத்தோன்றியது! உண்மையும் தான்!

காட்டுபிராண்டித்தனமாக வெறிபிடித்து கைகளில் இருந்த துப்பாக்கிகள் கொண்டு மருத்துவனை வைத்தியர்களையும் தாதியர்களையும் சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவத்தினரின் பாவத்தைப் போக்குவதற்கு காசியில் போய் மூழ்காது இந்திய அரசு CT SCAN இயந்திரத்தை நன்கொடையாக அளித்துள்ளது. காசியில் போய் மூழ்கினாலும் போகமுடியாத பாவம் என்பதை உணர்ந்ததால்த்தானோ இந்த நன்கொடை என்ற எண்ணத்தை ஊட்டுகின்றது CT SCAN அறைக்கு அருகாமையிலிருக்கும் கொல்லப்பட்ட மருத்துவப் பணியாளர்களின் உருவப்படங்கள்! சரி இந்தப் பாவத்துக்கு பரிகாரம் தேடியாயிற்று! சில ஆண்டுகளுக்கு முன் செய்த பாவங்களுக்கு...........உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
நான் யாழ் போதனா வைத்தியசாலை மட்டுமல்ல,சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை,களுபோவில வைத்தியசாலை என்பவற்றையும் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஏனைய இரு வைத்தியசாலைகளையும் வைத்தியசாலைகள் என்றே அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கு சிறப்பான கட்டிடத்தொகுதி, நோயாளர் படுக்கைத்தொகுதிகள்,மருத்துகள் என்று சிறப்பாகப் பேணப்படுகின்றன!

ஆனால் யாழ்.போதனா வைத்தியசாலையின் தொண்ணூறு வீதமான பகுதிகள் பாழடைந்த வீட்டையே நினைவுபடுத்துகின்றன! ஒரு கட்டிடத்தொகுதி இப்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. மருந்துகளுக்குப் பெருந்தட்டுப்பாடு! வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைதருகின்ற நோயாளர்களுக்கு "வெளியில் வாங்குங்கள்" என்பது மருத்துவர்கள் மனமில்லாது சொல்லுகின்ற வார்த்தை! பல நோயாளிகள் படுத்திருப்பதற்கு கட்டில்கள் பற்றாக்குறையால் நடைபாதையில் பாய்விரித்துவிட்டு படுக்கவைக்கப்பட்டுள்ளனர்!
ஒரு மருத்துவர் மருந்தொன்றை எழுதி வைத்தியசாலை மருந்தகத்தில் வாங்குப்படி பணித்தார். பதினைந்து நிமிடங்கள் கழித்து அதே நோயாளி மீட்டும் வந்து "ஐயா இந்த மருந்து வைத்தியசாலை மருந்தகத்தில் இல்லையாம்" என்றார். மருந்துவருக்கு வந்தது கோபம்! "இந்த மருந்துகூட இல்லாவிட்டால் பிறகு எதுக்கு வைத்தியசாலையை நடத்த வேண்டும்" என்று சினந்து கொண்டார். வெளியில் வாங்கும்படி பணித்தார். இதுதான் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருந்தகத்தின் நிலை!
*மருந்துகள் பற்றாக்குறை!
*நோயாளர் படுக்கைத்தொகுதிகளில் உள்ள கட்டில்கள் பற்றாக்குறை!
*மருத்துவர் பற்றாக்குறை!
*கட்டிடத்தொகுதிகள் பாழடைந்த வீடுகள்போல் உள்ளன
இதுதான் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நிலை!

என்னோடு பயிற்சிகளில் ஈடுபட்ட மாணவர் "தான் சிறுவயதில் இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது.இப்போதும் இப்படித்தான் உள்ளது" என்று என்னிடம் கூறினார் நான் மனம் வெந்தபோது!

இது இப்படியிருக்க நல்லூர் கோயில்,இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம் உட்பட ஒருசில ஆலயங்களுக்கு செல்லும் பேறுகிட்டியது. நல்லூர் ஆலயத்தில் ஒருபக்கம் கோபுரம் கட்டி திருத்த வேலைகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. இணுவில் பரராசசேகரப்பிள்ளையாருக்கு சென்றபோது பணவளமுள்ள ஆலயம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.நான் சென்ற ஏனைய ஆலயங்களில் பெரும்பாலானவை புதிய கோபுரங்கள் எழுப்பப்பட்டவையாகவோ அல்லது இடித்துக் கட்டப்பட்டவையாகவோ அல்லது புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டவையாகவோ காணப்பட்டன! எல்லாம் வெளிநாட்டுப் பணம் என்பதை விசாரித்தபோது விளங்கியது! அந்த வெளிநாட்டுப் பணத்தில் ஒருசிறு பங்கையேனும் யாழ்.போதனா வைத்தியசாலையை வளப்படுத்த செலவழித்தால் எவ்வளவு நன்மை பயற்கும்! ஏழைகள் தமக்குரிய மருத்துகளை வைத்தியசாலையிலையே பெற்றுக் கொள்வர். வைத்தியசாலையும் சிறந்தமுறையில் தனது பணியை சமூகத்துக்கு செய்யக்கூடியதாக இருக்கும்!

அரசாங்கம் செய்யவேண்டியது என்று ஒருசிலர் சொல்வர்! இப்போது கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள ஒருசில கட்டிடத்தொகுதிகள் நெதர்லாந்து நாட்டு அரசாங்கக்கொடையால் விளைந்தவை! எனவே நெதலாந்து நாடே உதவிக்கரம் நீட்டியுள்ளபோது........எம்மவர்கள் ஏன் உதவக்கூடாது? அரசாங்கம் உதவ வேண்டுமென்று யாழில் உள்ள எம்முறவுகளை கவனிப்பாரற்று கைவிடுவது முறையா? இந்து கலாச்சாரத் திணைக்களம் / அமைச்சு ( சைவப் பண்பாட்டு அமைச்சு / திணைக்களம் என்பதே சரியான பெயரீடு) பார்க்கவேண்டிய வேலையை வெளிநாட்டில் இருந்து நம்மவர்கள் பணம் அனுப்பி பார்க்கும்போது சுகாதார அமைச்சு பார்க்கவேண்டிய வேலையை ஏன் பார்க்கக்கூடாது?
பயனடையப்போவது யாழில் உள்ள ஏழைமக்களே!தமிழ் அரசியல்வாதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையை வளப்படுத்த உரியமுறையில் செயற்படுவார்கள் என்றால் ஏழை நோயாளர்கள் செய்த புண்ணியம் என்றே சொல்லலாம்!

யாழில் உள்ள பணங்கொழுத்துப் போயுள்ள ஆலயங்கள்கூட இந்தப் பணியில் ஈடுபடலாம்! இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் பணத்தில் வளர அருகில் உள்ள செகராசசேகரப் பிள்ளையார் ஏழ்மையில் வாடுகிறார். செகராசசேகருக்கு பண உதவிசெய்து வளர்த்துவிட்டால் பிறகு பரராசசேகரப் பிள்ளையாருக்கு மதிப்புக் குறைந்துவிடுமே என்ற ஏக்கவுணர்வில் அவரை ஏழையாகவே கைவிட்டுள்ளனர் பரராசசேகரரின் பக்தர்கள்! இது இப்படியிருக்கையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உதவமுன் வாருங்கள் என்று கேட்பது கொஞ்சம் "தினாவெட்டாகத்தான்" உள்ளது!!!!

தெகிவளை ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு பரல் பலராலாக ஊற்றிய பாலால் தெகிவளை கழிவுநீர் வெண்ணிறமாய் காட்சியளித்தது என்று அன்பர்கள் சிலர் நவின்றனர். வெளிநாடுகளில் இருந்து பரல் பரலாக நேர்த்திக்கடனைத் தீர்க்க பால் ஊற்றும்படி கட்டளையாம்! உள்ளூர்வாசிகளும் தாம் சளைத்தவர்களில்லை என்பதை இந்தப்பால் ஊற்றலில் காட்டுவார்களாம்! நான் இறைவனுக்கு பால் ஊற்றி அபிடேகம் செய்வதை எதிர்க்கும் அறிவற்ற நாத்தீகவாதியல்ல! பகுத்தறிவுள்ள இறைநம்பிக்கையாளன். இறைவனுக்கு அபிடேகத்தின்போது ஒருகுடமோ அன்றி மூன்று குடமோ அல்லது ஒன்பது குடமோ பால் ஊற்றுவதில் தவறில்லை! ஆனால் "பரல் பரலாக" பால் ஊற்றி ஒரு பிரதேசத்தின் கழிவுநீரையே வெண்ணிறமாக்கும் விசயத்தில் உடன்பாடில்லை! ஏழைச் சைவர்களுக்கு உதவ முன்வந்தால் அதுவே மிகச்சிறந்த சைவப்பணி! இறைவனை மகிழ்விக்கும் பணி!

சிவபூமி அறக்கட்டளை நிதியம் புற்றுநோயளர் பிரிவில் பூங்கா அமைத்து கொடுத்துள்ளது. அந்தப் பூங்கா புற்றுநோயாளர்களுக்கு மட்டுமன்றி வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளில் உள்ள நோயாளர்களும் பயன்படுத்தும் இடமாக திகழ்கின்றது. சிவபூமி அறக்கட்டளை நிதியம் தன்னால் இயன்றுள்ள அளவுக்கு உதவியிருக்கையில்.....வெளிநாட்டில் இருந்து குடும்ப பணபலத்தை நிறுபிக்க பெருவிழா ஆலயங்களில் எடுக்கும் செல்வந்தர்கள் சிந்தித்தால்.......தமிழுணர்வுள்ளோர் முயன்றால் யாழ்.போதனா வைத்தியசாலையை மருத்துவமனைகளுக்கு முன்னுதாரணமான மருத்துவமனையாக மாற்றியமைக்க முடியது. அதுமட்டுமல்ல ஏனைய தமிழ் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளையும் வளப்படுத்த புலம்பெயர்ந்தோர் முன்வருவார்களா?

யாழ் போதனா வைத்தியசாலையின் தரத்தைவிட தாழ்வான தரத்திலேயே ஏனைய தமிழ் மாவட்ட பொது மருத்துவமனைகள் இருக்கும் என்பதை எவரும் உய்த்துணரலாம். எனவே தமிழ் மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை உரியமுறையில் வளப்படுத்த தமிழ்ச் சமூகம் முன்வருமா?தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழியுண்டு! MRI போன்ற நவீனவசதிகள் கொண்ட பொது மருத்துவமனைகளை எமது மாவட்டங்களில் எம்மவர்கள் ஏற்படுத்துவார்களா?இதற்கென ஒரு நிதியத்தை தமிழுணர்வாளர்கள் செயற்படுத்துவார்களா? மருத்துவப் பணி இறைபணிகளில் சிறந்த பணி என்பதை அன்பர்கள் உணர்ந்து கொள்வார்களா?