Wednesday, August 20, 2008

சரத்குமாருக்கு தமிழை உச்சரிக்கும் தகுதியில்லை.

என் தமிழக உறவுகளே,

நான் தமிழன் என்னும் உரிமையோடு உங்களுக்கு சில உண்மைகளைப் பரிமாறும் நோக்கில் எழுதுகின்றேன். நடிகர் சரத்குமார் என்று ஈழத்தமிழர் அவரை ரசிப்பர். ஆனால்? நடிகர் சரத்குமார் இலங்கைக்கு உலக இந்துமாநாடு நடந்தவேளை வந்திருந்தபோது முதல்முறை நான் நேரில் கண்டேன். அவரது திருமதியுடன் வந்திருந்தார்.
இலங்கையில் சக்தி தொலைக்காட்சி அலைவரிசையில் மின்னல் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி வருகை தந்திருந்தார்.அப்படி ஒருமுறை வந்திருந்தபோது சக்தி தொலைக்காட்சி நிலையத்தில் நேரிலே சந்தித்தேன் இரண்டாம் தடவையாக. நான் அன்று அங்கு வேறு ஒருதேவை காரணமாக சென்றிருந்தேன். அவரிடம் கையொப்பம் வாங்கவும் தவறைல்லை அம்முறை.
இலங்கைக்கு வந்தவர்.........இலங்கைத்தமிழரின் துன்பத்தை நேரில் கண்டவர்...............ஆனால் ஒருவார்த்தை தமிழகத்தில் ஈழத்தமிழர் பற்றி பேசினார் இல்லை. ஏன்?
இலங்கையில் அவரது திருமதியாரின் ராடன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் அரங்கேறவேண்டும்.சக்தி தொலைக்காட்சி இலங்கையின் சிங்கள பின்புலத்தையுடையது.எனவே அவரின் இலங்கை வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரே ஒரு நோக்கம்தான்.

இன்று இவர் நடிகர் சங்கத்தலைவர். கர்நாடகத்திற்கு எதிராக பெரிய அளவில் அமைதிப்போராட்டத்தை நடத்தியவர். உடனே எல்லோரும் இவர் தமிழ் உணர்வாளர் என்று முத்திரை குத்திவிட்டனர்.அதை பயன்படுத்தி நடிகர் ரஜனி கர்நாடகத்தில் மன்னிப்பு கேட்டதற்கு கண்டன அறிக்கைவேறு இவரிடமிருந்து.
அரசியல் கட்சிவேறு தொடங்கி உண்மையாகவே நடிக்கும் நடிகர் இவர்.
கர்நாடகத்தில் தமிழன் அடிக்கப்பட்டான் என்று கொதித்தெழுந்தவருக்கு ஈழத்தில் தமிழன் கொல்லப்படுவது கண்ணாலே கண்டும் தெரியவில்லை. கண்ணிருந்தும் குருடர்களாக!
ஒருவன் இல்லை இருவர் இல்லை............ஒரு இலட்சம் பேர் இறந்துவிட்டனர் யுத்தத்தால். பல இலட்சம் பேர் உயிர்காக்க நாடு விட்டு நாடு சென்று அகதியாய் வாழ்கின்றனர்.
உலக செய்தியாய் வந்துவிட்ட ஈழச்செய்தியை ஈழம் சென்றும் தெரியாத இவர் எப்படி தமிழ்பற்றுப்பற்றி பேசும் உரிமைபெற்றார்? கன்னட ரஜனியிடம் தமிழ்பற்றை அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கும் உரிமையை இந்த தமிழ் வேடதாரி எங்கனம் பெற்றார்?
கன்னடத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய துணிந்தவர் ஈழத்தமிழருக்காய் போராட்டம் செய்ய வேண்டி நாம் நிற்கவில்லை தமிழன் எனும் அடைமொழியைக் காட்டி அவரிடம்.
இலங்கை கடலோரத்தில் இறக்கும் தமிழக மீனவருக்காய் ஒரு ஆர்ப்பாட்டம்? இலங்கை அரசை இவருக்கு பகைக்கதுணிவு வராது. ஏனெனில் இலங்கையில் இவரின் மறைமுக வர்த்தகத்திற்கு ஆபத்துவந்துவிடக்கூடாதல்லவா! கர்நாடகத்தில் ரஜனி சொத்து வைத்துள்ளதாக கொக்கரித்த இவரிடம் கொக்கரித்தது நியாயமா என்று கேட்கும் உரிமை சாதரண ஒவ்வொருவருக்கும் உண்டே!
வேண்டுமென்றால் தமிழக உறவுகளே ஒரு விண்ணப்பம் உங்களிடம். இலங்கை அரசால் கொல்லப்பட்ட மீனவருக்கு ஆதரவாய் ஒரு உண்ணாவிரதபோராட்டத்தை நடத்தக்கோருங்கள்.
நடத்தினால் "தமிழக"உணர்வு உண்டு. இல்லாவிட்டால் வெறும் திரையரங்கு தாக்கியதால் ஏற்பட்டவிளைவுதான் தமிழ் திரையுலகின் போராட்டம் என்க.
நடிகர் சரத்குமார் தமிழராய் நடிக்கும் நல்ல நடிகர் என்க.அவ்வளவே. ( இவர்களுக்கு தமிழ்பற்றை காட்ட ரஜனி எனும் தனிமனிதன். அவ்வளவே இவர்கள் பற்று என்று உணர்க.)

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

ஈழத்தமிழர் வாழ்வியலை தலைப்பின் கருப்பொருளாய் கொண்டு கட்டுரை எழுத்தினால் அரசியல்வாடை அடிப்பதை தவிர்க்கமுடியாது.அதுதவிர்க்கமுடியாதது. தவிர்த்தால் பார்ப்பனீய ஊடகங்களைப்போல் என் எழுத்தும் தமிழால் சபிக்கப்பட்டுவிடும்.எனினும் அரசியல் வாடையைக்குறைக்க இந்த கட்டுரையில் விரும்புகின்றேன். எல்லாம் நல்லதற்கே!

நரகம் உண்டா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் இருக்கட்டும் ஒருபக்கம். நரகத்தைக் பார்க்கவிரும்பினால் வாருங்கள் இலங்கைக்கு. இங்கு தமிழர் நரகத்தில் வாழுகின்றனர் சொர்க்கத்தை உருவாக்கும் கனவில். உளியை எந்தி சிலர் சொர்க்கத்தை செதுக்கும் சிற்பிகளாய் நிற்கின்றனர்.
இதுதான் இலங்கையில் தமிழர் எனும் என் விளக்கம். பொருள் புரிந்தால் அப்பாடா என்று ஒரு பெருமூச்சு!

அதுசரி எங்கள் புலம்பெயர்ந்தோர்? அதுதானே என் எழுத்தின் நோக்கம் இப்போது.
ஆண்ட இனம் அடிமையாய் எங்கும். புலம்பெயர்ந்தவன் அகதி எனும் அடைமொழியில் அல்லல்படும் அவதி தனிக்கதை. தமிழன் மீது பாய்கின்ற பொருளாதார ஆயுதங்களை பொடிப்பொடியாக்க இவன் இரத்தத்தை பணமாக்கி உறவுகளுக்கு அனுப்பும் ஒருசாரார். குடும்பமாய் குடியேறி நிம்மதி தொலைத்து தென்னைமரத்தடியில் நுங்கு குடித்து நல்லூர் திருவிழாவில் பிரதிட்டை அடித்த அந்த பழைய நினைவுகளுடன் ஒருசாரார். இப்படி இப்படி பல வகைப்படுத்தலுள் ஈழத்தமிழினம் வாடுது புலம்பெயர்ந்து.
இவர்கள் சந்ததி? ஒரு மயூரன் இரண்டு மயூரன் இப்போது இருக்கிறான் அடுத்த சந்ததி எனும் அடைமொழிக்குள் தமிழ்மானத்துடன்.
கேட்கும்போது ஆனந்தமாயுள்ளது. (இதுயாரடா அந்த மயூரன் என்று என்னைக் கேட்காதீர்கள்............இறுதி உலகக்கிண்ண துடுப்பாட்டத்தை பார்த்தவர்களைக் கேளுங்கள்)

ஆனால் அதற்கடுத்த சந்ததி? எனக்கு தெரிந்ததற்கு புலம்பெயர்ந்துவாழும் அடுத்தசந்ததியை சேர்ந்தோரில் பலருக்கு தமிழ்மொழியில் எழுதத்தெரியாது.சிலருக்கு தமிழ் கதைத்தால் விளங்கும்.ஆனால் கதைக்கத்தெரியாது. அப்படியானால் எங்கே போகப்போகின்றது எங்கள் நாளைய சந்ததி?
உண்மையைச் சொன்னால் எனக்கு புலம்பெயர்நாடுகளில் தமிழ்கல்விப் கற்பித்தல் எவ்வளவுதூரம் வரவேற்கப்பட்டுள்ளதென்று தெரியாது.ஆனால் தமிழ் பயிலுவோர் சொற்பம் என்பது புரிகின்றது.

உலகில் ஒரே ஒரு இனந்தான் உள்ளது தன் இனத்தை இனப் பண்பாட்டைப்பற்றி அக்கறையற்றதாய். அது எங்கள் தமிழினந்தான். இன உணர்வாளர்கள் என்னை மன்னிக்கவேண்டும்.
ஆனால் உண்மையிதுதான். இன உணர்வாளர்கள் எனும் அடைமொழி உருவானது எதனால்? ஆயிரம்பேரில் ஒருவன் விசித்திரமானவன் விநோதமானவன் எனின் அவனுக்கு இயல்பாக அடைமொழி அவனுடைய இயல்போடு இணைந்து உருவாவது இயல்புதானே! ஐந்து நண்பர்களில் ஒருவர் சற்று பருமனாக இருந்தால் "குண்டா" என்று செல்லமாக மற்றைய நண்பர்களால் அழைக்கப்படுவதுயில்லையா? அதுபோல்த்தான் இதுவும். ஆறரைக்கோடி( இப்போது எவ்வளவு என்று தெரியாது) தமிழகத் தமிழர்களில் குறிப்பிட்ட சிலரையே இன உணர்வாளர்கள் எனும்போது எங்கள் தமிழினத்தின் தமிழ்ப்பற்றை இன்னும் சொல்வதற்கில்லை.அதிலும் சிலரின் தமிழ்வேடம் மாநிலத்திற்குள் மட்டும் தான். ரஜனிரை எதிர்க்கமட்டும்தான் தமிழ் உணர்வுவரும்.( சரத்குமாரைத்தான் சொல்லுகின்றேன்...........என்னடா புது வில்லங்கம் என்று தோன்றுதா? அவர் பெயரில் தலைப்பிட்டு புது கட்டுரையில் சந்திகின்றேன்.அதுவரை மண்டையைப்போட்டு குழப்பாமல் சிந்திக்கவும்.)

சரி......சரி........புலம்பெயர்தமிழரிடமே வருகின்றேன். தமிழ் உணர்வு உள்ளத்தோடு உறவாடவேண்டும். ஆனால் எனக்குத்தெரிந்த இரண்டு பாட்டிமார் தாம் சந்திக்கும் போது தமிழை மறந்துவிடுவது அவர்களது நோய். ஆங்கிலத்தில்தான் கதைப்பர். நான் நினைத்துக் கொள்வது ஓகோ இவர்கள் "ஸ்போக்கின் பிரக்ட்டிஸ்" பண்ணுகிறார்கள் என்று. இதே நோய்தான் புலம்பெயர்ந்த குடும்பங்களில் உள்ள பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது. "எங்கட புள்ள இங்கிலிசுல படிக்குதுல்லே" என்று நினைப்பதில் பெருமை. சரி ஆங்கிலத்தில் படிப்பது பெருமையாகவே இருக்கட்டும்.தமிழில் வீட்டிலே கதைத்தால்தான் என்ன? தமிழில் வீட்டில் கதைப்பதுமட்டும் போதாது. தமிழை படிக்கவைக்கவேண்டும். தமிழ் வரலாற்றை தெரியவைக்கவேண்டும். இலக்கணம், இலக்கியம் முறையாக படிப்பித்தல் வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்கும் உங்கள் பிள்ளைக்கு தமிழில் தேர்ச்சியிருந்தால் எத்தனை எத்தனை சேர்.பொன்.இராமநாதன்கள் உருவாக வாய்ப்புண்டு. இதுபோல் டோச்சு,பிரான்சு என்று தமிழும் பல மொழிகளில் வளருமே!

பெற்றோரே, தமிழை அறியாத பிள்ளைகள் தாய்ப்பாசத்தை உணர்வார்கள் என்று கனவு காணாதீர்கள்."மொழியபிமானம் சமய அபிமானம் இல்லாதவர் வாழ்வும் ஒரு வாழ்வா" தாமோதரம்பிள்ளையார் சாடுவது உரைத்தால் தமிழினம் மோட்சம் பெறும். அதுவரை தமிழின உணர்வாளர் எனும் அடைமொழி ஒருசிலரை அலங்கரிக்கத்தான் செய்யும். ஆனால் நான் கெஞ்சுவது அந்த அடைமொழியை வேடதாரிகளுக்கு வழங்கிவிடவேண்டாம் என்பதே.

Monday, August 18, 2008

அம்மா

அம்மா............
சைவமும் தமிழும்
தமிழ் மண்
நினைவும்
தந்தை தமையன்
தம்பி மீதுள்ள
பாசமும்
குருமாரிடம் கொண்ட
பக்தியும்
கந்த புராணம்
பெரிய புராணம்
கற்றுப் பெற்றதல்ல!
அம்மா நீ-தந்த
பாலாலே என்னுள்
வந்ததம்மா!

மறு பிறவி
நீ பெற்றால்
பத்துத் திங்கள்
ஒதுக்கிவிடு எனக்காய்-உன்
கருவறையை!
சிவ லோகம்
வைகுண்டம் சொர்கலோகம்
எதுவரினும் அது
துறந்து ஓடோடி
வந்திடுவேன் பாரிற்கு!
உன் ஓராட்டு
ஒக்க தமிழ்
மறை திரு
முறை திருமந்திரம்
ஏதேனும் வந்திடுமா?

இரசியா நங்கை

அழகான நங்கையரின்
தேசமிது!

அன்ன நடை
மின்னல் இடை
கொடி ஒக்க
மேனி
தசும்பொக்க தனங்கள்
பிரம்மன் செதுக்கிய
வதனம்
வாழைத் தண்டின்
வளத்தைப் பெற்ற
தங்கக் குறங்கு
பெண்ணழகுக் களஞ்சியம்
இந் நாடே!

இரசியா அழகு
மாந்தரின் அந்தப்புரம்

அரை குறை
அத்தவானம்
கிளுடையே கீழாடை
படத்திற்கு பஞ்சம்
அம்பலமாகும் அழகுகள்

அகத்திணை கண்டதெல்லாம்
கனவு
இங்கு அதெல்லாம்
நனவு

பாரிலே அழகு
வல்லியரின் வீடு
இரசியா தானாம்!

ஆயினும்
பூ இல்லை
பொட்டில்லை
கொழுநனை பூசிக்கும்
புனிதமான அகமில்லை

முழுமதி அழகுதான்
வாழின் தெரியும்-வாழ
இயலா இடம்
அது என்று!

மதியில் வாழின்
புரியும் பாரின்
இலாவணியம்!
இரசியா இளங்கொடியை
இல்லக் கிழத்தியாக்கின்
தமிழ் காரிகையின்
பேரழகு தானே
புரியும்!

Sunday, August 17, 2008

புத்தக வாசிப்பும் மென்பொருள் விளையாட்டுக்களும்(TV GAME)

"ஓடி விளையாடு பாப்பா ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று பாரதி குழந்தைகளை கொஞ்சுகின்றான். அந்தக் குழந்தைகள் வளமாக வளர்வது பெற்றார்கள், பள்ளி ஆசிரியர்களின் கைகளிலேயே உண்டு. ஒரு குழந்தைக்கு தாய்பால் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு நல்லபிள்ளையாக வளர்வதற்கு ஏற்ற சூழல் அமைவது அவசியமாகும்.அவற்றில் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை அறிமுகப்படுத்துவது பிரதானமானதாகும்.வாசிப்பு பழக்கம் என்பது சுய அறிவு வளர்சிக்கு அடிப்படையானது. ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பர். அதற்கு இன்றியமையாதது வாசிப்பு பழக்கம். கணனியில் விளையாட்டு மென்பொருட்களை ஏற்றி குழந்தைகளை விளையாடத்தூண்டும் இன்றைய சூழலில் வாசிப்பு பழக்கத்தால் வரும் நன்மைகளை அறியவைத்தல் பொருத்தம் என்று உணருகின்றேன்.குழந்தை வயிற்றில் இருக்கும்போதே குழந்தை வெளியுலகை உணரும் திறன் பெற்றுவிடுகின்றது. மருத்துவவிஞ்ஞானம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை நமது பண்டைய சில புராணக்கதைகள் கூட தெளிவுபடுத்தியுள்ளது. கர்ப்ப பருவத்தில் பிரகலாதன் இருக்கும்போது நாரதரின்மூலம் நாராயண திருநாம மகிமையை அறிந்துகொள்கிறான். அதன் பலனாக பிறந்தபின் நாராயணன் பக்தனாக மிளிர்கின்றான்.அதாவது குழந்தைப் பருவம் எதனையும் இலகுவில் கிரகித்து உள்மனதில் பதிவுசெய்யும் பருவமாகும். அந்தப் பருவம் தாத்தா பாட்டி சொல்லும் கதைகளில் கதாநாயகனாக வரும் பாத்திரத்தை உள்ளத்தில் இருத்தி அதுபோல் தாமும் வரவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும். எனவே அந்தப் பருவத்தில் நல்ல நல்நெறிக்கதைகளை ஊட்டவேண்டியது அவசியமானதாகும்.இன்று T.V GAME பிரபல்யமாகிவிட்டது. சிலர் இது பிள்ளைகளில் புத்திசாலித்தனத்தை கூட்டுகின்றதென்று வாதாடுகின்றனர். சில பெற்றோர் பிள்ளை ஆசைப்பட்டு கேட்டுவிட்டதென்று வாங்கி கொடுத்து அந்த ஆசையை நிறைவேற்றிவிட்டதாக அகம்பூரிக்கின்றனர். ஆனால் உண்மையில் நடப்பது T.V GAME இல் வரும் வன்முறைகளை ஆழ்மனதில் பதித்துக் கொள்கின்றனர். இன்று விரசமான T.V GAMEமும் வந்துவிட்டது.அரைகுறையாய் நிற்கும் பெண்ணின் மேனியில் சில பகுதிகளில் சுடப்படவேண்டிய குறி வந்துநிற்கும். உடனே குறிதவறாது சுட்டுவிட்டால் புள்ளிகள் கூடும். இப்படி பல வகைகளில் இவை வந்துவிட்டன.இவற்றை விளையாடும் பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி வளருவார்கள் என்று நீங்களே சிந்தியுங்கள்.என்னுடைய ஆய்வில்( ஆய்வில் என்றவுடன் நான் ஆயிரம்பேரை இதற்காக தெரிவு செய்து வளர்த்து பெற்ற அவதானிப்புக்களின் பேறு என்று முடிவுகொள்ளவேண்டாம். என்னோடு படித்த மாணவர்களை அவதானித்து பெற்றமுடிவு) நல்ல புத்தகங்களை சிறுவயதில் இருந்து வாசிப்போர் தவறானவழியில் போவது இல்லை என்றே சொல்லலாம். புத்தகத்தினை தொட்டே பார்க்காதவர்கள் தெரு தாதாக்களாய் உருவாகின்றனர்.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன? அறநெறி நூல்களை..........அறநெறிக்கதைகளை வாசிக்கும் குழந்தைகள் அறநெறி வழுவ வாய்ப்பு சொற்பமே.வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்கும் என்பர். சிறுவயதில் அறநெறிகதை படிக்கும் குழந்தைகள் வளரும்போது வாசிப்பதை விருப்பாக பொழுதுபோக்காக கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு பள்ளிப்புத்தகம் திறந்துபடிப்பது பஞ்சிபடும் விடயமாக இருக்காது. வளரும்போது இலக்கியப் புத்தகங்கள்........வரலாற்றுப்புத்தகங்கள்...........பத்திரிகைகள்.........நாட்டுநடப்புக்கள் என்று அவர்கள் தங்கள் அறிவை தாமே வளர்த்துக் கொள்வார்கள். நாட்டுக்கேற்ற நற்பிரசைகளாய் மலருவார்கள்.நாட்டின் தலைவர்கள்...........அறிஞர்கள்.........ஒழுக்கமுள்ளவர்கள்.......சமுகப் பிரதிநிதிகள்..............என்று எவர் வாழ்க்கையேனும் எடுத்து ஆராய்ந்திருந்தீர்களே ஆனால் அவர்கள் வாழ்க்கையோடு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உறவாடியிருப்பதை நன்குணரலாம். "என் புள்ள பொண்டாட்டி பேச்சைக்கேட்டு கைவிட்டுட்டான் பாரு" என்று கண்ணீர் வடிக்கும் பெற்றோரிடம் நான் கேட்கும் கேள்வி உங்கள் பிள்ளைக்கு நன்னெறி கதைகள் வாசிக்கும் பழக்கத்தை தூண்டினீர்களா சிறுவயதில் அவனிருக்கும் போது என்பதேயாகும். இன்று முதியோர் இல்லங்கள் பூக்கக் காரணம் இதுதான்.சிறுவயதில் புத்தகங்களின் பெறுமதியை பிள்ளைகளுக்கு அறியப்படுத்தாமல் இருந்துவிட்டு வந்த மருமகள் மீது குற்றம் காண்பதில் நியாயமில்லை. நல்ல பிரசைகளை உருவாக்க புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை பிள்ளைகளிடம் உருவாக்குங்கள். அதற்காக ராணி கமிக்ஸ் வாங்கி கொடுக்கச் சொல்லவில்லை. அதை மறந்திடாதீர்கள். வாங்கி கொடுக்கச் சொல்வது அறநெறி....நன்னெறி........புத்தகங்களையே. குழந்தை நடைபயிலும்போது நல்ல அறநெறிப் படங்கள் உள்ள புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். பிள்ளை அங்கு எதையும் வாசிக்கப்போவதுயில்லை. ஆனால் குழந்தைக்கு புத்தகத்தோடு ஒரு உறவை ஏற்படுத்த அப்புத்தகத்திலுள்ள படங்கள் ஏதுவாக அமையும். அது நாளை புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்கும்.அதுதான் தேவை! "குழந்தைகள் நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்பினிலே"

தமிழும் துரோகமும்

அப்படியாம் இப்படியாம்
உப்படியாம் என்று
ஆயிரம் சேதிகள்
பழந்தமிழ் நிலம்
பற்றி!

பெருமை.........!
பெருமை.........!
பெருமை.........!

வேங்கடமும் இன்றில்லை!
கதிர்காமத்தில் ஓமுக்கே
இடமில்லை!
புத்தளமும் இழந்த
மாதிரித்தான்!
சென்னை தமிங்கில
நாடாகும் புதினம்
பக்கத்தில்த் தான்னுள்ளது!
போகப் போகப் தமிழ்நிலம்
கரைந்து போகுது!

சுனாமியோ கடலரிப்போ
அல்ல!
கயவர்கள் விட்ட
விடுகின்ற தவறுகளால்!
தமிழா நீ
திருந்தவே மாட்டாயா..........? ************************************************************************************** துரோகத் தமிழா........!
உன் கொப்பனின்
குருதி தமிழின்
வம்சமா?
அன்றி உன்
கோத்தையின் முந்தாணை
தமிழிடம் இல்லையா?

தரணியில் எத்தனை
இனமுண்டு!
இந்த தமிழினம்
ஒக்க ஓரினம்
இல்லை!

பத்துப்பேரில் ஒருவன்
துரோகி!
எப்படி இந்த
மலிவு?

விபூடணன்...........
எட்டப்பன்............
காக்கைவன்னியன்..........
அப்பப்பா...........!

நேற்றும் இருந்தது
இன்றும் உண்டு
நாளையும் இருக்கும்!
மலிவோ மலிவு
பத்தில் ஒன்றென்ற
மலிவு!

தமிழ் தாயின்
கரு வறையில்
என்னதான் குறை.....?

மறவர்கள் பூக்கும்
கருவறையில் புழுக்களின்
பிறப்பு எப்படி?
ஐயகோ!
என் தாயின்
கருவறையில்
என்னதான் குறை.........?! ************************************************************************************

Friday, August 15, 2008

என் வாழ்வியலில் பெண்

கருவறை
குருதி
போசணை
தந்தவள்.................
தந்தையை காட்டியவள்
சுற்றத்தை தெரியவைத்தவள்
தமிழோடு சைவத்தை
பாலிலே ஊட்டியவள்
தாய் எனும்
பெண்!
அவள் என்
தெய்வத்திற்கு
சமன்!

செவிலித் தாயாய்
ஓவியம் தீட்டிப்பட்ட
ஆசான்கள் பல!
என்னை மகவாய்
ஏற்ற ஆசான்கள்
சில!

அக்கையராய் என்னை
ஆண்ட உறவுகள்
பல!
தம்பியராய் என்னை
ஏற்ற உறவுகள்
சில!

நட்பெனும் முகவரியில்
நான் கண்ட
பெண்கள் பல!
தோழியெனும் உறவை
ஊட்டியவை சில!
தங்கையாய் மிளிர்ந்தவை
சில!
தங்கையாய் வாழ்ந்தவை
சில!
வாழ்பவை சில!
அண்ணராய் ஏற்ற
அழகுகள் சில!

காதல்

நோக்கையில் மின்னல்
பாயும்

அகத்தில் மீட்டுகையில்
இறக்கை பூக்கும்

சின்ன சின்ன
பரிசங்களில் இதய
சுருதி தடுமாறும்

காமம் கொஞ்சம்
விளையாடும்

உயிர் நன்றாய்
உருகும்

வெய்யவுயிர்க்கும் நோய்
பற்றிக் கொள்ளும்

அகம் தன்
நூலகளை பரிமாறிப்
படித்திட துடிக்கும்

கூடிக் குலாவி
வாழ உள்ளம்
தூண்டும்

இது தான்
காதலின் ஓவியம்!

காதல் காமத்தின்
அழகு படுத்திய
முகம்
கல்யாணம் அதன்
அனுமதிப் பத்திரம்
நாலுபேர் நவிலக்
கேட்ட துண்டு!

எண்பதில் தம்பதிகள்
பரிமாறும் கொஞ்சு
தமிழ்.......

என்னங்க இந்த
மாத்திரை...........
நீ போய்த்
தூங்கு முதல்ல.........

இதன் வடிவம்
காமமாயின் காதல்
காமமாகவே இருக்கட்டும்!

தடை

என் பேச்சுக்கு.............
என் எழுத்துக்கு..........
என் செயலாக்கத்திற்கு.............
தடைகள் பூக்களாம்!
கனவுலகில் நான்
மிதப்பதை ?

படைத்த பரமனுக்கும்
உரிமை யில்லை-கனவு
காணாதே என்று
என்னை கட்டிவைக்க!

ஆதலால் கனவுகள்
காணுவேன்................
கனவுகள் காணுவேன்..............
கனவுகள் காணுவேன்..............!!!

Thursday, August 14, 2008

தமிழ்

***********************************************************************************
அந்த சிவனின்
மகளே
என்னை யாளும்
தமிழே

தமிழகம் உன்
மாராப்பு!
ஈழம் உன்
பாவாடை!
இல்லை இருக்கு
சர்ச்சைக்கு இடமளிக்கும்
இடை-இராமன்
இட்ட பாலமோ!

***********************************************************************************

யாழ் என்று
பறைகையிலே தேன்
பாயுது நாடி
நாள மெங்கும்!

மட்டு நகர்
என்றதுமே மறம்
மெய்யில் ஊறுது!

திரு கோண
மலை சிவனருளை
என்னுள் கூட்டுது!

வன்னி என்றதுமே
தமிழ் காப்பகமாய்
மலர்ந்துள்ள நிதர்சனம்
என்னைத் தலைநிமிர
செய்யுது!

புத்தளம் என்றதுமே
தமிழ் முத்துகள்
தோன்றுது!

ஈழத்தின் வடகிழக்கு
என்றதுமே என்
அணுவெல்லாம் புல்லரிக்குது!

*************************************************************************************

Tuesday, August 12, 2008

வணக்கம்

என் நெஞ்சில் பூக்கும் பூக்களின் வாசத்தை தமிழ் பாரோடு பகிரும் உவகையில்................."பறைவேன்"

நன்றியுடன் திவியரஞ்சினியன்