Tuesday, December 21, 2010

தமிழ்ப்பார் இழந்துவிட்ட தமிழ்மறைக் காவலர்

தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் தனது 96 அகவையில் நேற்று (20ம் திகதி) கொழும்பில் காலமானார்.

1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.1965இல் தமிழரசுக் கட்சியில் கிளிநொச்சியில் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

திருக்குறளை தமிழ்மறை என்று தமிழ்முழக்கம் செய்து; தமிழ்மறைக் கழகத்தை அமைத்து; திருக்குறள் மாநாடுகளை நடத்தி தமிழ்ப்பாரை வளப்படுத்திய பேரறிஞர். அரசியலினூடாக தமிழை செம்மைப்படுத்த அயராது உழைத்த அருமையுடையவர். கிளிநொச்சி மண்ணில் பாடசாலைகள் மலர ஏதுவாக இருந்து அங்கு கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்மறம் படைத்தவர்.

திரு.கா.பொ.இரத்தினம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இவர்; தமிழ்மறைக் காவலர் என்று அறிஞர்களால் போற்றப்பட்டார்.மேலும் திருக்குறள் செல்வர்', 'குறள் ஆய்வுச் செம்மல்', 'செந்தமிழ்க் கலைமணி', 'உலகத் தமிழர் செம்மல்'
போன்ற பட்டங்களுக்கு பொருளாக விளங்கினார்.

"உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தோடு பல ஆண்டு காலமாக நெருக்கமான தொடர்புகளைப் பேணியதோடு மட்டுமல்லாது அதன் வளர்ச்சியிலும் வளத்திலும் மிகுந்த அக்கறை கொண்டு இயங்கி வந்த திரு கா. பொ. இரத்தினம் அவர்கள் நமது உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் 08-01-1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப விழாவில் வாழ்த்துரை வழங்கி அதன் தோற்றத்தை அப்படியே ஆசிர்வதித்து வாழ்த்தியவர்.அதோடு மட்டுமல்லாது தொடர்ச்சியாக நமது இயக்கத்தின் வளர்ச்சியிலே கண்ணும் கருத்துமாக இருந்தவர்" என்று உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த இப்பெரியாரின் இழப்பை உலகத் தமிழரின் பேரிழப்பாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பதிவுசெய்துள்ளது அருமை மகன் இழந்த துயரிலுள்ள தமிழ்த்தாய்க்கு ஆறுதலை அளித்திருக்கும் என்பது திண்ணமாகும்.

பேரிழப்பில் வாடிநிற்கும் தமிழுலகின் வேண்டுதல் யாதாயின் ஐயாவின் வழியில் அரசியலில் உள்ளோர் தமிழ்மொழியை ஆய்ந்தறிந்து தமிழ்ப்பணிக்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதேயாகும்.

2 comments:

நிழற்படம்-நன்றி தமிழ்வின்