Sunday, December 11, 2011

தமிழ் திரைப்பட நடிகர்களும் நம் சனங்களும்!!!!

இந்தக் காணொளியை தற்செயலாக அவதானிக்க வேண்டி வந்தது. காணொளியை பார்த்ததும் ஆச்சரியப்படவில்லை! நம்மவரின் முட்டாள்த்தனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக திரைப்பட நடிகர்களை பாராட்டத் தோன்றியது! நீங்களும் ஒருதடவை பார்த்துவிட்டு மீதிப்பகுதியைப் படிக்க.



திரைப்படக்காரர்களுக்கு பிழைப்புத்தான் முக்கியம் என்பதை நம் சனங்கள் புரிந்து கொள்ளும் காலம் எப்போதோ? கப்டன் என்பார்.....எந்த இராணுவத்துக்கு என்றால் முழிப்பார்! இளைய தளபதி என்பர்.....எந்தப் படைக்கு என்றால் திணறுவர்! தல என்பர்........என்னத்தை சாதித்த தலைவர் என்றால் மௌனிப்பர்!

பிழைப்புக்காக இங்கொன்று அங்கொன்று என்று இடத்துக்கு ஏற்றாற்போல் பேசி வயிற்றுப்பிழைப்பு நடத்தும் கூட்டத்தை தலையில் கொண்டாடும் சமூகத்துக்கு விடிவுவர வாய்ப்புண்டோ?

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள திரைப்படத்துறை அதனுடைய அரசுக்கு முழு ஆதரவையும் தெரிவித்து இருக்க; தமிழக திரைப்பட நடிகர் பட்டாளம் சமரத்தொனியில் ஆலோசனை கூறும் அருமையில் ஒழிந்திருக்கும் பெருமை என்ன என்பதை நம்மவர் தெளிந்து கொண்டால் நடிகர்களுக்கு பால் ஊற்றி நீராட்டும் இரசிகப்பெருமக்கள் வாடுவர்! அது திண்ணம்!

எங்கே தமது திரைப்படங்களுக்கு கேரளாவில் சிக்கல் வந்துவிடுமோ என்ற பேதிமாத்திரை வயிற்றுள் சென்ற விளைவுதான் "சமரசத் தொனியில்" ஆலோசனை வழங்கும் அரும்பெரும் பண்புக்கு காரணம்!!!!! ஆனால் கேரள திரைப்படத்துறையினர் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவே இல்லை பார்த்தீர்களா? அதுதான் கேரளா இந்தியாவில் உரிமையுள்ள மாநிலமாக விளங்க காரணம்!!!!!
இந்தியா அரசியலை தீர்மானிக்கும் மாநிலமாக விளங்க காரணம்!!!

எங்கள் சனங்கள் திருந்துவார்களா? சூரியன் மேற்கில் உதிக்குமா?

Sunday, September 11, 2011

"கலைஞர்" என்று சொல்லும் நா நாவோ?

யூடியூப் காணொளிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அருமையான காணொளி என் கண்ணுள் வந்து என்னை பல கேள்வி கேட்டது!!! என் நெஞ்சறையில் நிசப்பதம்! நிசப்பதத்தின் முடிவில் கருணையில்லா நிதியை பெற்ற தாயை திட்டித்தீர்க்கும் கோபம் பெருக்கெடுத்தது! தமிழர் செய்த பாவத்தின் சம்பளம் கருணையில்லா நிதி என்று விதி எழுதியிருக்கையில் அந்தத் தாயை கோபித்து என்ன பயன்?

அது என்ன காணொளி? ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெருமகன் திரு.அப்துல்கலாம் ஆற்றிய உரை!!!!!! தமிழுக்கு அங்கு அவர் பெருமை சேர்த்த அழகை எந்தத்தமிழரும் விழா எடுத்து கொண்டாடவில்லையே என்றபோது பெருந்துன்பம் பெருக்கெடுத்தது! என் நெஞ்சறை நிசப்பதமானது!


இப்படிப்பட்ட அருமையான தமிழ்மகனை மீண்டும் இந்திய தேசத்தின் சனாதிபதியாக்க உடன்படாத கருணையில்லா நிதியை "கலைஞர்" என்று சொன்னால் தமிழ் மன்னிக்குமா? இந்திய தேசத்தின் சனாதிபதி தெரிவு மீண்டும் வந்தவேளை கருணையில்லா நிதியின் தயவில் காங்கிரசு இருந்தது.ஆனால் எங்கே திரு.அப்துல் கலாமின் புகழ் தமிழ்நாட்டில் தன்னைவிட ஓங்கிவிடுமோ என்று பயந்து மீண்டும் அப்துல்கலாமை நியமிக்க எந்தவிதமான முனைப்பையும் காட்டாது "மௌனமாய்" இருந்த கயவனை "கலைஞர்" என்று சொல்லும் நா........தமிழ் வாழும் நாவோ?

தமிழைச் செம்மொழியாக பிரகடனம் செய்த இத்தகு அருமையான தமிழ்மகனுக்கு......இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த பெருமகனுக்கு
செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பிதழையே அனுப்பாது அவமதித்த கருணையில்லா கயவனை 'கலைஞர்' என்று துதிபாடும் வாய்களுக்கு மரணத்திலும் வாய்க்கரிசி இல்லாது போக தமிழ்த்தாயே நீ சபித்துவிடு!

ஐயகோ....! இந்தத் தமிழ்மகன் இப்போதும் சனாதிபதியாக தொடர்ந்து இருந்திருக்கும் கௌரவத்தை பெற்றிருந்தால்........மூன்று பேர் மரணத்தின் பிடியில் வாடுவார்களா? அப்படியொரு கொடுமை நடந்திருக்குமா?

உங்கள் நெஞ்சறை என்ன சொல்கின்றது?

பிற்குறிப்பு - அப்துல்கலாமின் காணொளி இருக்கும் இப்பதிவில் கருணையில்லா நிதியின் நிழற்படத்தை இணைப்பதே பாவம்!

Monday, July 18, 2011

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய பூசைமொழி சமஸ்கிருதம்

தமிழருடைய இசைமொழி கர்நாடகமும் தெலுங்கும் சமஸ்கிருதமும்

தமிழருடைய நாகரீகமொழி ஆங்கிலம்

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய திருமண நிகழ்வில்கூட தமிழ் இல்லை! ஏன் நாகரீகத்தமிழரின் மாப்பிள்ளையின் ஆடையில்க்கூட தமிழ்சால்பு இல்லை!

தமிழருடைய மரண நிகழ்வு பூசையில்கூட சமஸ்கிருதம்!

உலகிலேயே தன்னுடைய மொழியைவிட இன்னொருமொழியை புனிதம்....மந்திரசக்தி என்று கதையளக்கின்ற இனம் இருக்குமென்றால் அது தமிழினம் தான்!

உலகிலேயே தன்னுடைய மொழி அல்லாத இன்னொருமொழியில் பாடி ஆடி குதுகளிக்கும் என்றால் அது தமிழினம் தான்! கேட்டால் இசைக்கு மொழியில்லை!!!!

மெத்தப்படித்த ஒரே இனத்தைச் சார்ந்த இரண்டுபேர் தமதுமொழியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடினால் அது தமிழினம் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை!

காதலை சங்கத்தமிழர் கொண்டாடினர். ஆனால் இன்று.....காதலைச் சொல்லக்கூட தமிழை பயன்படுத்த மறுக்கின்றனர் திரையிலும் நடைமுறையிலும்! ஆக; தமிழுக்கு தமிழரிடத்தில் மதிப்பே இல்லை!

இப்போது சொல்லுங்கள் தமிழனுக்கு தமிழ் எதற்கு?

அடப்போங்கோ.....தமிழன் இப்படி உணர்ச்சிபூர்வமாக ஏதேனும் இருந்தால் படித்து ஒருகணம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டு, ஏதேனும் சமாதனம் சொல்லி தன்வேலையை பார்க்கத்தொடங்கிவிடுவான்!

Friday, May 27, 2011

சுவாமி தூக்குவதிலும் சாதியா? கடவுளே!

தமிழகத்தில் சென்னையிலுள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, சுவாமி வீதிவலம் வந்து கொண்டிருந்தார். சுவாமியை பிராமணர் மட்டுமே மாறிமாறி தூக்கினர். மெதுவாக அங்கிருந்த ஒருவரை சாதரண பக்தர்கள் தூக்கக்கூடாதா என்று கேட்டேன். பிராமணர் சுத்தமானவ்ர்....எனவே தீட்டுப்படாது! ஆனால் ஏனையவர் எப்படி என்று தெரியாதே என்றார். காஞ்சியில் கருவறையில் செய்யாத அசுத்தத்தையா சாதரண பக்தர் செய்துவிடுவர் என்று கேட்க என்னுடைய நாக்கு துடித்தது.ஆனால் அடக்கி அமைதியாகி வீடு திரும்பினேன்!

பிரதோசவிரதம் அன்று இப்படித்தான் சென்றிருந்தபோது உட்பிரகாரத்துக்கு நுழைவதற்கு பணம் அறவிட்டனர்! மசூதியிலும் தேவாலயத்திலும் நடைபெறாதது...எமது கோயில்களில் மட்டுமே நடைபெறுவது......பணம் அறவிடுவது! என்ன கொடுமை சரவணா?

சண்டேசுவரர் பிரகாரம் இருக்குமிடம் தெரிந்தால்த்தானே பிரதோச சுற்றுமுறைபடி கோயிலை வலம்வர முடியும்? எனவே; அங்கு பற்றுச்சீட்டு விற்பவரிடமும் பின்னர் நிர்வாகத்துறையினரிடமும் கடிந்து கொண்டேன்! ஏழைகள் விரதமிருந்தால் அவர்கள் எப்படி இப்போது கோயில் பிரகாரத்தை விரதவிதிப்படி சுற்றமுடியும் என்று நான் கேட்டகேள்விக்கு கடவுள் வந்துதான் விடைசொல்ல வேண்டுமென்று அங்கிருந்த பெண்மணி ஒருவர் என்னோடு சேர்ந்து தன்குறையை கூறி அமைதியானார்.

நாயன்மார்களை சாதரண பக்தர்கள் தூக்க அனுமதிக்கப்பட்டிருந்ததையும் நாயன்மார்களை தூக்கி வலம்வந்தபோது பூசகர் எவரும் நாயன்மார்களுடன் செல்லாமல் இருந்தமையையும் மீண்டும் நாயன்மார் ஆலயத்துக்கு வந்ததபோது ஆலயவாசலில் பூசகர்களுக்காய் நாயன்மாரை காக்கவைத்து இருந்தமையையும் கண்டு மனம் வெந்துபோனேன்! அப்போதுதான் விளங்கியது நாயன்மார் என்றால் பூசகர்களைப் பொறுத்தவரை சாதரணமானவரே என்பது! இதில் என்ன வேடிக்கை என்றால் சிவன் பார்வதியைத் தூக்குவதற்கு முண்டியடித்த பிராமணர் எவரையுமே காணவில்லை நாயன்மாரின் வீதிவலம் நடந்தபோது!

நாயன்மார்களின் பெயரை தமது பெயர்களாகவோ அல்லது தமது பிள்ளைகளின் பெயர்களாகவோ கொண்ட பிராமணரைக் காட்டுவீரா என்று ஒரு திராவிடக்கட்சி நண்பன் என்னிடம் கேட்டிருந்தான்! அந்தக்கேள்வியை ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ படித்த நினைவு வந்தது. அப்போதும் சரி; அவன் கேட்டபோதும் சரி அதற்கு விடைசொல்ல முடியவில்லை! எனக்குத் தெரிந்த பிராமணர் பலரை நினைவு படுத்தினேன். எவரின் பெயரும் நாயன்மாரின் பெயரைக் கொண்டிருக்கவில்லை! ஆனால் நாயன்மாரை தூக்குவதற்கு எந்தவொரு பிராமணரும் முனைப்புக்காட்டாமையை கண்டபோது அறுபத்திமூன்று நாயன்மார்களையும் தமிழகத்து பிராமணர் எவ்வளவு மதிக்கின்றனர் என்று முழுமையாகப் புரிந்தது! சமயகுரவர் நால்வருக்குமே இந்தநிலை என்றால் ஏனையவரைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா? திருஞானசம்பந்தர் என்ற பிராமண ஞானக்குழந்தையின் பெயரைக்கூட தமது பிள்ளைகளுக்கு வைக்கவிரும்பாத இவர்களை என்னவென்று சொல்வது? இவர்களுக்கு கைலாயம் கடைசிவரை கிடைக்காது என்பது திண்ணம்! ஆனால் அதை பூலோகத்தில் என்று இவர்கள் உணர்வர்! அன்றுதான் பூலோகத்தில் சைவசமய மறுமலர்ச்சி ஏற்படும்! அதுவரை எல்லாம் பூச்சியமே!

வீட்டிற்கு வந்து இதுபற்றி பெரியப்பாவுடன் கடிந்து கொண்டேன். பலவிடையங்கள் இப்படி சமயக்கருத்துக்களில் முரண்பட்டு வாதிடுவதுண்டு.சமயவிடயங்களில் அவரோடு கலந்துரையாடுவதில் எனக்கு அலாதிப்பிரியம்! அவர் சொன்னார் "கோயிலுக்கு எதற்குப் போனாய்? கடவுளைக் கும்பிடத்தானே? நீ கடவுளைப் பார்.... கடவுளை இவற்றைப் பார்த்துக்கொள்வார்' என்று என்னை அமைதிப்படுத்தினார். நான் மட்டும் கும்பிட்டால் போதுமா? ஏனையவரும் கும்பிட வேண்டாமா? கடவுள் பார்ப்பார் என்று அநீதியை சும்மாவிட்டுவிட முடியுமா? அது எமது இயலாமைக்கு நாம் சொல்லிக்கொள்ளும் சமாதானம் தானே? பாவத்தைக் கண்டும் காணாது இருப்பது பாவத்துக்கு துணைபோகும் செயலல்லவா? இப்படியான வினாக்கள் என்னுள் எழுந்தன! என் உணர்வுகளை ஆமோதித்தன!

பிராமணத்துவ சாதித்துவத்தை காசியில் கொண்டுபோய் கரைக்கும்வரை நாத்தீகவாதம் தமிழகத்தில் செழித்தபடிதான் இருக்கும்! ஆயிரம் ஆயிரம் பெரியார்கள் பிறந்தபடிதான் இருப்பர்! மதமாற்றம் பெருத்தவண்ணமே இருக்கும்! உலகமெல்லாம் பரவியிருந்த சிவவழிபாடு......தெற்காசியா என்று சுருங்கி இன்று இந்தியா என்று ஒடுங்கிவிட்டது! அதுவும் சைவசித்தாந்தம் ஆதீனங்களுக்குள் முடங்கிவருகின்றது! இந்த நிலை எமது சமயத்துக்கு ஏன் வந்தது?

யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் திருவிழா காணொளி இணைக்கப்பட்டுள்ளது. பார்க்க!


பிராமணர் அல்லாதவர்களே சுவாமி தூக்குகின்றனர்! இப்படித்தான் இலங்கை கோயில்கள் எல்லாவற்றிலும்! இதனால்த்தான் எத்தனை துன்பம் வந்தபோதும் போர்த்துக்கேயர் தொட்டு துன்பவரலாற்றையே சைவசமூகம் கண்டபோதும் சைவநெறி இலங்கையில் தமிழர் பகுதிகளில் செழிப்புற்று இருக்கின்றது! இளைஞர் ஊர் கோயில்களோடு ஐக்கியமானவர்களாகவே இருப்பர்! சுவாமி தூக்குவது தொட்டு ஆலயத்தின் பெருப்பாலான பணிகளை பிராமணர் அல்லாதவரே செய்வர். அதாவது பிராமணத்துவ சாதித்துவத்துக்கு உரம் இல்லாமையினாலேயே ஆகும்!

இலங்கை பிராமணருக்கு தமிழுணர்வு திராவிடர் கழகத்தலைவர் வீரமணியைவிட அதிகம் உண்டு! தமிழ்ப்பற்றில் கலைஞருடன் இலங்கை சைவப்பிராமணரை ஒப்பீடு செய்வதே குற்றம்!

தமிழகத்தில் பிராமணத்துவ சாதித்துவத்துக்குள்ள உரத்தை அகற்ற வேண்டும்! சங்கரமடத்து சொந்தங்களை சைவாலயங்களிலிருந்து ஒதுக்கிவைக்க வேண்டும்! ஆதிசைவ சிவாச்சாரியர்களையே சைவாலயங்களில் பணிக்கு அமர்த்த வேண்டும்! தமிழ் திருமுறைகளை கற்றவர்களாகவும் ஆகமசாத்திரங்கள் தெரிந்தவர்களாகவும் உள்ளவர்களை பரீட்சைத்தேர்வுகள் மூலம் தெரிவுசெய்து பணிக்கு அமர்த்த வேண்டும். பூணூல் இருக்கும் ஒரேகாரணத்துக்காக சைவாலயப் பூசகராக நியமிக்கும் போக்கை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்! இவையாவும் நடைபெறுமென்றால் திராவிடர் கழகத்துக்கு அரசியல் ஓட்ட விசயமில்லாமல் போய்விடும்!

குறிப்பு:- இலங்கையில் கொழும்பில் சங்கரமடத்து தரகர்கள் ஊடுருவி இலங்கையெங்கும் மெதுவாக பரவி வருகின்றனர்! சங்கரமடத்து துறவிகளின் நிழற்படங்களை அச்சடித்து கையடக்க நாள்காட்டிகளாக வழங்கிவருகின்றனர்! சிவாச்சாரியார் குருகுலப்படிப்புக்கு தற்போது சங்கரமடத்துக்கே பெருமளவில் அனுப்பப்படுகின்றனர்! என்ன கொடுமையடா இது!
சுமார்த்தசமய மடம் சைவசமய சிவாச்சாரியார்களை உருவாக்க இவ்வளவு காசு செலவழிக்கின்றது! எல்லாம் காரணம் இல்லாமலா? மெதுவாக சுமார்த்த பிராமணத்துவத்தை ஊட்டி அனுப்பிவிடத்தான்!எல்லாம் இந்துமதம் என்ற போர்வைக்குள் நடக்கின்றது! சிவசிவ!

தமிழக சைவத்தலைவர்கள்,பிரதிநிதிகள்,ஆதீனத்து முதல்வர்கள் இதுபற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவார்களா?

படங்கள் மற்றும் காணொளி newjaffna.com இணையத்திலிருந்து பெறப்பட்டவையாகும். நன்றி

Tuesday, March 22, 2011

முறைதவறிய கர்ப்பங்கள் யாழில் சொல்லும் நீதி என்ன?

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் இன்றும் ஒருசில நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தின் வடு ஆண்-பெண் சனத்தொகை விகிதாசாரத்தில் காணப்படுகின்றது. ஏனெனில் இப்போர்க்காலத்தில் இப்பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டன! இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையிலும் குறைவாகவே இன்னுமுள்ளது. எனவே; ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதும்; விரும்பிய நேரத்தில் விவகாரத்துச் செய்து கொள்வதும்; திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்று வளர்ப்பதும் பொதுவான காட்சிகளாகவுள்ளன. குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவதனூடாக இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கின்றது. இதன்மூலம் ஆண் - பெண் விகிதாசார இடைவெளியை குறைக்க முயலுகின்றது. பேரூந்து ஓட்டுநர் தொடக்கம் மருத்துவத்துறைவரைக்கும் பெண்களின் முகங்களையே எங்கும் காணமுடியும். இதுதான் இந்நாட்டில் யுத்தம் உருவாக்கிவிட்ட வடு! இத்தைய வடு இலங்கையின் வடகிழக்கை பலதாசாப்தங்களுக்கு பாதித்திருக்கும் என்பது வெளிப்படையான தொன்று!

கள்ளக் காதலால் கருகிய உயிர்,பிறந்த சிசுவை குழி தோண்டிப் புதைத்த சோகம்,கள்ளக் காதல்களால் பாழ்படும் யாழ்ப்பாணம் என்று பத்திரிக்கைகளும் இணையங்களும் தலையங்கங்கள் தீட்டுகின்றார்களே தவிர; இவை ஏன் வந்தன என்றோ -அன்றி இதன் தீர்வு என்ன என்றோ சிந்திப்பதாக தெரியவில்லை!
சுகாதாரத்துறை திருமணமாகாத கருக்கலைப்புகளும் சட்டவிரோத கருக்கலைப்புகளும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள இந்தத்தருணத்தில்; இத்தகைய கொடூரமான தலைப்புகளுடன் வெளியாகும் செய்திகள் எமது சமூகத்துக்கு ஏதோவொன்று பற்றாக்குறையாக இருப்பதை உணர்த்துகின்றது. அதுயாதென்று ஆராயமுனைந்தால் "விழிப்புணர்வு ஏற்படுத்தல்" பற்றிய சமூக அமைப்புகளின் அக்கறையின்மையே என்று புலனாகும்!

நடந்துமுடிந்துள்ள கொடும்போரில் ஆண்கள் பலர் இழக்கப்பட்டமையால்; திருமணமாகாத பெண்கள் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. திருமணமாகாத பெண்களின் அதிகரிப்பே திருமணமாகாத பெண்களின் கருக்கலைப்புகள் அதிகரிக்க ஒரே காரணம்! அதுபோல்; கணவன்மாரை போரில் இழந்து விதவைகளாக உள்ள பெண்களும் இந்த சட்டவிரோத கருக்கலைப்புகளுக்கும் ஏனைய சங்கடமான செய்திகளுக்கும் காரணமாக விளங்குகின்றனர்.

இங்கு; ஒரு விடயத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாக; நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரில் அரைவாசிக்கு மேற்பட்டோர் குடியுறுமை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டில் பெண் பார்த்து திருமணம் செய்கின்றனர். அதேபோல் வெளிநாட்டிலுள்ள ஆண்கள் இலங்கையிலுள்ள பெண்களையே சீதனம் போன்றவற்றையெல்லாம் சிலசமயம் கைவிட்டு; நாடிச்சென்று திருமணம் செய்கின்றனர். இதனால் நடுத்தர பொருளாதார வளமுடையவர்கள் பெரிதும் பாதிப்படையவில்லை என்பதை உணர வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்திலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது பொருளாதரமட்டத்தினைச் சேர்ந்த ஆண்களின் எண்ணிக்கை குறைவால்; முதிர் கன்னிகளாக பெருமளவானோர் இருக்க வேண்டிய இக்கட்டானசூழல் உருவாகியுள்ளது.

பல பெண்கள் சில ஆண்கள் என்ற சூழல் எங்கெங்கு உண்டோ அங்கங்கு முறைதவறிய உறவுகள் உருவாகத்தான் செய்யும். ஆண் - பெண் சனத்தொகை விகிதாசாரம் எங்கெங்கு பெருமளவில் வேறுபட்டு பெரிய இடைவெளிகளில் உண்டோ அத்தகைய இடங்களில் முறைதவறிய உறவுகள் ஏற்படுவது இயற்கையின் நியதி என்பதை பலரும் உணர எத்தனிக்கின்றார்களில்லை! தமிழ் பண்பாடு பாழாகிவிட்டதென்று ஓலமிடுவதுடன் இவர்கள் பணி முடிந்துவிடுகின்றது! பாலியல் சுரப்புகளாகிய ஈஸ்ரோஜினுக்கும் புரோஜோஸ்டிரோனுக்கும் தமிழும் தெரியாது! ஆங்கிலமும் தெரியாது! எந்தமொழி பந்தமும் இல்லை! அது இயற்கையின் நியதிப்படி வேலைசெய்துதானே ஆகவேண்டும்! எனவே தமிழ் பண்பாடு மரணிக்கின்றது என்று ஒப்பாரிவைப்பதில் பலன் எதுவுமில்லை.
முதிர்கன்னிகளின் பெருக்கத்துடன் போரில் கணவன்மார்களை இழந்த இளம் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவதால் இந்த பாலினச்சுரப்புக்களின் தாக்கம் பெரிதும் சமூகத்தில் வெளிப்படத்தான் செய்யும்.

சிலப்பதிகாரம்-மணிமேகலை காப்பியங்கள் அன்றைய காலத்திலும் தாசி குலம் தமிழ்க்குலத்தில் இருந்துள்ளதென்பதை சுட்டியிருக்க - விபச்சாரத்திலும் கொடுமையான ஒன்றை இந்த முதிர்கன்னிகளும் இளம் விதவைகளும் செய்வதுபோல் ஊடகங்கள் வாந்தி எடுப்பது எந்தவகையில் நீதியாகும்?

ஊடகங்களின் இத்தகைய போக்கு ஏற்கனவே மனவாட்டத்துக்குள் வாடியிருக்கின்ற இப்பெண்களுக்கு போடப்படுகின்ற "முள்வேலி" போன்றுதான் உள்ளது! பெண் விடுதலை, பெண் சுதந்திரம், பெண்ணியம் என்று பேசுபவர்கள் இந்தவிடயத்தில் ஊமைகளாகவே உள்ளமையை என்னென்று சொல்வது?

அப்படியானால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்ன?

இளம் விதவைகளுக்கு பெற்றாரோ அன்றி உற்றாரோ மறுபடி புரிந்துணர்வுடைய ஆணுக்கு அல்லது மனைவியை இழந்துள்ள ஆணுக்கு திருமணம் செய்துகொடுக்க ஊக்குவித்தல் வேண்டும்- இதுசார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்!
இந்திய-பாக்கிஷ்தான் பிரிவினையின்போது பாக்கிஷ்தானிலிருந்து பலபெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது; பாதிக்கப்பட்ட பெண்களை இளைஞர் முன்வந்து திருமணம் செய்ய வேண்டுமென்று காந்தி வேண்டியிருந்தார் என்றும் ஆனால் அவரது வேண்டுதலை யாரும் செவிமடுக்கவில்லை என்றும் படித்தநினைவுண்டு. இது பெண்களின் பிழையா? அல்லது இதற்கு ஆண் சமூகத்தின் "கற்பு" தொடர்ப்பான அடக்குமுறை உணர்வு காரணமா? இப்போது ஊடகங்களில் இதுபற்றி எழுதுபவர்களும் இத்தகைய மனோபாவத்திலிருந்துதான் எழுதுகின்றார்கள். கற்பு என்ற பதத்தை தூக்கிப்பிடித்து தமிழரின் மானம் போவதாக வருந்துகின்றார்கள்!!!!

உண்மையில் 'கற்பு' என்ற சொல்லை வைத்து இவர்கள் தமிழரின் மானம் போகின்றது என்று அழுகின்றார்களோ இல்லையோ, விதவைகளின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றி வைப்பதை தடுக்கின்ற விடயமான ஆண்களின் பார்வையிலுள்ள பெண்களிளுடன் தொடர்பான "கற்பு"க்கு அங்கிகாரம் வழங்குகின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்! இந்த உண்மையை ஊடகங்களில் எழுதும் சமூகசீர்திருத்தவாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்!

கற்பு என்பது காதலின் அறவடிவம். பள்ளிக்காதல்,பருவக்காதல்,பல்கலைக்கழக காதல்,திருமணக் காதல் என்று காதல்கள் பலமுறை மலருவதுண்டு.இதுவும் இயற்கை நியதியே! எனவே; கற்பும் அப்படி மறுபடி மலருவதற்கு என்னதடை உண்டு? காதலிக்கும் நபருக்கு நேர்மையுடன் - அறமுடன் இருத்தல் என்பதுதான் கற்புக்கு சொல்லக்கூடிய விளக்கவுரை! அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒழுக்கநெறி! அவ்வளவே! எனவே; இதுபற்றிய விழிப்புணர்வை வழங்கி; விதவைகளுக்கு திருமணம் நடைபெற வழிவகுப்பதுதான் அறிவுடமை! பெண்ணியம் பேணும் செயல்! அதைவிடுத்து; இளம் விதவைகளை வாழ்நாள் முழுக்க; விதவைகளாக இருக்கப் பணிப்பது சமூக ஒடுக்குமுறையின் ஒருவடிவம்!

முதிர்கன்னிகளின் பெருக்கத்துக்கு வறுமையும் ஒருகாரணமாக இருப்பதால் - சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையை பரப்புதல் வேண்டும். இதுசார்ந்த எண்ணிலடங்காத திரைப்படங்களுண்டு. அவற்றை தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பலமுறை தொடர்ந்து ஒளிபரப்புவது இதுபற்றிய விழிப்புணர்வுக்கு ஏதுவாக அமையும். தமிழக முச்சக்கர வண்டிகளில் திருமண வயது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை காணக்கூடியதாகவுள்ளது. அதுபோல் மறுமணம் தொடர்பானதும் சீதனம் தொடர்பானதுமான விழிப்புணர்வு வாசகங்களை எங்கெல்லாம் பேணமுடியுமோ அங்கெல்லாம் பேண வழிவகுத்தல் வேண்டும். எறும்பு ஊர ஊர கல்லும் தேயும் என்பர். "இதுவும் பலனைத் தருமா? " என்று வினா தொடுப்பதை தவிர்த்து; இவற்றின் மூலமும் பலனைப் பெற வழிசமைப்பதுதான் அறிவுடமை!

இலவச திருமணங்களை சமூக அமைப்புகள் ஒழுங்கு செய்வதுடன் அதற்கு ஊடகங்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும். கோபுரங்களை போட்டிக்கு கட்டுவைத் காட்டிலும் சைவ அமைப்புகளும், வெளிநாடுகளில் உள்ள தமிழரின் கோயில் நிர்வாகசபையினரும் இதுபற்றி உரியமுறையில் சிந்தித்தால் சமூகசீர்த்திருத்தத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்திவிடலாம்!

மக்கள் சேவை மகேசன் சேவை என்பதையே நாயன்மார்களும் கடைப்பிடித்தனர். நாவலரும் கடைப்பிடித்தார். ஆனால் சைவ நிறுவனங்கள் இதில் நாட்டமற்று இருப்பது வேதனைக்குரிய ஒன்றே! பிரித்தானியாவிலிருந்து பல்லாயிரம் பவுண்சு செலவில் பெரிய காண்டாமணி ஒன்று யாழ்ப்பாணத்து கோயிலுக்கு செய்தனுப்புவதற்கு ஏற்பாடாகியுள்ளதென்ற செய்தி பலமாதங்களுக்கு முன்னர் இணையங்களில் வலம்வந்திருந்தது. இலங்கைப் பணத்தில் பல்லாயிரம் கோடி மதிப்புடையது என்று புகழாரம் சூட்டப்பட்டிருந்தது. கடவுளுக்கு மணி செய்து கொடுக்க செலவளிக்கும் பணத்தை பயன்படுத்தி பணப்பற்றாக்குறையால் சீதனம் கொடுக்க முடியாது முதிர்கன்னிகளாகவுள்ளவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்க பயன்படுத்துவதனூடாகவும் விதவைகளாகவுள்ளவர்களை திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பெருமளவு சீதனம் வழங்குவதனூடாக விதவைகளின் மறுமணங்களை அதிகரிப்பதன் மூலமும் சமூகத்துக்கு பணிசெய்வது மகேசனுக்கு செய்யும் திருப்பணிக்கு இணையானதே! உண்மையான சைவப்பணியாகவும் அமையும்! வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்ற சுவாமி விபுலானந்தரின் வரிகள் என்றுதான் இவர்களுக்கு பொருளுணர்த்துமோ?

பெண்களுக்குரிய வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் வேண்டும். பெண்கள் சாதுவான வேலைகளுக்கே பொருத்தமானவர்கள் என்ற கருத்து ஒழிக்கப்படல் வேண்டும். பேரூந்து சாரதி என்றாலும் சரி; நடந்துனர் என்றாலும் சரி பெண்களையும் பணியில் இணைக்க வழிவகை செய்தல் வேண்டும். அதிலும் முதிர்கன்னிகளுக்கும் விதவைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். பெண்களுக்கான வேலைவாய்ப்பைக் கூட்டும்பட்சத்தில்; அவர்களுக்குரிய தனிமை விரக்தி தானாகவே நீங்க ஆரம்பிக்கும்! பெண்களின் தனிமை விரக்தியை பயன்படுத்தி அன்புமழை பொழிந்து பாலியல்பலன் பெறுவோருக்கு பெரியதொரு தடையை இதன்மூலம் உருவாக்கலாம். பூனைக்கு யார் மணிகட்டுவதென்று சிந்தித்து இருக்காது; உரியமுறையில் அரசியல்த்துறையைச் சார்ந்தோரும்;சமூக அமைப்புகளை வழிநடத்துவோரும் இதுபற்றி சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள் தொடர்பான அறிவு, ஆணுறைகளின் பாவணை சார்ந்த அறிவு, இலகுவாக- சங்டகமின்றி ஆணுறைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஆகியவற்றை ஏற்படுத்துவது தலையாய பணி! இதில் நாணுவதற்கு ஒன்றுமில்லை! போரினால் உருவான வடுக்களில் ஒன்று ஆண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்! அது பொருளாதரமட்டத்தில் கீழ்நிலையில் உள்ளோரைப் பெருமளவு பாதித்துள்ளது. பாலியற்கல்வி இவர்களிடம் சொற்பமாய்க்கூட இல்லை! எனவே பண்பாடு என்ற ஓப்பாரிகளுக்கு "பொடா-தடா' போட்டு; பாலியற்கல்வியை ஊர் ஊராக சமூக அமைப்புகளுடாக ஏற்படுத்துவதுடன் கருத்தடை மாத்திரைகளையும் ஆணுறைகளையும் இலவசமாகவேனும் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தல் வேண்டும். குறைந்தபட்சம் இவற்றின் பாவனை தொடர்பான அறிவை மக்களிடம் ஏற்படுத்தல் உடனடித்தேவையாகவுள்ளது.ஏனெனில்;
ஆணுறையை வழங்கி எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. அதை பயன்படுத்தும் முறைகளையும்;பயன்படுத்துவதில் உள்ள நுணுக்கங்களையும் விழிப்புணர்வு கூட்டங்களூடாகவும் மருந்தகங்களிலும் மருத்துவமனைகளிலும் சமூக அமைப்புகளூடாகவும் கற்பிக்கவேண்டும்.அதுவே முழுமையான பலனை ஏற்படுத்த வழிவகுக்கும்!

இளம் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்புகளுக்கும் மறைமுகமாக முதிர்கன்னிகளின் பெருக்கம் ஏதுவாக அமைகின்றதை ஏற்றே ஆகவேண்டும். முதிர்கன்னிகள் சமூகப்பிறழ்வுக்கு உள்ளாகும்போது அவர்களைப் பார்த்து இளம்பருவ பெண்கள் தவறான பாதைக்கு தூட்டப்படவாய்ப்புண்டு. அதேநேரத்தில் பருவ வயதினரின் அதிகரித்த கருக்கலைப்புகளுக்கு ஆபாசப்படங்களின் பெருக்கமும் பெருங்காரணமே! எனவே; இதை பெற்றோரும் ஆசிரியர்களும் உரியமுறையில் அவதானமாக அணுகி பருவவயதினரை நெறிப்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

இத்தகைய சமூகநடவடிக்கைகள் தமிழர் பிரதேசங்கள் எங்கும் மலருமானால் - பிறந்த சிசுவை குழிதோண்டி புதைக்கும் கொடுமைகள் தமிழர் பிரதேசங்களில் உருவாகாமல் இருக்க வழிவகுக்கும். கற்பு என்றும் பண்பாடு என்றும் ஒப்பாரி வைப்பவர்களால் சுகாதாரமான நல்வாழ்வுடைய சமூகத்துக்கு எந்தவகையிலும் ஆக்கபூர்வமான விளைவுகளில்லை! இப்போது இதுதொடர்பான உடனடித்தேவையாக தமிழர் பிரதேசங்களுக்கு இருப்பது ஆக்கபூர்வமான செயற்பாடுகளே!

வின் அ வைவ்(WIN A WIFE)/ மனைவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் அவுஸ்ரேலிய வானொலி ஊடகமொன்று முன்னைய சோவியன் ஒன்றியத்தித்தின் பகுதியான உக்ரேன் நாட்டு பெண்களை அவுஸ்ரேலியருக்கு திருமணம் செய்துவைத்தல் தொடர்பான நிகழ்ச்சியை நடத்தியமையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உக்ரைன் மகளீர் அமைப்பொன்று உக்ரைன் பெண்கள் தாசிகள் அல்ல என்று குறித்த அவுஸ்ரேலிய வானொலிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இடைக்குமேல் ஆடையின்றி அரைநிர்வாண போராட்டம் செய்தமையும் உலகமறிந்ததே! இப்படியான இழிநிலை எமது சமூகத்துக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஏற்கனவே இலங்கைக்கு அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக தொழில்நிமித்தம் வந்த வெளிநாட்டார் வடகிழக்கு தமிழ்ப் பெண்களை திருமணம் செய்து தமது நாடுகளுக்கு அழைத்துச் சென்றமையும் நடந்துள்ளது. அதேசமயம் தமது சுகங்களுக்கு தற்காலிகமாய் பயன்படுத்தியமையும் நடந்துள்ளது. எனவே கண் கெட்டபின் சூரிய வணக்கம் செய்து பயனில்லை என்பதை உணர்ந்து ஆக்கபூர்வமாக செயற்பட சமூக அமைப்புகள் முன்வரவேண்டும்! இதுதான் முறைதவறிய கர்ப்பங்கள் யாழ்ப்பாணத்தில் சொல்லும் நீதி!

திவியரஞ்சினியன்

Thursday, March 17, 2011

தமிழ்த் தியாகி விநாயகர்!


அனுராதபுரத்தில் 14ம் திகதி பிள்ளையார் கோயிலிலுள்ள பிள்ளையார் சிலையை டயர் போட்டு எரித்த கேவலமான செய்தியை அறிந்ததும் மனவருத்தம் ஏற்பட்டது!

திராவிடர் கழகத்தவருக்கு விரோதியாக இருந்த பிள்ளையார் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் விரோதியாகிவிட்டார்! பிள்ளையாரை எதிர்த்து திராவிடம் பேசி; தென்னாட்டு சிந்தாந்தத்தையும் புறக்கணித்து;தமிழர் உரிமைகளையும் துறந்து திமுகவுக்கு சாமரை வீசுவதிலேயே திகவின் காலம் கழிகின்றது!
தமிழ்நாட்டில் திகவினர் அன்று பிள்ளையார் சிலைகளை உடைத்து புரட்சி என்று புண்ணாக்கு செய்தனர்! இலங்கையில் தமிழருக்காக பிள்ளையார் எரியும் நிலைக்கு ஆளாகின்றார்! ஆக; பிள்ளையார் பாவப்பட்ட கடவுளப்பா!

வடநாட்டார் சிந்துவெளித் -தென்னாட்டுச் சிவனையும் சங்க திருமாலையும் வணங்குகின்றார்கள் தானே? அதுவும் முழுமுதற் கடவுள்களாக! பாவம் திராவிடக் கடவுளர் இவர்கள் என்ற உண்மையை அறியவில்லை போலும்!!!! திக அங்கு போய் விழிப்புணர்வு ஏற்படுத்தட்டும்!!!!

ஆக; தமிழருக்காக எரிந்த முத்துக்குமார் வரிசையில் இன்று பிள்ளையாரும் இடம்பெற்று பிள்ளையார் தமிழ்த் தியாகியாகிவிட்டார்!!!! இனி கருணாநிதிக்கு சாமரை வீசும் திகவினருக்கு பிள்ளையாரைப் பற்றி பேசுகின்ற உரிமையில்லை என்க!

இப்போது சொல்லுங்கள் தமிழ்த் தியாகி விநாயகர் என்பது சரிதானே? அதுவும் திகவைவிட தமிழருக்கு விசுவாசமாக இருந்துள்ளார் என்பதற்கு அவர்மேல் இனவாதக் காடையர் போட்டுக்கொழுத்திய டயரே தக்க சான்று!

Sunday, March 6, 2011

தமிழருவி மணியன் ஊதிய சங்கும் கருணாநிதியின் செவிட்டுக் காதும்!

விகடனில் தமிழருவி மணியன் ஐயா கருணாநிதிக்கு எழுதிய மடல் வெளிவந்துள்ளது. இதோ இதுதான் அந்த மடல்.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.

காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!

ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!

ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய இந்திரா தர்பார் , செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது என்ற மறக்கமுடியாத வசனத்தைப் பூம்புகார் திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.

தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன் (கலைஞர் கடிதம் தொகுதி 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் நண்பர் என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் பூணூல் என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே; என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. அண்ணா! அண்ணா! என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும் (கலைஞர் கடிதம் தொகுதி 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?

சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை என்று சொன்ன கலைஞரே உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள் ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?

முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை என்றும் காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும் என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).

நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். சமத்துவம் இன்மையே உனக்குப் பெயர்தான் இந்து மதமா? என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர். சுயநலமே உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா? என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் சொக்கத் தங்கத்தின் கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!

கலைஞரே கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்​மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள். இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!

எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும் (கலைஞர் கடிதம் தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது. வாண்டையார், வடபாதி மங்​கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார் என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான் என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் நானும் ஒரு கம்யூ​னிஸ்ட் என்று நகைச்சுவை ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேர​புரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்​களுக்கே இடமிருக்காது கலைஞரே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? இராமன் இரு பேச்சாளன் இல்லை என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்? என்று கேட்டார் அண்ணா அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் திருமங்கலம் ஃபார்முலா வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!

இப்படிக்கு,

ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,

தமிழருவி மணியன்

தமிழருவி மணியன் ஐயா போற்றத்தக்க தமிழர்களில் தலைசிறந்த ஒருவர். அவர் கருணாநிதிக்கு மடல் எழுதுவது அவரது பெருமைக்கு இழுக்கு என்று கருதுகிறேன். திருத்த முடியாத கழுதைகளைத் திருத்த முடியுமா என்ன? தமிழருவி மணியன் ஐயா மடல் எழுத செலவழித்த நேரத்தை வேறுவிடயங்களுக்கு செலவழித்திருக்கலாம். நேரம் பொன்னானது அல்லவா? அதுதான். செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது கருணாநிதிக்கு வரையப்பட்ட இந்த மடல்!

Saturday, March 5, 2011

தமிழரே....என்ன முடிவு எடுத்துள்ளீர்?


காவேரியில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விலகவில்லை!
ஒக்கேனக்கலில் உரிமைநிலைநாட்ட விலகவில்லை!
ஈழத்தில் இரத்த ஆறு ஓடியதற்காக விலகவில்லை!
அட; வெறும் ஆட்சிப்பங்கீட்டுப் பிரச்சினையால் விலகுகின்றார்கள் இந்த திருத்த முடியாத கழுதைகள்! தமிழா.......உன் நிலையைப் பார்த்தாயா? காவேரி,ஒக்கேனக்கல் என்று உன் உரிமைகளை நிலைநாட்ட இவர்கள் விலகவில்லை! அட சீ! முத்துக்குமார் உட்பட்ட பலர் தீயில் வெந்தபோது விலகவில்லை! மீனவர்களின் பிணங்கள் தமிழகக் கரைகளைத் தொடர்ந்து தொட்டபோதும் இவர்கள் விலகவில்லை! இலங்கையில் இரத்த ஆறு பெருகி ஓடியபோதும் இவர்கள் விலகவில்லை! அப்போதெல்லாம் வெறும் கடிதம் எழுதுவதுடன் எல்லாமே முடிந்துபோயிற்று!
தமிழா, உன் உரிமையில் இவர்களுக்கு நாட்டமில்லை! உன் உயிரிலும் இவர்களுக்கு நாட்டமில்லை!

ஒக்கேனக்கல்(அனைவரும் மறந்துவிட்டார்கள் இந்தப்பிரச்சினையை!) பிரச்சினையில் சிலகாலம் பொறுத்திருப்போம் என்று கூறி தமிழரை அமைதிசெய்து காங்கிரசுக்கு மத்திய அரசுக்கு இடைஞ்சல் ஏதுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார். சிறிதுகாலம் பெருங்காலமாகி ஆட்சியும் முடிவுக்கு வந்தாயிற்று! தமிழரே.......மீண்டும் இவர்கையில் ஆட்சியைக் கொடுத்து; இன்னும் ஏமாறாதீர்!


திமுக= திருத்த முடியாத கழுதைகள்
திக=திருந்தாத கழுதைகள்
அதிமுக=அடிச்சும் திருத்த முடியாத கழுதைகள்
திருமாவளவன் கட்சி= விலைபோன எலிகள்
காங்கிரசு = காலன் (எம் இனத்தின் எமன்)
ராமதாஸ் கட்சி= தமிழர்களுக்கு மறக்கவைக்கும் மருந்தைக் கண்டறிந்த மருத்துவர் கூட்டம்!

இதில்; இனமே அழிந்து கொண்டிருந்தபோது அழித்தவர்களுக்கு சாமரைவீசிக்கொண்டிருந்த தி.மு.கழுதைகளுக்கு இப்போது நல்லதொரு பாடம் புகட்டுங்கள்! அது ஏனைய கட்சிகளுக்கும் பாடமாக அமைய வாய்ப்பை உருவாக்கும்!
தமிழர் தலைவர் என்று பட்டங்களில் பற்றுக் கொண்ட வீரமணியர் ஏதேனும் அறிக்கைகளை விடுவார்! கவிப்பேரரசு என்ற பட்டப்பற்றுப் பேரரசு வைரமுத்து கவிதைகள் பல எழுதி தினகரனில் வெளியிடுவார்! தமிழர்களே.......மயங்கிடாதீர்!

Friday, January 14, 2011

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையில் உலக சைவ பேரவையின் இலங்கைக்கிளை வழங்கிய நிதி

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசித்த இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால்மா ஓடிக்குளோன் பேபிசெற் பம்பஸ் உட்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆரையம்பதி சுமுஆ பாடசாலை ஆரையம்பதி மகா வித்தியாலயம் தாளங்குடா விநாயகர் வித்தியாலயம் தாளங்குடா றோ.க.வித்தியாலயம் கிரான்குளம் விநாயகர் வித்தியாலயம் துறைநீலாவணை மகா வித்தியாலயம் துறைநீலாவணை பொதுக் கட்டடம் போன்றவற்றில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

அத்தோடு தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மதிய உணவுக்கும் நிதி வழங்கப்பட்டது. முகாம்களுக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம் மற்றும் பேரவையின் சமூகசேவை பகுதி குழுவினர் முகாம்களின் தேவைக்கேற்ப உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து பேரவை மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் தெரிவித்தார். மாவட்டம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கான உடனடி தேவையை நிறைவேற்ற மூன்று குழுக்கள் பேரவையின் மூன்று தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்களுக்கு பேரவையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மூவரும் பொறுப்பாளராக உள்ளனர். கல்குடா தொகுதியை சேர்ந்த பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் அத்தொகுதிக்குப் பொறுப்பாளராகவும் மட்டக்களப்பு தொகுதியைச் சேர்ந்த பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் அத்தொகுதி பொறுப்பாளராகவும் பட்டிருப்பு தொகுதியைச் சேர்ந்த ந.புவனசுந்தரம் அத்தொகுதி பொறுப்பாளராகவும் ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் தர்மபுரம் முகாம் செட்டிபாளைய பாடசாலை முகாம் களுதாவளை மகா வித்தியாலய முகாம் ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய முகாம் தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய முகாம் மாங்காடு சரஸ்வதி வித்தியாலய முகாம் போன்றவற்றுக்கு சிறுவர்களுக்கான உதவிகள் வழங்க ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக பேரவையின் பொருளாளர் திரு.ந.புவனசுந்தரம் தெரிவித்தார்.

நன்றி:- தமிழ்வின்

http://www.tamilwin.com/view.php?22uIBZ203VjQ64e2OGpDcb3N92gdd3i294bc3XpGce406Qjd02eBLIa2


குளிரும் வெள்ளமும் மரணப்பொறியாகி வாடிநிற்கும் எம்முறவுகளுக்கு உதவிடுக!!!!

குளிரினால் மரணமடையும் எம்முறவுகள்!!

வழமைக்கு மாறாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மற்றும் வாகரைப் பகுதிகளைச் சோ்ந்த ஐந்து போ் குளிரில் விறைத்து நேற்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளனர்.

அதிக குளிரினால் உடல் வெப்பநிலை குறைவடைந்ததால் அவர்கள் இறந்திருப்பதாக வாகரை உதவி அரசாங்க அதிபர் ஆர். இராஜகுலநாயகி தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு நகர வீதியில் பிச்சை எடுப்பவராவார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வெப்பநிலை சுமார் 16 பாகையளவிற்கு குறைவடைந்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த மழை ஓய்ந்த நிலையில் நிலவும் கடும் குளிர் காரணமாக ஐந்து போ் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

நேற்று வெயில் எறித்தபோதும் வயதானவர்களால்கூட தாக்குப் பிடிக்க முடியாதளவிற்கு குளிர் காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக நேற்று திருமலை வீதியில் சம்பத் வங்கிக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் முன்பாக காரைதீவைச் சோ்ந்த 53 வயதுடைய நல்லையா அமிர்தலிங்கம் உயிரிழந்துள்ளார். இவருடைய சடலத்தை மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

அத்துடன் ஜெயந்திபுரத்தில் 40 வயதுடைய ரவி என்பவர் நீரில் வழ்ந்து குளிரினால் மரணமடைந்ததுடன் ஊறணியில் வயோதிபப் பெண்ணொருவர் குளிர் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை வாகரை வம்மிவெட்டுவானிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 17 போ் உயிரிழந்துள்ளனர்


கனடாவில் உள்ளவர்கள் உதவக்கூடிய வழி

செல்வச்செழிப்பும் இயற்கைவளமும் கொண்ட கிழக்கிலங்கையில் போர்ப்பறையால் உயிர் உடமைகள் என்பன சின்னாபின்னமாகி ஓய்ந்து பின்அதிலிருந்து எழும்பும் முன்னே எஞ்சியிருந்ததும் ஆழிப்பேரலையில் மீண்டும் அமிழ்ந்துபோக குறையுயிராக தலையை நிமிர்த்த மீண்டும் ஒரு வரலாறுகாணாத பெருவெள்ளம் மீதியிருந்த உடமைகளையும் காவுகொண்டுவிட்டது.
தொடர்ந்து பெய்யும் மழையினாலும் ஆர்ப்பரித்து பொங்கியெழும் கடலும் நிரம்பி வழிந்து உடைப்பெடுத்த குளங்கள் கிராமம் கிராமமாக அடித்துச்செல்கின்றது. அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, மூதூர், திருமலை பிரதேசங்களில் அடிப்படை வசதிகளின்றி எம் உறவுகள் மீண்டும் மீண்டும் உணவின்றி, உறைவிடமின்றி அகதிகளாய் ஒதுங்க இடமுமின்றி தமது ஊரிலேயே தவிப்பது கண்டு எம் இதயம் விம்மி வெடிக்கின்றது.

ஒரு வேளையாயினும் சாப்பாடும் தண்ணீரும் கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் எம் சொந்தங்களுக்காகவும், தாயின் மடியில் பாலின்றி அலறும் மழலைக்கும் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்காகவும் கல்வியின்றி கவலையில் வாழும் இளம்சிறார்களுக்காகவும் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாமனைவரும் ஒன்றிணைந்து மனம் திறந்து உதவிக்கரம் நீட்டவேண்டியது எமது தலையாய கடமையாகும்.

இங்கு தனித்தன்மையுடன் பல நல்ல நோக்கங்களைக்கொண்டு செயல்படும் அனைத்து சமூக அமைப்புக்களும் ஒன்றாக கைகோர்த்து இந்த பாரிய அவலநிலையிலிருந்து நம் உறவுகளை மீட்டெடுத்து அவர்களது வாழ்வாதாரத்திற்கான அடிப்படைத் தேவைகளை வழங்கிட முன்வர வேண்டும் என்று உருக்கமாய் வேண்டுகின்றோம்.

இந் நிதி சேகரிப்பினை கிழக்கிலங்கையைச் சேர்ந்த பின்வரும் உறுப்பினர்களைக்கொண்ட குழுவானது அங்குள்ள நேர்மையுள்ள நீதியான அமைப்புக்களுடன் இணைந்து எமது நேரடிக் கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களைச் செய்யவுள்ளோம்.

நாம் வீடுவீடாக நிதி வசூலிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள பிரதான இடங்களில் எமது குழுவினருடன் தொண்டர்கள் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். அதற்கான பற்றுச்சீட்டு உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த வரலாற்றுக் கூட்டு முயற்சிக்கு அனைத்து ஊடகங்களும் தங்கள் நல்லாதரவை வழங்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றியுடன் உங்கள் உறவுகளுக்காகன அன்பளிப்பை மனநிறைவுடன் எதிர்பார்க்கும் நம்மவர்கள்.

Disaster Emergency Assistant Relief – Canada

அஜந்தா 905 4601667,
தங்கா 647 2615723,
பாபு 416 9982284,
ஸ்ரனி 416 7550381
மகேந்திரன் 416 9901303


நன்றி- தமிழ்வின்
இங்குபதிவு செய்யப்பட்டுள்ள இருசெய்திகளும் தமிழ்வின் இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.


Thursday, January 13, 2011

பொங்கல் பண்டிகையில் கொண்டாட்டம் வேண்டாம்! நீரில் மூழ்கித் தவிக்கும் தமிழருக்கு உதவுக!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்!
இங்கு வலி பிறந்துள்ளதே!!!
கடற்கன்னிகளின் தமிழால்
நெஞ்சைக் கொள்ளைகொள்ளும்
கிழக்கு ஈழவளநாடு
வெள்ளத்துள் மிதக்க-பொங்குவது
அழகா?
அகதிகளாய் அங்கு
மாந்தர் அலைய -இன்னிசையில்
நாம் மெய்மறப்பின்
எங்கள் உடலில்
ஓடுவது தமிழ்க்குருதியோ?

அலைபேசி தொலைபேசி
கைபேசி என்று
உலகம் சுருங்கிவிட்ட
இக்காலத்தில் மீனவன்
செத்தால் தந்தி -ஆயினும்
மந்திரிபதவி பற்றியதென்றால்
விமானத்தில் டெல்லி!
இப்படியிருக்கும் கொலைஞருக்கு
எப்படித் தெரியும்
கிழக்கு ஈழவளநாட்டில்
வெள்ளத்துள் மூழ்கியுள்ள தமிழரின் நிலை!!!

பொங்கலோ பொங்கல்
என்று சொல்லமனமுள்ளோர்
சொல்லுங்கள்!!!

வாழ்க வளமுடன்!





குறிப்பு:அங்குள்ள தமிழ்மக்களுக்கு உதவவிரும்புகின்றவர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை யை தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

தமிழ்வின் இணையத்தளத்தில் பிரசுரமாகிய இதுபற்றிய தகவல்:
////வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் இம்மக்களுக்கு இயன்றளவு நிதி, பொருள் உதவியை வழங்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.

நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் இலக்கம் 20091 மக்கள் வங்கி கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்ற பெயரில் களுவாஞ்சிக்குடி மக்கள் வங்கி கிளைக்கு அனுப்புமாறு வேண்டுகின்றார்.

இவ்வேளை பொருட்களை வழங்கவும் முடியுமென தெரிவிக்கின்றவர்கள். அவசிய தேவைக்கு 0094776034559, 0094718049439, 0094652228273, 0094652228018 ஆகிய தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். அல்லது தொலைநகல் 0094652228273 என்ற இலக்கத்திற்கும் அனுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்./////


கிழக்கு மாகாண நிலைமை! 502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள்!! வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு

http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjP20N922e4ILBcb3pG02

கிழக்கின் உறவுகளுக்கு, புலம்பெயர் உறவுகளின் உள்ளக் கதவுகள் திறக்கட்டும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள்
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjF20N922e4ILBcb3pGa2


கிழக்கில் 90வீதமான பகுதி வெள்ளத்தில்.. வடக்கில் பொங்கல் விழாவை ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் - சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார்
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI34ei29202jQWdd3Qjb20N922e4ILBcb3pGQ2

அம்பாறை மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI24ei29202jQMdd3QjR20N922e4ILBcb3pGQ2

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQCdd3Qj120D922e4ILBcb3pGY2

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு வைத்தியசாலைகள் மூடப்பட்டன