Friday, January 14, 2011

குளிரும் வெள்ளமும் மரணப்பொறியாகி வாடிநிற்கும் எம்முறவுகளுக்கு உதவிடுக!!!!

குளிரினால் மரணமடையும் எம்முறவுகள்!!

வழமைக்கு மாறாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மற்றும் வாகரைப் பகுதிகளைச் சோ்ந்த ஐந்து போ் குளிரில் விறைத்து நேற்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளனர்.

அதிக குளிரினால் உடல் வெப்பநிலை குறைவடைந்ததால் அவர்கள் இறந்திருப்பதாக வாகரை உதவி அரசாங்க அதிபர் ஆர். இராஜகுலநாயகி தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு நகர வீதியில் பிச்சை எடுப்பவராவார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வெப்பநிலை சுமார் 16 பாகையளவிற்கு குறைவடைந்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த மழை ஓய்ந்த நிலையில் நிலவும் கடும் குளிர் காரணமாக ஐந்து போ் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

நேற்று வெயில் எறித்தபோதும் வயதானவர்களால்கூட தாக்குப் பிடிக்க முடியாதளவிற்கு குளிர் காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக நேற்று திருமலை வீதியில் சம்பத் வங்கிக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் முன்பாக காரைதீவைச் சோ்ந்த 53 வயதுடைய நல்லையா அமிர்தலிங்கம் உயிரிழந்துள்ளார். இவருடைய சடலத்தை மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

அத்துடன் ஜெயந்திபுரத்தில் 40 வயதுடைய ரவி என்பவர் நீரில் வழ்ந்து குளிரினால் மரணமடைந்ததுடன் ஊறணியில் வயோதிபப் பெண்ணொருவர் குளிர் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை வாகரை வம்மிவெட்டுவானிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 17 போ் உயிரிழந்துள்ளனர்


கனடாவில் உள்ளவர்கள் உதவக்கூடிய வழி

செல்வச்செழிப்பும் இயற்கைவளமும் கொண்ட கிழக்கிலங்கையில் போர்ப்பறையால் உயிர் உடமைகள் என்பன சின்னாபின்னமாகி ஓய்ந்து பின்அதிலிருந்து எழும்பும் முன்னே எஞ்சியிருந்ததும் ஆழிப்பேரலையில் மீண்டும் அமிழ்ந்துபோக குறையுயிராக தலையை நிமிர்த்த மீண்டும் ஒரு வரலாறுகாணாத பெருவெள்ளம் மீதியிருந்த உடமைகளையும் காவுகொண்டுவிட்டது.
தொடர்ந்து பெய்யும் மழையினாலும் ஆர்ப்பரித்து பொங்கியெழும் கடலும் நிரம்பி வழிந்து உடைப்பெடுத்த குளங்கள் கிராமம் கிராமமாக அடித்துச்செல்கின்றது. அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, மூதூர், திருமலை பிரதேசங்களில் அடிப்படை வசதிகளின்றி எம் உறவுகள் மீண்டும் மீண்டும் உணவின்றி, உறைவிடமின்றி அகதிகளாய் ஒதுங்க இடமுமின்றி தமது ஊரிலேயே தவிப்பது கண்டு எம் இதயம் விம்மி வெடிக்கின்றது.

ஒரு வேளையாயினும் சாப்பாடும் தண்ணீரும் கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் எம் சொந்தங்களுக்காகவும், தாயின் மடியில் பாலின்றி அலறும் மழலைக்கும் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்காகவும் கல்வியின்றி கவலையில் வாழும் இளம்சிறார்களுக்காகவும் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாமனைவரும் ஒன்றிணைந்து மனம் திறந்து உதவிக்கரம் நீட்டவேண்டியது எமது தலையாய கடமையாகும்.

இங்கு தனித்தன்மையுடன் பல நல்ல நோக்கங்களைக்கொண்டு செயல்படும் அனைத்து சமூக அமைப்புக்களும் ஒன்றாக கைகோர்த்து இந்த பாரிய அவலநிலையிலிருந்து நம் உறவுகளை மீட்டெடுத்து அவர்களது வாழ்வாதாரத்திற்கான அடிப்படைத் தேவைகளை வழங்கிட முன்வர வேண்டும் என்று உருக்கமாய் வேண்டுகின்றோம்.

இந் நிதி சேகரிப்பினை கிழக்கிலங்கையைச் சேர்ந்த பின்வரும் உறுப்பினர்களைக்கொண்ட குழுவானது அங்குள்ள நேர்மையுள்ள நீதியான அமைப்புக்களுடன் இணைந்து எமது நேரடிக் கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களைச் செய்யவுள்ளோம்.

நாம் வீடுவீடாக நிதி வசூலிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள பிரதான இடங்களில் எமது குழுவினருடன் தொண்டர்கள் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். அதற்கான பற்றுச்சீட்டு உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த வரலாற்றுக் கூட்டு முயற்சிக்கு அனைத்து ஊடகங்களும் தங்கள் நல்லாதரவை வழங்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றியுடன் உங்கள் உறவுகளுக்காகன அன்பளிப்பை மனநிறைவுடன் எதிர்பார்க்கும் நம்மவர்கள்.

Disaster Emergency Assistant Relief – Canada

அஜந்தா 905 4601667,
தங்கா 647 2615723,
பாபு 416 9982284,
ஸ்ரனி 416 7550381
மகேந்திரன் 416 9901303


நன்றி- தமிழ்வின்
இங்குபதிவு செய்யப்பட்டுள்ள இருசெய்திகளும் தமிழ்வின் இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.


3 comments:

தமிழகத்திலிருந்து உதவிக்கு யாராவது முன்னெடுக்கிறார்களா? அயல் நாட்டில் வாழ்பவர்கள் இணையம் வழி பண உதவி செய்ய வழி உண்டா?

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)

தமிழகத்தில் இதுபற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்பதே கொடுமையான விடயமாகும்!!! கருணையில்லாத நிதியின் ஆட்சியில் இலங்கையில் தமிழ் மாகாணம் ஒன்று நீருக்குள் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றது. உலகத்தமிழ்த் தலைவர் என்ற பதவி தமிழக முதலமைச்சருக்கு உண்டு. ஆனால் அவர் கண்பார்வை இழந்து காது கேளாது போய்விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் வங்கி இலக்கத்துக்கு பண உதவிகளை செலுத்தலாம். உலகில் எங்கெனும் தமிழன் வாடினால் வாடக்கூடிய ஒரு முதலமைச்சரை தெரிவுசெய்யுங்கள்.அதுவே; பெரிய உதவியாக அமையும்.


/////இலக்கம் 20091 மக்கள் வங்கி கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்ற பெயரில் களுவாஞ்சிக்குடி மக்கள் வங்கி கிளைக்கு அனுப்பலாம்////