Sunday, November 2, 2008

இரத்மலானையில் ஓர் சைவச் சொத்து

பிள்ளையாரிடம் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று தொடங்கி சங்கத் தமிழ் மூன்றும் தா என்று வேண்டுகிறார் ஔவையார் . ஆம்; நான் கல்லூரிக்குள் நுழையும்போது கல்லூரியில் வீற்றிருக்கும் கற்பக விநாயகப் பெருமானின் திருவருளை வணங்காது உள் நுழைவதில்லை. கல்லூரிக் காலத்தில் நாள்தோறும் கற்பக விநாயகனின் நல்லருளாட்சியை நுகர்ந்த அவன் அடியார்களில் நானொருவன் என்பதில் மகிழ்வோடு கூடிய பக்தி எனக்கு.







கல்லூரியில் உயர்தரம் படிக்கும் காலகட்டங்களில் சில துர்சூழல்களால் நான் எதிர்கொண்ட துயர்களையெல்லாம் தூர ஓடச் செய்தவன் கற்பக விநாயகன். நான் தவறு விட்டபோதெல்லாம் என் காதுக்குள் வந்து சொல்வது அவன் வழமை. என்மீது பழிசுமத்தியவர்களை வெட்கித் தலைகுனிய வைக்கவும் அவன் பின்னின்றதில்லை.என் கல்லூரி வாழ்வியலோடு அவனது அருளாட்சி கமழ்வது இன்றுகூட என் அகத்தினில் அது தொடர்வது எல்லாம் எம்பெருமான் சிவன் செயல்தான்.
கற்பக விநாயகன் எங்கள் கல்லூரியில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொதுவானவன். எல்லோருக்கும் எல்லோரும் சொல்வது இந்தக் கோயிலில் சக்தியுண்டு என்ற வாசகத்தையே!


இரத்மல்லானை என்றால் இரத்-மல் என்று சிங்களத்தில் பிரித்து சிவப்பு-மலர் என பொருள் கொள்ளலாம். இராவணன் சிவப்பு மலர்களால் சிவபெருமானை வழிபட்ட இடம் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது எனபர். குறித்த இரத்மல்லானையில் கோட்டை இராச்சிய காலத்தில் சிங்கள மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயத்தினை போர்த்துக்கேயர் இடித்தழித்தபின்னர் கோயில் இல்லாக்குறையுடன் இவ்வூர் விளங்கியது. இந்திய வம்சாவளித் தமிழர் பிரசாவுரிமை சட்டத்தின் அடிப்படையில் இலங்கை பிரசைகள் அல்ல என்று இலங்கையரசால் திருப்பியனுப்பப்பட முன்னர் இங்கு இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழ்ந்தனர். எனவே இங்கு இந்துக் கல்லூரி எனும் பெயரில் சைவக் கல்லூரியை நிறுவிய தமிழ்த் தலைவர்கள் சைவப் பாராம்பரீயத்துடன் தமிழ் மாணவர்கள் படிப்பதற்கு வழிசமைத்தனர். எனினும் கோயில் இல்லாக்குறை காணப்பட்டது. குறித்த குறையை 1995களின் பின்னர் அதிபர் திரு.ந.மன்மதராஜன் அவர்களின் அயராத முயற்சியால் பல சைவத் தலைவர்கள், ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் யாவரும் ஒன்றுகூடி கற்பக விநாயகர் எனும் திருப்பெயருடன் பிள்ளையார் ஆலயம் அமைத்து அங்கு சைவ மறுமலர்ச்சிக்கு அத்திவாரம் இட்டனர்.( குறித்த சிதைவுகளுடன் கூடிய சிவாலயமும் இன்று பராமரிக்கப்படுகின்றது)

தற்போது அதிபர் திரு.ந.மன்மதராஜன் அவருடைய அரும் முயற்சியாலும் ஆசிரியர்களின் பங்களிப்பினாலும் மாணவர்களின் உதவியினாலும் குறித்த கற்பக விநாயகர் ஆலயம் பெருப்பிக்கப்பட்டு மீள்பிரதிட்டை பண்ணப்பட்டுள்ளது.











பெருப்பிக்கப்பட்டு மீள் பிரதிட்டை செய்யப்பட்டு விளங்கும் கற்பக விநாயகர் ஆலயத்தின் ஒளிப்பதிவை என் உற்றதோழன் கஜந்தன் youtubeஇல் இனைத்து எனக்கு youtubeஇன் url ஐஅனுப்பிவைத்தார்.



யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு இணங்க இங்கு அந்த youtubeஇல் உள்ள ஒளிப்பதிவை இணைத்துள்ளேன். அத்தோடு ஆலய ஆரம்பத் தோற்றத்துக்குரிய புகைப்படங்களையும் இங்கு இணைந்துள்ளேன்.



எங்கள் கல்லூரியில் எழுந்தருளி நல்லாட்சிபுரியும் கற்பக விநாயகனின் திருவருள் தங்களையும் ஆள எல்லாம் வல்ல அவனது திருவடிகளை தொழுகின்றேன்.

Thursday, October 2, 2008

தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளவேண்டிய கலை சொத்தாகும். வலைத் தளமொன்றில் தஞ்சைப் பெரிய கோவிலின் புகழ் தீட்டப்பட்டிருப்பது கண்டு அகம் குளிர்ந்தேன். நீங்களும் அகம் குளிர அவா கொண்டு இங்கு இணைந்துள்ளேன்.


பெரிய கோவில் பற்றி பிரசுரமான கட்டுரையை படிப்பதற்கு இங்கே அழுத்தவும்



Wednesday, August 20, 2008

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

ஈழத்தமிழர் வாழ்வியலை தலைப்பின் கருப்பொருளாய் கொண்டு கட்டுரை எழுத்தினால் அரசியல்வாடை அடிப்பதை தவிர்க்கமுடியாது.அதுதவிர்க்கமுடியாதது. தவிர்த்தால் பார்ப்பனீய ஊடகங்களைப்போல் என் எழுத்தும் தமிழால் சபிக்கப்பட்டுவிடும்.எனினும் அரசியல் வாடையைக்குறைக்க இந்த கட்டுரையில் விரும்புகின்றேன். எல்லாம் நல்லதற்கே!

நரகம் உண்டா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் இருக்கட்டும் ஒருபக்கம். நரகத்தைக் பார்க்கவிரும்பினால் வாருங்கள் இலங்கைக்கு. இங்கு தமிழர் நரகத்தில் வாழுகின்றனர் சொர்க்கத்தை உருவாக்கும் கனவில். உளியை எந்தி சிலர் சொர்க்கத்தை செதுக்கும் சிற்பிகளாய் நிற்கின்றனர்.
இதுதான் இலங்கையில் தமிழர் எனும் என் விளக்கம். பொருள் புரிந்தால் அப்பாடா என்று ஒரு பெருமூச்சு!

அதுசரி எங்கள் புலம்பெயர்ந்தோர்? அதுதானே என் எழுத்தின் நோக்கம் இப்போது.
ஆண்ட இனம் அடிமையாய் எங்கும். புலம்பெயர்ந்தவன் அகதி எனும் அடைமொழியில் அல்லல்படும் அவதி தனிக்கதை. தமிழன் மீது பாய்கின்ற பொருளாதார ஆயுதங்களை பொடிப்பொடியாக்க இவன் இரத்தத்தை பணமாக்கி உறவுகளுக்கு அனுப்பும் ஒருசாரார். குடும்பமாய் குடியேறி நிம்மதி தொலைத்து தென்னைமரத்தடியில் நுங்கு குடித்து நல்லூர் திருவிழாவில் பிரதிட்டை அடித்த அந்த பழைய நினைவுகளுடன் ஒருசாரார். இப்படி இப்படி பல வகைப்படுத்தலுள் ஈழத்தமிழினம் வாடுது புலம்பெயர்ந்து.
இவர்கள் சந்ததி? ஒரு மயூரன் இரண்டு மயூரன் இப்போது இருக்கிறான் அடுத்த சந்ததி எனும் அடைமொழிக்குள் தமிழ்மானத்துடன்.
கேட்கும்போது ஆனந்தமாயுள்ளது. (இதுயாரடா அந்த மயூரன் என்று என்னைக் கேட்காதீர்கள்............இறுதி உலகக்கிண்ண துடுப்பாட்டத்தை பார்த்தவர்களைக் கேளுங்கள்)

ஆனால் அதற்கடுத்த சந்ததி? எனக்கு தெரிந்ததற்கு புலம்பெயர்ந்துவாழும் அடுத்தசந்ததியை சேர்ந்தோரில் பலருக்கு தமிழ்மொழியில் எழுதத்தெரியாது.சிலருக்கு தமிழ் கதைத்தால் விளங்கும்.ஆனால் கதைக்கத்தெரியாது. அப்படியானால் எங்கே போகப்போகின்றது எங்கள் நாளைய சந்ததி?
உண்மையைச் சொன்னால் எனக்கு புலம்பெயர்நாடுகளில் தமிழ்கல்விப் கற்பித்தல் எவ்வளவுதூரம் வரவேற்கப்பட்டுள்ளதென்று தெரியாது.ஆனால் தமிழ் பயிலுவோர் சொற்பம் என்பது புரிகின்றது.

உலகில் ஒரே ஒரு இனந்தான் உள்ளது தன் இனத்தை இனப் பண்பாட்டைப்பற்றி அக்கறையற்றதாய். அது எங்கள் தமிழினந்தான். இன உணர்வாளர்கள் என்னை மன்னிக்கவேண்டும்.
ஆனால் உண்மையிதுதான். இன உணர்வாளர்கள் எனும் அடைமொழி உருவானது எதனால்? ஆயிரம்பேரில் ஒருவன் விசித்திரமானவன் விநோதமானவன் எனின் அவனுக்கு இயல்பாக அடைமொழி அவனுடைய இயல்போடு இணைந்து உருவாவது இயல்புதானே! ஐந்து நண்பர்களில் ஒருவர் சற்று பருமனாக இருந்தால் "குண்டா" என்று செல்லமாக மற்றைய நண்பர்களால் அழைக்கப்படுவதுயில்லையா? அதுபோல்த்தான் இதுவும். ஆறரைக்கோடி( இப்போது எவ்வளவு என்று தெரியாது) தமிழகத் தமிழர்களில் குறிப்பிட்ட சிலரையே இன உணர்வாளர்கள் எனும்போது எங்கள் தமிழினத்தின் தமிழ்ப்பற்றை இன்னும் சொல்வதற்கில்லை.அதிலும் சிலரின் தமிழ்வேடம் மாநிலத்திற்குள் மட்டும் தான். ரஜனிரை எதிர்க்கமட்டும்தான் தமிழ் உணர்வுவரும்.( சரத்குமாரைத்தான் சொல்லுகின்றேன்...........என்னடா புது வில்லங்கம் என்று தோன்றுதா? அவர் பெயரில் தலைப்பிட்டு புது கட்டுரையில் சந்திகின்றேன்.அதுவரை மண்டையைப்போட்டு குழப்பாமல் சிந்திக்கவும்.)

சரி......சரி........புலம்பெயர்தமிழரிடமே வருகின்றேன். தமிழ் உணர்வு உள்ளத்தோடு உறவாடவேண்டும். ஆனால் எனக்குத்தெரிந்த இரண்டு பாட்டிமார் தாம் சந்திக்கும் போது தமிழை மறந்துவிடுவது அவர்களது நோய். ஆங்கிலத்தில்தான் கதைப்பர். நான் நினைத்துக் கொள்வது ஓகோ இவர்கள் "ஸ்போக்கின் பிரக்ட்டிஸ்" பண்ணுகிறார்கள் என்று. இதே நோய்தான் புலம்பெயர்ந்த குடும்பங்களில் உள்ள பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது. "எங்கட புள்ள இங்கிலிசுல படிக்குதுல்லே" என்று நினைப்பதில் பெருமை. சரி ஆங்கிலத்தில் படிப்பது பெருமையாகவே இருக்கட்டும்.தமிழில் வீட்டிலே கதைத்தால்தான் என்ன? தமிழில் வீட்டில் கதைப்பதுமட்டும் போதாது. தமிழை படிக்கவைக்கவேண்டும். தமிழ் வரலாற்றை தெரியவைக்கவேண்டும். இலக்கணம், இலக்கியம் முறையாக படிப்பித்தல் வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்கும் உங்கள் பிள்ளைக்கு தமிழில் தேர்ச்சியிருந்தால் எத்தனை எத்தனை சேர்.பொன்.இராமநாதன்கள் உருவாக வாய்ப்புண்டு. இதுபோல் டோச்சு,பிரான்சு என்று தமிழும் பல மொழிகளில் வளருமே!

பெற்றோரே, தமிழை அறியாத பிள்ளைகள் தாய்ப்பாசத்தை உணர்வார்கள் என்று கனவு காணாதீர்கள்."மொழியபிமானம் சமய அபிமானம் இல்லாதவர் வாழ்வும் ஒரு வாழ்வா" தாமோதரம்பிள்ளையார் சாடுவது உரைத்தால் தமிழினம் மோட்சம் பெறும். அதுவரை தமிழின உணர்வாளர் எனும் அடைமொழி ஒருசிலரை அலங்கரிக்கத்தான் செய்யும். ஆனால் நான் கெஞ்சுவது அந்த அடைமொழியை வேடதாரிகளுக்கு வழங்கிவிடவேண்டாம் என்பதே.

Monday, August 18, 2008

அம்மா

அம்மா............
சைவமும் தமிழும்
தமிழ் மண்
நினைவும்
தந்தை தமையன்
தம்பி மீதுள்ள
பாசமும்
குருமாரிடம் கொண்ட
பக்தியும்
கந்த புராணம்
பெரிய புராணம்
கற்றுப் பெற்றதல்ல!
அம்மா நீ-தந்த
பாலாலே என்னுள்
வந்ததம்மா!

மறு பிறவி
நீ பெற்றால்
பத்துத் திங்கள்
ஒதுக்கிவிடு எனக்காய்-உன்
கருவறையை!
சிவ லோகம்
வைகுண்டம் சொர்கலோகம்
எதுவரினும் அது
துறந்து ஓடோடி
வந்திடுவேன் பாரிற்கு!
உன் ஓராட்டு
ஒக்க தமிழ்
மறை திரு
முறை திருமந்திரம்
ஏதேனும் வந்திடுமா?

Sunday, August 17, 2008

தமிழும் துரோகமும்

அப்படியாம் இப்படியாம்
உப்படியாம் என்று
ஆயிரம் சேதிகள்
பழந்தமிழ் நிலம்
பற்றி!

பெருமை.........!
பெருமை.........!
பெருமை.........!

வேங்கடமும் இன்றில்லை!
கதிர்காமத்தில் ஓமுக்கே
இடமில்லை!
புத்தளமும் இழந்த
மாதிரித்தான்!
சென்னை தமிங்கில
நாடாகும் புதினம்
பக்கத்தில்த் தான்னுள்ளது!
போகப் போகப் தமிழ்நிலம்
கரைந்து போகுது!

சுனாமியோ கடலரிப்போ
அல்ல!
கயவர்கள் விட்ட
விடுகின்ற தவறுகளால்!
தமிழா நீ
திருந்தவே மாட்டாயா..........? ************************************************************************************** துரோகத் தமிழா........!
உன் கொப்பனின்
குருதி தமிழின்
வம்சமா?
அன்றி உன்
கோத்தையின் முந்தாணை
தமிழிடம் இல்லையா?

தரணியில் எத்தனை
இனமுண்டு!
இந்த தமிழினம்
ஒக்க ஓரினம்
இல்லை!

பத்துப்பேரில் ஒருவன்
துரோகி!
எப்படி இந்த
மலிவு?

விபூடணன்...........
எட்டப்பன்............
காக்கைவன்னியன்..........
அப்பப்பா...........!

நேற்றும் இருந்தது
இன்றும் உண்டு
நாளையும் இருக்கும்!
மலிவோ மலிவு
பத்தில் ஒன்றென்ற
மலிவு!

தமிழ் தாயின்
கரு வறையில்
என்னதான் குறை.....?

மறவர்கள் பூக்கும்
கருவறையில் புழுக்களின்
பிறப்பு எப்படி?
ஐயகோ!
என் தாயின்
கருவறையில்
என்னதான் குறை.........?! ************************************************************************************

Friday, August 15, 2008

என் வாழ்வியலில் பெண்

கருவறை
குருதி
போசணை
தந்தவள்.................
தந்தையை காட்டியவள்
சுற்றத்தை தெரியவைத்தவள்
தமிழோடு சைவத்தை
பாலிலே ஊட்டியவள்
தாய் எனும்
பெண்!
அவள் என்
தெய்வத்திற்கு
சமன்!

செவிலித் தாயாய்
ஓவியம் தீட்டிப்பட்ட
ஆசான்கள் பல!
என்னை மகவாய்
ஏற்ற ஆசான்கள்
சில!

அக்கையராய் என்னை
ஆண்ட உறவுகள்
பல!
தம்பியராய் என்னை
ஏற்ற உறவுகள்
சில!

நட்பெனும் முகவரியில்
நான் கண்ட
பெண்கள் பல!
தோழியெனும் உறவை
ஊட்டியவை சில!
தங்கையாய் மிளிர்ந்தவை
சில!
தங்கையாய் வாழ்ந்தவை
சில!
வாழ்பவை சில!
அண்ணராய் ஏற்ற
அழகுகள் சில!

காதல்

நோக்கையில் மின்னல்
பாயும்

அகத்தில் மீட்டுகையில்
இறக்கை பூக்கும்

சின்ன சின்ன
பரிசங்களில் இதய
சுருதி தடுமாறும்

உயிர் நன்றாய்
உருகும்

வெய்யவுயிர்க்கும் நோய்
பற்றிக் கொள்ளும்

அகம் தன்
நூல்களை பரிமாறிப்
படித்திட துடிக்கும்

கூடிக் குலாவி
வாழ உள்ளம்
தூண்டும்

இது தான்
காதலின் ஓவியம்!

காதல் காமத்தின்
அழகு படுத்திய
முகம்
கல்யாணம் அதன்
அனுமதிப் பத்திரம்
நாலுபேர் நவிலக்
கேட்ட துண்டு!

எண்பதில் தம்பதிகள்
பரிமாறும் கொஞ்சு
தமிழ்.......

இஞ்சாருங்கோ இந்த
மாத்திரை...........
நீ போய்த்
தூங்கு முதல்ல.........

இதன் வடிவம்
காமமாயின் காதல்
காமமாகவே இருக்கட்டும்!

தடை

என் பேச்சுக்கு.............
என் எழுத்துக்கு..........
என் செயலாக்கத்திற்கு.............
தடைகள் பூக்களாம்!
கனவுலகில் நான்
மிதப்பதை ?

படைத்த பரமனுக்கும்
உரிமை யில்லை-கனவு
காணாதே என்று
என்னை கட்டிவைக்க!

ஆதலால் கனவுகள்
காணுவேன்................
கனவுகள் காணுவேன்..............
கனவுகள் காணுவேன்..............!!!

Thursday, August 14, 2008

தமிழ்

***********************************************************************************
அந்த சிவனின்
மகளே
என்னை யாளும்
தமிழே

தமிழகம் உன்
மாராப்பு!
ஈழம் உன்
பாவாடை!
இல்லை இருக்கு
சர்ச்சைக்கு இடமளிக்கும்
இடை-இராமன்
இட்ட பாலமோ!

***********************************************************************************

யாழ் என்று
பறைகையிலே தேன்
பாயுது நாடி
நாள மெங்கும்!

மட்டு நகர்
என்றதுமே மறம்
மெய்யில் ஊறுது!

திரு கோண
மலை சிவனருளை
என்னுள் கூட்டுது!

வன்னி என்றதுமே
தமிழ் காப்பகமாய்
மலர்ந்துள்ள நிதர்சனம்
என்னைத் தலைநிமிர
செய்யுது!

புத்தளம் என்றதுமே
தமிழ் முத்துகள்
தோன்றுது!

ஈழத்தின் வடகிழக்கு
என்றதுமே என்
அணுவெல்லாம் புல்லரிக்குது!

*************************************************************************************

Tuesday, August 12, 2008

வணக்கம்

என் நெஞ்சில் பூக்கும் பூக்களின் வாசத்தை தமிழ் பாரோடு பகிரும் உவகையில்................."பறைவேன்"

நன்றியுடன் திவியரஞ்சினியன்