Monday, September 14, 2009

பாரதிராஜா என்னும் தமிழ்மறவன் வாழ்க பல்லாண்டே!

இலங்கைத் தமிழருக்காக குரல்கொடுத்து சிறை சென்ற இயக்குனர் அமீர் தயாரித்து நடிக்கும் யோகி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சேரன் அங்கு வருகை தந்திருந்த இயக்குனர் சிங்கம் பாரதிராஜா ஐயாவை "தலை வணங்குகிறேன்" என கூறி தனது தமிழ்பற்றை அழகுபடுத்தியுள்ளார்.

மேடையில் சேரன் பேசும்போது தனது தமிழ்ப்பற்றை பறைசாற்றியதோடு இலங்கைத் தமிழருக்காக மேடை ஏறாது மௌனமாய் இருக்கும் பாரதிராஜாவின் விரதத்தையும் கௌரவப்படுத்தியுள்ளார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் பேசும்போது கூறியதாவது:-
"எங்களை போன்ற இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனரான பாரதிராஜா, இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருக்கிறார். அவர் சமீப காலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மெளனம் காத்து வருகிறார். அவருக்கு ஏன் இந்த கோபம்? அவர் திரையுலகில் சாதிக்க வில்லையா? பிறகு ஏன் இந்த கோபம்? உண்மையில் அவருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் விரதம்போல மெளனம் காத்து வருகிறார். தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது கண்டும், தமிழர்கள் ரோஷம் இல்லாமல் இருப்பதாலும் மெளனம் காக்கிறார். அவரது சாதனைகளுக்கு தலை வணங்கியது போல அவருடைய மெளனத்திற்கும் தலை வணங்குகிறேன். இலங்கையில் வாடும் இலட்சக்கணகக்கான தமிழர்கள் வாழ்வுக்காக இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும் போது பாரதிராஜாவின் மெளனம் கலையும். "
பாரதிராஜாவை திரையுலக பீஷ்மர் எனலாம்.அவரது மௌனம் வேடதாரிகளுக்கு திரையுலகில் கிடைத்த வரமாகிவிடக்கூடாது.இலங்கைத் தமிழருக்காக அவர் கொண்டுள்ள விரதம் தமிழ்த் தாய்க்கு "சான்றோன் எனக் கேட்ட தாய்" என்னும் பெருமையை கொடுக்கின்றது எனலாம்.
வாழ்க பாரதிராஜா ஐயா!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமையே பலம், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என ஏராளமான பழமொழிகள் தமிழில் உண்டு. தமிழரில் ஒற்றுமையுணர்வு குற்றியிருந்ததால் என்னவோ இத்தனை பழமொழிகள் தோன்ற வேண்டியாயிற்று.ஆனால் பலன்?
பாரதிராஜாவின் விரதத்துக்கு பலன் கிட்டுமானால் இப்பழமொழிகள் தோன்றியதற்கான பலன் ஏற்படும். எனவே;
விரைவில் அவர் விரதத்துக்கு பலனாக தமிழ்நாட்டில் தமிழ்த்தாயின் மக்கள் யாவரும் ஒன்றுபட்டு நிற்க இறைவனை வேண்டுகிறேன்.